MK Stalin: ராக்கெட் வேகத்தில் ஏறும் தங்கம் விலை... விருது விழாவில் முதலமைச்சர் பேச்சு
தங்கம் விலை ராக்கெட் வேகத்தில் ஏறிக்கொண்டே இருக்கிறது என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னையில் இன்று கலைமாமணி விருது வழங்கப்பட்டது. கலைமாமணி விருது வென்றவர்களை வாழ்த்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,
கலைமாமணி விருது:
1967ம் ஆண்டு அறிஞர் அண்ணா கையால் கலைஞர் ( கருணாநிதி) பெற்ற கலைமாமணி விருதை இன்று நீங்களும் பெற்றுள்ளீர்கள். 2021, 22, 23 ஆகிய 3 ஆண்டுகளுக்கும் சேர்த்து பல்வேறு கலைப்பிரிவுகளில் விருதுகளை வழங்குவதில் நானும் பெருமை அடைகிறேன்.
இயல், இசை, நாடகம், திரைப்படம், சின்னத்திரை, கிராமியம், நாட்டுப்புற கலைகள். இதர கலைப்பிரிவுகள் கலைத்துறையின் எந்த பிரிவும் விடுபடக்கூடாது என்ற கவனத்தில் இந்த விருதுகளை வழங்கும் இயல், இசை, நாடக மன்றத்திற்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.
சரியானவர்களுக்கு விருது:
விருது பெற்றிருக்கும் பெரும்பாலோனார் எனக்கு நன்றாக அறிமுகமானவர்கள். பலரின் கலைத்தொண்டு பற்றி எனக்குத் தெரியும். மூத்த கலைகளுக்கு மட்டுமில்லாமல் வளர்ந்து வரும் இளம் கலைஞர்களையும் அடையாளம் கண்டு மிகச்சரியானவர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
90 வயதான முத்துக்கண்ணம்மாவும் விருது பெறுகிறார்கள். இளம் இசையமைப்பாளர் அனிருத்தும் விருது பெறுகிறார்கள். கலைமாமணி விருது பெறும் கலைஞர்களுக்கு தங்கப்பதக்கமும், விருது பட்டயமும் வழங்கப்பட்டுள்ளது.
ராக்கெட் வேகத்தில் தங்கம் விலை:
இன்று நாட்டில் தங்கத்தின் விலை என்னவென்று உங்களுக்கேத் தெரியும். ராக்கெட் வேகத்தில் ஒரு நாளைக்கு 2 முறை ஏறிக்கொண்டே போகுது. இந்த விருது அறிவித்த அன்று தங்கத்தின் விலையும், இன்று இருந்த தங்கத்தின் விலையும் ஒப்பிட்டுப் பார்த்தாலே தெரியும். ஆனால், அவ்வளவு மதிப்புமிக்க வகையில் இந்த விருது அமைந்துள்ளது.
தங்கத்தை காட்டிலும் கலைமாமணிக்குத்தான் மதிப்பு அதிகம். ஏனென்றால் இது தமிழ்நாடு தந்த பட்டம். தொன்மையான கலைகளை வளர்த்தல், அந்த கலைகளை ஊக்குவித்தல், அழிந்து வரும் கலைகளை ஆவணமாக்குதல், நாடகம், நாட்டிய நாடகங்களுக்கு புத்துயிர் அளித்தல், நம் பாரம்பரிய கலைகளை வெளிமாநிலங்களுக்கும், உலகளவிலும் எடுத்துச் செல்லுதல்.
தமிழ் கலைகள் வளர்ச்சிக்கு அளப்பரிய பங்கை செய்யும் கலைஞர்களுக்கு விருதுகள் வழங்குதல், நலிந்த நிலையில் உள்ள கலைஞர்களுக்கு மாதாந்திர பணிகளை வழங்குதல் ஆகியவற்றை தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றம் சிறப்பாக செய்து வருவதன் அடையாளம்தான் இந்த விழா.
இவ்வாறு அவர் பேசினார்.
2021, 2022 மற்றும் 2023 ஆகிய 3 ஆண்டுகளுக்கான கலைமாமணி விருது வழங்கப்பட்டது. பிரபல இசையமைப்பாளர் அனிருத், இயக்குனர் - நடிகர் எஸ்.ஜே.சூர்யா, நடிகர் விக்ரம்பிரபு என பலருக்கும் இந்த விருது வழங்கப்பட்டது.
தமிழ்நாட்டில் தங்கம் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது தங்கம் ஒரு சவரனுக்கு அனைத்து வரிகளுடனும் பொதுமக்கள் 1 லட்சத்திற்கும் அதிகமான விலை கொடுத்து வாங்கி வருகின்றனர்.
இந்த மோசமான நிலையை குறிப்பிடும் வகையிலே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தங்கத்தின் விலை குறித்து பேசினார். தங்கத்தின் விலையை கட்டுக்குள் கொண்டு வர மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு தொடர்ந்து பல தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.





















