![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Crime: செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல்..காவல்துறை மெத்தனம் காட்டியதா? வலுக்கும் கண்டனங்கள்..
திருப்பூர் மாவட்டம் நியூஸ் 7 செய்தியாளர் நேசபிரபு மீது அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக வெட்டியதில் ஆபத்தான நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
![Crime: செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல்..காவல்துறை மெத்தனம் காட்டியதா? வலுக்கும் கண்டனங்கள்.. thiruppur reporter nesaprabhu attacked by unidentified persons severely injured and admitted in hospital chennai press club condemns Crime: செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல்..காவல்துறை மெத்தனம் காட்டியதா? வலுக்கும் கண்டனங்கள்..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/e9efe2cfb33ce90477f24f8b1864e2b11706156723104589_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுக்கா நியூஸ் 7 செய்தியாளர் நேசபிரபு மீது அடையாளம் தெரியாத நபர்கள் சரமாரியாக வெட்டியதில் ஆபத்தான நிலையில் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
திருப்பூர் காமநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த செய்தியாளர் நேசபிரபுவை நேற்று காலை முதல் சிலர் பின் தொடர்ந்து சென்றுள்ளனர். இதில் சந்தேகம் அடைந்த பிரபு அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் தஞ்சமடைந்து, காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் காவல் துறை தரப்பில் துரித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மேலும், தன்னை யாரோ சிலர் பின் தொடர்வதாகவும், தனது தந்தையிடம் முகவரி உள்ளிட்டவை அந்த நபர்கள் கேட்டறிந்ததாகவும் காவல்துறைக்கு நேசபிரபு தகவல் தெரிவித்திருந்தார்.
பெட்ரோல் பங்கில் தஞ்சமடைந்த நேசபிரபுவை மர்ம கும்பல் திடீரென வந்து சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பிச் சென்றனர். அதில் செய்தியாளர் நேசபிரபு படுகாயம் அடைந்தார். உடனடியாக அவர் கோவையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் செய்தியாளர் நேசபிரபுவை மர்ம கும்பல் வெட்டிய சம்பவத்தை கண்டித்து சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், “திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகாவை சேர்ந்த நியூஸ் 7 தொலைக்காட்சியின் செய்தியாளராக ஏழாண்டுகளாக பணிபுரிந்து வருபவர் நேசபிரபு. இவரை நேற்று இரவு , செய்தியாளர் அவரது வீட்டில் இருந்தபோது சில மர்ம நபர்கள் நோட்டமிட்டு அவர் வெளியே வந்த நேரம் பார்த்து சரமாரியாக கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு தப்பியுள்ளனர், ஆபத்தான நிலையில் ரத்த வெள்ளத்தில் சிக்கிய செய்தியாளர் நேசபிரபுவை காமநாயக்கன்பாளையம் போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மிகக் கொடூரமாக தாக்குதலுக்குளான செய்தியாளர் சிகிச்சை பெற்று வருகின்றார்.
செய்தியாளர் மீது தாக்குதல் நடத்திய கொடூர சம்பவத்தை சென்னை பத்திரிகையாளர் மன்றம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இந்த கொடூர செயலில் சம்பந்தப்பட்ட சமுக விரோத கொலைகார கும்பலை உடனடியாக கைது செய்து கடும் நடவடிக்கை எடுக்க காவல்துறையை வலியுறுத்துகிறது. இது தொடர்பாக முழு விசாரணை நடத்தப்படவேண்டும் என்றும் சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் வலியுறுத்துகிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)