Aadhav Arjuna: ஜெயலலிதாவின் திமுக எதிர்ப்பு.. பிரமிப்பா இருக்கு.. ஆதவ் அர்ஜூனா புகழாரம்!
ஒரு சராசரி அரசியலில் இருந்து நேரடி அரசியலுக்கு வரும்போது எங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைப் பார்க்கும்போது எப்படி ஜெயலலிதா திமுகவை எதிர்த்து 30-40 வருஷம் அரசியல் பண்ணினார் என நினைத்தாலே பிரமிப்பாக உள்ளது.

திமுகவை எதிர்த்து ஜெயலலிதா எப்படி தாக்குப்பிடித்தார் என நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கும் என தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் என 4 முனை போட்டியோடு தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறவுள்ளது. இதனிடையே ஒரு நேர்காணலில் பங்கேற்ற ஆதவ் அர்ஜூனாவிடம் அரசியல் கட்சி தலைவர்களின் படங்களைக் காட்டி கருத்து கேட்கப்பட்டது. அதில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படம் இடம்பெற்றது.
இதுதொடர்பாக பேசிய ஆதவ் அர்ஜூனா, “எனக்கு ஜெயலலிதாவை ரொம்ப பிடிக்கும். விளையாட்டுத்துறை விடுதியில் இவர் கொண்டு வந்த திட்டங்களின் கீழ் தான் படித்தேன். எப்போவாவது நேரு விளையாட்டரங்கிற்கு வருகை தருவார். நான் ஜெயலலிதாவை ஒருமுறை தான் வாழ்க்கையில் பார்த்துள்ளேன். அப்படியாக ஒருமுறை நேரு மைதானத்திற்கு வந்தபோது நான் விளையாட்டு விடுதியில் கேப்டனாக இருந்தேன். ஜெயலலிதாவைப் பார்க்க நான் வரிசையில் நின்றிருந்தேன். எல்லோரையும் பார்த்தார்.
எங்களிடம் சாப்பாடு எல்லாம் நன்றாக கிடைக்கிறதா என கேட்டார். அங்கிருந்த அதிகாரிகள் எது கேட்டாலும் ஜெயலலிதா மீதிருந்த பயத்தால் எங்களிடம் எது கேட்டாலும் நன்றாக இருக்கிறது என சொல்லுங்கள் என்று தெரிவித்திருந்தார்கள். அன்றைய காலத்தில் உணவுக்கு நாள் ஒன்றுக்கு ஒருவருக்கு ரூ.80 ஒதுக்கப்பட்டிருந்தது. என்னென்ன உணவுகள் கொடுக்கிறீர்கள் என கேட்டார்கள். நாங்கள் யாரும் எதுவும் பேசவில்லை.
இதன்பின்னர் சில நிமிடங்கள் எங்களை எல்லாம் பார்த்து அவரே நிலைமையை உணர்ந்தார். தொடர்ந்து எவ்வளவு மணி நேரம் பயிற்சி செய்கிறீர்கள் என கேட்டார். நாங்கள் காலையில் 3 மணி நேரம் மாலையில் 4 மணி நேரம் என கிட்டதட்ட 7-8 மணி இருப்போம் என சொன்னோம்.
அப்படியா என கேட்டுவிட்டு இதற்கு எப்படி இந்த உணவு முறை பத்தும் என கூறிவிட்டு சென்று விட்டார். அதிலிருந்து இரண்டாவது நாள் எங்கள் உணவுக்கான பணம் 50 சதவிகிதம் அதிகரிக்கப்பட்டது. மேலும் நாங்கள் திமுகவை எதிர்த்து நிற்கிறோம். கரூர் சம்பவம், வழக்குகள், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்வது, அனுமதி பெற முடியாமல் இருப்பது என பல பிரச்னைகளை எதிர்கொள்கிறோம். ஒரு சராசரி அரசியலில் இருந்து நேரடி அரசியலுக்கு வரும்போது எங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலைப் பார்க்கும்போது எப்படி ஜெயலலிதா திமுகவை எதிர்த்து 30-40 வருஷம் அரசியல் பண்ணினார் என நினைத்தாலே பிரமிப்பாக உள்ளது. டெல்லி அரசியலை எதிர்த்து மாநில உரிமையை விட்டுக்கொடுக்காமல் அவர் மீது என்ன குற்றச்சாட்டு சொன்னாலும் ஜெயலலிதாவின் அர்ப்பணிப்பு மகத்தானது. அண்ணாவுக்கு அப்புறம் தமிழ்நாட்டில் ஜெயலலிதா தான் பிடித்த ஆளுமை என ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.
Before You Go
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
ட்ரெண்டிங் செய்திகள்






















