Thirumavalavan: கூட்டணி கட்சிக்கு ஒத்துழைப்பு கொடுக்காத விசிக தொண்டர்கள்.. சாடிய திருமாவளவன்!
இந்த தேர்தலில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்ற சூழல் உருவானது. அந்த அடிப்படையில் தான் ஷா நவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபுவுக்கு இம்முறை வாய்ப்பு தரவில்லை என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

கூட்டணி கட்சி வேட்பாளர்கள் போட்டியிட்ட சில தொகுதிகளில் விசிக தொண்டர்கள் சரியாக பணியாற்றவில்லை என அக்கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடம்பெற்றது. திருமாவளவன் முதலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிடுவதாக தெரிவித்த நிலையில்,பின்னர் அந்த முடிவை மாற்றினார். இப்படியான நிலையில் பேஸ்புக் நேரலையில் பேசிய அவர், பல விஷயங்களுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
அதாவது, “2026 தமிழக சட்டமன்ற தேர்தலில் நமது விசிக சார்பில் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பணிக்குழு நியமிக்கப்பட்டது. தொண்டர்கள் ஒரு சில இடங்களைத் தவிர தொகுதி வாரியாக கட்டுக்கோப்பாக இருந்து சிறப்பான பணியாற்றியிருக்கிறார்கள்.நாம் போட்டியிடாத பிற தொகுதிகளில் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு விசிக தொண்டர்கள் தேர்தல் பணியாற்றியதில் ஒரு சில தொகுதிகளில் ஒற்றுமையாக இருந்து பணியாற்றவில்லை என சொல்லப்படுகிறது. இதுதொடர்பான தகவல்கள் திரட்டப்பட்டு வருகிறது.
மேலும், நான் இந்த தேர்தலில் போட்டியிடலாம் என எடுத்த முடிவு பலருக்கும் அதிர்ச்சி மற்றும் வியப்பை ஏற்படுத்தக்கூடிய நிலை உருவானது. ஏன் என பார்த்தால் எம்.பி.யாக இருக்கும் இவருக்கு 3 ஆண்டுகால பதவி இருக்கிறது. அப்படியிருக்கும்போது எம்.எல்.ஏ. தேர்தலில் போட்டியிட காரணம் என்ன என்று பலரும் தங்கள் யூகங்களை தெரிவித்தனர்.
நானும் அதற்கான காரணத்தை தெரிவித்தேன். அதாவது நான் போட்டியிடுவது பற்றி முன்கூட்டியே யாரிடமும் விவாதிக்கவில்லை. வேண்டும், வேண்டாம் என இரு கருத்துகள் என்னிடம் இருந்தது. திடீரென நான் போட்டியிடுவது என அறிவித்தேன். காட்டுமன்னார்கோயில் தொகுதி என அறிவித்ததும் அங்கு வெற்றிப் பெற்ற சிந்தனை செல்வனை செய்யூருக்கு மாற்றினேன். இதனைக் கேட்டு விசிக நிர்வாகிகள் பலரும் அதிர்ச்சியடைந்தனர். இது இயல்பானது தான்.
அதுமட்டுமல்லாமல் இந்த தேர்தலில் புதுமுகங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்ற சூழல் உருவானது. அந்த அடிப்படையில் தான் ஷா நவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி, பனையூர் பாபுவுக்கு இம்முறை வாய்ப்பு தரவில்லை. அதற்கு வெவ்வேறு காரணங்களை பலரும் சொன்னார்கள். அவை எதுவும் உண்மையில்லை. திமுக கூட்டணியில் விசிக இருப்பதற்கான முடிவையும், அதற்கான காரணங்களையும் திருமாவளவன் தெரிவிக்கிறார். அதைப் பின்பற்றி தான் விசிக எம்.எல்.ஏ.,க்கள் சட்டமன்றத்தில் பேசினார்கள். பின்னர் எப்படி அது எனக்கு முரண்பாடாக இருக்க முடியும். திமுகவுக்கு நெருக்கமாக இருக்கிறார்கள் என 3 பேருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என சொல்வது முற்றிலும் தவறானது.
விசிகவை பற்றி மட்டும் பேசுகிறார்கள். திமுக கூட்டணியை கட்டுக்கோப்பாக வைக்கும் முதன்மை காரணியாக திருமாவளவன் இருக்கிறார் என்பதை சகித்துக் கொள்ள முடியாமல் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறார்கள் எனவும் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
Before You Go
நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
ட்ரெண்டிங் செய்திகள்






















