Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
TN Assembly Delimitation Bill: மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதா தொடர்பான நிலைப்பாட்டில் ஆறே மாதங்களில், தமிழ்நாடு அரசியல் கட்சிகளின் நிலைப்பாடு தலைகீழாக மாறியுள்ளது.

TN Assembly Delimitation Bill: மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து, முதலமைச்சர் விஜய் முன்மொழிந்த தனித்தீர்மானம் பெரும்பாலானோரின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
தனி தீர்மானத்தை முன்மொழிந்த CM விஜய்:
மத்திய அரசின் தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும், மகளிருக்கான 33 சதவிகித இடஒதுக்கீட்டை தாமதமின்றி உடனே அமல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் தனித்தீர்மானத்தை முன்மொழிந்தார். அதில், ”மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுசீரமைப்புடன் பெண்களுக்கான 33 சதவிகித இடஒதுக்கீடு மசோதா இணைப்பதால், அதனை நடைமுறைபடுத்த மேலும் ஆண்டுகள் தாமதமாகலாம். எனவே பெண்களுக்கான இட ஒதுக்கீட்டை இனியும் தாமதிக்காமல் நடைமுறைப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசை கேட்டுக்கொள்கிறேன்” என வலியுறுத்தினார். தொடர்ந்து இதன் மீதான விவாதத்தில் பல்வேறு கட்சிகளின் உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
எதிர்ப்பு தெரிவித்த அரசியல் கட்சிகள்:
மத்திய அரசு தொகுதி மறுவரையறை மசோதாவை மீண்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்காத நிலையில், செவி வழி செய்திகளை கொண்டு இந்த தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டிய அவசியமே இல்லை என பாஜக முதலமைச்சரின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தது. தொகுதிகளை உயர்த்துவன் மூலம் பெண்களுக்கான பிரதிநிதித்துவம் அதிகரிக்கும் என்பதால் மாநில அரசின் தீர்மானத்தை எதிர்ப்பதாக பாமக அறிவித்தது. தொடர்ந்து பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அரசிய காரணங்களுக்காக கொண்டுவரப்பட்டு தொகுதி மறுவரையறை தொடர்பான தீர்மானத்தை எதிர்க்கிறோம், ஆனால் மகளிருக்கான 33 சதவிகித இடஒதுக்கீட்டை அமலபடுத்துவது தொடர்பான தீர்மானத்தை வரவேற்கிறோம் என அறிவித்தார்.
ஆதரவளித்த அரசியல் கட்சிகள்
முதலமைச்சர் விஜய் தலைமையிலான அனைத்து கட்சி எம்.பிக்கள் கூட்டத்தில், வெளிப்படுத்திய தொகுதி மறுவரையறைக்கு எதிரான நிலைப்பாட்டில் தொடர்வதாக இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தன. தொகுதி விகிதாச்சாரம் அடிப்படையில் தமிழ்நாடு பாதிக்கப்படாது என்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும் என தேமுதிக ஆதரவளித்தது. மாநில உரிமைகளுக்காக திமுக எப்போதும் குரல் கொடுக்கும் என எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற திமுக கூட்டணி கட்சி எம்.எல்.ஏக்களும் ஆதரவளித்தனர்.
ஆறே மாதங்களில் மாறிய நிலைப்பாடு..!
முன்னதாக கடந்த பிப்ரவரி மாதத்தில் திமுக அரசு சட்டமன்றத்தில், தொகுதி மறுவரையறை மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தது. அப்போது தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவதை ஏற்க முடியாது என கூறி, அதிமுக, காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விசிக, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, மனிதநேய மக்கள் கட்சி ஆகிய அனைத்து சட்டமன்ற கட்சிகளும் ஆதரவு அளித்து இருந்தன. பாமக வாக்கெடுப்பில் பங்கேற்காமல் வெளியேறியது. இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்காத அப்போதைய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி ஸ்ரீனிவாசன், மாநில அரசின் கவலைகள் குறித்து மத்திய அரசிடம் எடுத்துரைப்போம் என தெரிவித்தார். தொடர்ந்து மார்ச் மாதத்தில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்திலும் இதே நிலைப்பாடு உறுதி செய்யப்பட்டது. ஆனால், தற்போது பாஜக, பாமக மற்றும் அதிமுக ஆகியவை, தொகுதி மறுவரையறைக்கு எதிராக முதலமைச்சர் விஜய் கொண்டு வந்துள்ள தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
ட்ரெண்டிங் செய்திகள்






















