Tsunami Chennai : அடுத்த சுனாமி வந்தால் சென்னை தாங்குமா? ஆய்வாளர்கள் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்..
கடந்த 2004ம் ஆண்டு சுனாமி தாக்கிய நிலையில், மீண்டும் அதுபோல் ஒரு சுனாமி ஏற்பட்டால் சென்னையில் சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு கடல் நீர் ஊருக்குள் புகுந்துவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2004ம் ஆண்டு சுனாமி தாக்கிய நிலையில், மீண்டும் அதுபோல் ஒரு சுனாமி ஏற்பட்டால் சென்னையில் சுமார் 2 கி.மீ. தூரத்திற்கு கடல் நீர் ஊருக்குள் புகுந்துவிடும் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆழ்கடலில் உள்ள நிலப்பரப்பில் ஏற்படும் பூகம்பம் காரணமாக சுனாமி உருவாவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர். தொடக்கத்தில் ஜப்பான், இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளில் சுனாமி பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய நிலையில் 2004ம் ஆண்டு தமிழ்நாட்டையும் இந்த சுனாமி கடுமையாக பாதித்திருக்கிறது.
ஒவ்வொரு ஆண்டும் சுனாமியில் தங்கள் உறவினர்களை இழந்த ஆயிரக்கணக்கானோர் டிசம்பர் 26ம் தேதி கடலில் பாலை ஊற்றி மரியாதை செலுத்துவர். இந்த 18 ஆண்டுகளில் வளர்ந்து வந்த கண்டுபிடிப்புகளை கொண்டு இனி சுனாமி வருவதை எப்படி முன்கூட்டியே கணிப்பது என்பது குறித்து பல்வேறு ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் சென்னையில் உள்ள தேசிய கடலோர ஆராய்ச்சி மையம் மற்றும் ஐதராபாத்தில் உள்ள இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் ஆகியவை ஆய்வு செய்து வெளியிட்டுள்ள தகவலில், கடற்கரையின் அடியில் அமைந்துள்ள நிலப்பரப்பு சாய்வாக இருந்தால் அதனை ஒட்டியுள்ள கரை பகுதியில் பாதிப்பு அதிகமாக இருக்கும். கடல் பரப்பு மேடாக இருந்தால் பாதிப்பு குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி மீண்டும் சுனாமி ஏற்படும் பட்சத்தில் சென்னையில் சுமார் 2 கி.மீ. தொலைவுக்கு கடல் நீர் ஊருக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மட்டுமல்லாது பிற பகுதிகளிலும் கடல்நீர் ஊருக்குள் புகும் வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பகுதிகளில் சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு கடல் நீர் உள்புகலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. நெமிலியில் இருந்து கடலூர் வரையிலான பகுதிகளும் பாதிப்புக்குள்ளாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரம் கல்பாக்கம் பெரிய குப்பம் உள்ளிட்ட இடங்களில் 4 மீட்டர் வரையில் தண்ணீர் உட்புக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சென்னையில் ராயபுரம், கடற்கரை ரயில் நிலையம், திருவல்லிக்கேணி, கலங்கரை விளக்கம், சாந்தோம் ஆகிய பகுதிகளிலும், நேப்பியர் பாலம், அடையாறு பாலம் ஆகியவற்றை சுற்றி உள்ள பகுதிகளிலும் கடல்நீர் உள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் ஆய்வில் கூறப்பட்டு உள்ளது.
இதே கடற்பரப்பை விட கூடுதல் உயரம் கொண்ட இடங்களில் பாதிப்பு குறைவாகதான் இருக்கும் என்றும் கூறியுள்ளனர். பொதுவாக சுனாமி உருவாவதற்கு முன்னர் கடல் நீர் உள்வாங்கும். இதுதான் மக்கள் அலர்ட் ஆக வேண்டிய நேரம். எனவே இவ்வாறு கடல் நீர் உள்வாங்கும்போது முடிந்த அளவு கடலை விட்டு நாம் நீண்ட தூரம் சென்றுவிட வேண்டும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
சுனாமி தாக்குதலை பொறுத்தவரையில் 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை தான் அது ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டு இருக்கிறது. எனவே மீண்டும் உடனடியாக ஒரு சுனாமி வருவதற்கு வாய்ப்பு இல்லை என்கிற ஆறுதல் செய்தியையும் ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கிறார்கள்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
and tablets