![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
BJP Manifesto: "எங்கள் காதுகள் பாவமில்லையா" பாஜக தேர்தல் அறிக்கை குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம்!
BJP Manifesto: ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் காதிலும் பாஜக அரசு பூச்சுற்ற நினைப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
![BJP Manifesto: Tamil Nadu CM MK Stalin takes dig at BJP election manifesto says it is a Unfair lie BJP Manifesto:](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/14/a7fdc5a8f87403858447c0bcab7bbc931713083567167729_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியாகியுள்ள நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அதை கடுமையாக சாடியுள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு இன்னும் 4 நாள்களே உள்ள நிலையில், சட்டமேதை அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு தேர்தல் வாக்குறுதிகளை பாஜக இன்று வெளியிட்டுள்ளது.
ஒரே நாடு ஒரே தேர்தல் தொடங்கி பொது சிவில் சட்டம் வரை பல முக்கிய அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டை குறிவைக்கும் விதமாக உலகம் முழுவதும் திருவள்ளுவர் பண்பாட்டு மையங்கள் நிறுவப்படும் என அறிவித்துள்ளது.
"அப்பட்டமான பொய்க்கணக்கு காட்டும் மோடி"
இந்த நிலையில், பாஜக தேர்தல் அறிக்கையை கடுமையாக சாடிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ் மக்கள் காதில் பூச்சுற்ற நினைப்பதாக விமர்சித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த பத்தாண்டுகளில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக 10.76 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக்கொடுத்ததாம் மத்திய பா.ஜ.க. அரசு. இது அப்பட்டமான பொய்க்கணக்கு! இதில் இரண்டு கூறுகள் உள்ளன:
1) ஒன்றிய அரசு மாநில அரசுக்கு நேரடியாக வழங்கும் நிதி. மத்திய நிதிக் குழுவின் பரிந்துரையின்படி, மத்திய அரசு மாநில அரசுகளுக்கு அளிக்க வேண்டிய நிதிப் பகிர்வையும், திட்டங்களுக்காக மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதியையும் உள்ளடக்கியது இது.
இதன்கீழ் உத்தரப்பிரதேசத்துக்கு 18.5 லட்சம் கோடி ரூபாயை அள்ளிக் கொடுத்த பாஜக அரசு, பல லட்சம் கோடி ரூபாயை வரியாகப் பெற்ற தமிழ்நாட்டுக்கு கிள்ளிக் கொடுத்ததோ 5.5 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே!
2) மத்திய அரசு ஒரு மாநிலத்தில் நேரடியாக செயல்படுத்தக்கூடிய திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு. இதில் பாஜக காட்டியுள்ள பொய்க்கணக்குகள் என்னென்ன தெரியுமா?
"தமிழ் மக்கள் காதிலும் பூச்சுற்ற நினைக்கிறது"
இன்னும் ஒற்றைச் செங்கல் கூட எடுத்து வைக்கப்படாத மதுரை எய்ம்ஸ்க்கு 1,960 கோடி, ஒரு ரூபாய் கூட நிதி விடுவிக்கப்படாத சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்டப் பணிகளுக்கு 63,246 கோடி, சாகர்மாலா திட்டத்திற்கு 2 லட்சம் கோடி என்று, ஒட்டுமொத்தத் தமிழ் மக்கள் காதிலும் பூச்சுற்ற நினைக்கிறது பாஜக அரசு.
இந்தத் திட்டங்களின்கீழ் கடந்த பத்து ஆண்டுகளில் தமிழ்நாட்டில் செலவழிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு, விடுவிக்கப்பட்டுள்ள நிதி எவ்வளவு என்பதை எந்த பாஜக அமைச்சர்களாவது விளக்க முன்வருவார்களா? இவற்றுக்கெல்லாம் மகுடம் வைத்தாற்போல் எடுத்து விடப்பட்டுள்ள அநியாயப் பொய் அடுத்தது!
தம் உழைப்பாலும் தொழில் திறத்தாலும் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு வித்திட்டுள்ள தமிழ்நாட்டின் சிறுதொழில் முனைவோர்கள் வங்கிகளில் வாங்கி, திருப்பிச் செலுத்த வேண்டிய 2.5 லட்சம் கோடி ரூபாய் கடன்கள் அனைத்தையும் தாராளமாக நிதி வழங்கியது போல கூறிக்கொள்கிறது மத்திய பாஜக அரசு. எத்தனை பொய்களைத்தான் நாடு தாங்கும்? எங்கள் காதுகள் பாவமில்லையா!" என குறிப்பிட்டுள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)