Thirumavalavan: தேர்தல் பரப்புரைக்கு இடையூறு.. தொண்டருக்கு விழுந்த அடி.. திருமா ஆவேசம்!
திருமாவளவனை காண சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர். அவர்கள் திருமாவளவன் பேசும்போது ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

தேனி மாவட்டத்தில் தேர்தல் பரப்புரை மேற்கொண்ட திருமாவளவன் தொண்டர் ஒருவரை அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சூடுபிடித்த தேர்தல் பரப்புரை
2026ம் ஆண்டுக்கான தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23ம் தேதி நடைபெறுகிறது. இன்னும் 2 வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில் அனைத்து அரசியல் கட்சியின் தலைவர்கள் முதல் கடைநிலை தொண்டர்கள் வரை வீதி வீதியாக சென்று வாக்கு கேட்டு வருகின்றனர். இப்படியான நிலையில் தமிழ்நாடு அரசியல் களம் இம்முறை திமுக, அதிமுக, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம், சசிகலா - டாக்டர் ராமதாஸ் கூட்டணி என 5 முனை போட்டியை எதிர்கொள்வது மிகப்பெரிய எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பெரியகுளம் (தனி) சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் திரு.பெ.சக்திவேல் அவர்களுக்கு மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான அன்பு சகோதரர் திரு.தொல். திருமாவளவன்… pic.twitter.com/P8kmlCrQeb
— O Panneerselvam (@OfficeOfOPS) April 8, 2026
பெரியகுளத்தில் திருமாவளவன் பரப்புரை
இந்த நிலையில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 8 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் தேனி மாவட்டம் பெரியகுளம் (தனி) தொகுதியும் ஒன்றாகும். அந்த தொகுதியில் விசிக சார்பில் சக்திவேல் வேட்பாளராகா அறிவிக்கப்பட்டுள்ளார். இதனிடையே சக்திவேலுக்கு ஓட்டு கேட்டு திருமாவளவன் நேற்று பெரியகுளம் வருகை தந்தார். அவருடன் சேர்ந்து தேனி வடக்கு மாவட்ட கழக செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தங்க தமிழ்ச்செல்வன், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரும் பானை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.
இந்த நிலையில் திருமாவளவனை காண சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் குடும்பம் குடும்பமாக வந்திருந்தனர். அவர்கள் திருமாவளவன் பேசும்போது ஆரவாரம் செய்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது விசிக தொண்டர்கள் சிலர் அவருடன் பரப்புரை மேற்கொண்ட காரில் ஏறி அவருடன் செல்ஃபி எடுக்க முயன்றனர். ஆரம்பத்தில் தொண்டர்களிடம் திருமாவளவன் அன்பாக சொல்லிய நிலையில் அவர்கள் கேட்கவில்லை. ஒருகட்டத்தில் தொண்டர் ஒருவர் அந்த திறந்தவெளி வாகனத்தில் ஏறியபோது அவர் கன்னத்தில் பளார் என அறைந்தார். இதனைக் கண்டு ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட சுற்றியிருந்த அனைவரும் திகைத்து போயினர்.
பின்னர் அங்கிருந்தவர்கள் அந்த தொண்டரை சமாதானம் செய்து அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் அடங்கிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பலரும் திருமாவளவன் அந்த தொண்டரை அடித்திருக்க வேண்டாம். அன்பாகவோ அல்லது பாதுகாவலர்கள் மூலமாகவோ அவரை அனுப்பியிருக்கலாம் என தெரிவித்து வருகின்றனர்.




















