TN Politics: தமிழகத்தில் யார் ஆட்சி? - முடிவு எடுக்கப்போகும் 3 கட்சி.. பொன்னான வாய்ப்பு என்னாகும்?
தமிழ்நாட்டில் புதிதாக ஆட்சியில் அமரப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் முடிவு விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கையில் உள்ளது எதிர்பாராத ட்விஸ்ட் ஆக அமைந்துள்ளது.

தமிழக அரசியலில் மிகப்பெரிய எதிர்பாராத நிகழ்வுகள் அரங்கேறி வரும் நிலையில் புதிதாக ஆட்சியில் அமரப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் முடிவு விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கையில் உள்ளது எதிர்பாராத ட்விஸ்ட் ஆக அமைந்துள்ளது.
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட்டனர். விஜயின் தமிழக வெற்றி கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்துப் போட்டியிட்டது. இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் அபார வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது.
திமுக கூட்டணி 73 இடங்களை பெற்று இரண்டாம் இடமும், அதிமுக கூட்டணி 53 இடங்களை பெற்று மூன்றாம் இடமும் பெற்றன. இதனிடையே 118 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால் ஆட்சி அமைக்க முடியும் என்ற நிலையில் விஜய்க்கு 107 எம்எல்ஏக்கள் மட்டுமே உள்ளனர். இதனால் அவர் திமுக கூட்டணியில் இடம் பெற்ற விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் உதவியை நாடினார்.
இதில் காங்கிரஸ் கட்சி தனது 5 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை தவெகவுக்கு தெரிவித்துள்ளது. 3 கட்சிகளும் இன்னும் முடிவை தெரிவிக்காத நிலையில் இழுபறியுடன் நிலைமை இருந்து வருகிறது. இந்த நிலையில் இதுவரை அரசியலில் சிறிய கட்சிகளாக பார்க்கப்படும் குறிப்பாக இன்றைய தலைமுறையினர் பெரிதும் அறியாத விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை தங்களுடைய வலிமையைக் காட்ட தவெகவுக்கு ஆதரவு தெரிவிப்பது நல்வாய்ப்பு என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.
காரணம் தவெகவுக்கு வாக்களித்தவர்களின் பெரும்பாலானோர்கள் இளம் வயதைச் சேர்ந்தவர்கள். அப்படி இருக்கும்போது எதிர்கால அரசியலையும் தீர்மானிக்கும் சக்திகளிடம் தங்களைப் பற்றியும் அறிய வைக்க அக்கட்சிகளுக்கு ஒரு வழி கிடைத்துள்ளது. அதேபோல் இதுவரை அதிகாரத்தில் இல்லாமல் கூட்டணியின் ஒரு அங்கமாகவே மட்டுமே இருக்கும் இந்த கட்சிகள் அதில் பங்கெடுக்கும் பட்சத்தில் இன்னும் வலிமையை எதிர்காலத்தில் நிரூபிக்க முடியும்.
இப்படியான சூழல் தவெகவில் இருக்க, மறுபுறம் திமுக ஆதரவில் அதிமுக ஆட்சியமைக்கப் போவதாக ஒரு தகவல் உலா வருகிறது. அதற்கு வாய்ப்பில்லை என பலரும் நினைத்தாலும் அதுதொடர்பான பேச்சுவார்த்தை, நடவடிக்கைகள் எல்லாம் நடப்பதாக சொல்லப்படுவது தமிழ்நாடு மக்களிடையே குழப்பத்தை உண்டாக்கியுள்ளது. திமுக எதிர்க்கட்சியாகவே இருக்க முடிவு செய்துள்ள நிலையில் தவெகவை ஆட்சியமைக்க விடாமல் தடுக்கவும் வழிவகை செய்து வருவதாக கூறப்படுகிறது.
அதன் நீட்சி தான் அதிமுகவுக்கு ஆதரவு கொடுக்கப்போவதாக வெளியான தகவலாகவும் உள்ளது. இவை இதுவரை உறுதிப்படுத்தப்படுவதில்லை. ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் அதிமுக ஆட்சியில் அமர திமுக மட்டும் ஆதரவு கொடுத்தால் போதாது. மேலே சொன்ன விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை இருக்க வேண்டும் என்பது விதியாக அமைந்துள்ளது.
காரணம் திமுக 59, அதிமுக 47 தொகுதிகளில் ஜெயிக்க 106 எண்ணிக்கையாக உள்ளது. இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி 2 இடங்களில் வென்ற நிலையில் அக்கட்சி ஆதரவு தெரிவிக்கும். மீதமுள்ள பாமக 4, விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை தலா 2, தேமுதிக 1, அமமுக 1 என இருக்கிறது. இதில் விசிகவும், பாமகவும் ஒரே கூட்டணியில் இருப்பதை விரும்பாது. அமமுகவும் கண்டிப்பாக அந்த கூட்டணி முடிவுக்கு ஆதரவளிக்காது. அப்படி இருக்கும்போது மீதமுள்ள 10 இடங்களுக்கு அவர்களுக்கு 7 இடங்களுக்கு மட்டுமே ஆதரவு கிடைக்கும். அப்படி பார்த்தால் திமுக - அதிமுக கூட்டணி அமைத்தாலும் அவர்களின் ஆதரவும் 115 ஆக மட்டுமே இருக்கும்.
இதனால் கள நிலவரத்தில் விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய 3 கட்சிகள் கிங் மேக்கராக மாறியுள்ளது. அவர்கள் தங்கள் பலத்தை எந்த கட்சிக்கு காட்டப்போகிறார்கள் என்பது ஓரிரு நாளில் தெரிய வரும்.
ட்ரெண்டிங் செய்திகள்






















