புதுச்சேரி அரசின் மெகா சலுகை: இனி அரசு அனுமதிக்காக அலைய வேண்டாம்... நினைத்த உடனே தொழில் தொடங்கலாம்!
சுய சான்றிதழ் கொடுத்துவிட்டு உடனடியாகத் தொழில் தொடங்கலாம் என்பது தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ள முழு சுதந்திரம் என்று நினைத்துவிடக் கூடாது ! இதில் அவர்களுக்குப் பெரும் பொறுப்பும் உள்ளது

புதுச்சேரி: புதுச்சேரி மாநிலத்தில் தொழில் தொடங்குவதை எளிதாக்கவும், பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தவும் அரசு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அதிரடி முடிவை எடுத்துள்ளது. குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSME) தொழில் தொடங்குவதற்கு பல்வேறு அரசுத் துறைகளிடம் இருந்து பெற வேண்டிய ஆரம்பகட்ட அனுமதி மற்றும் ஒப்புதல்களில் இருந்து முழுமையாக விலக்கு அளித்து புதுச்சேரி அரசு புதிய வழிகாட்டுதல் விதிமுறைகளுடன் அரசாணை வெளியிட்டுள்ளது.
3 ஆண்டுகள் வரை விலக்கு:
புதுச்சேரி மாநிலத்தின் தொழில் வளர்ச்சி மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் பங்கு மிக முக்கியமானது. ஆனால், தொழில் தொடங்க நினைக்கும் புதிய முதலீட்டாளர்களும், இளைஞர்களும் நீண்டகால நிர்வாகச் சிக்கல்களையும், தாமதங்களையும் எதிர்கொண்டு வந்தனர். இந்தச் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதன்படி, இனி சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அரசு அலுவலகங்களுக்கு அலைந்து அனுமதி பெறும் வரை காத்திருக்கத் தேவையில்லை. அவர்கள் நேரடியாக தங்களது தொழிலைத் தொடங்கிவிட்டு, அடுத்த 3 ஆண்டுகளுக்குள் (மூன்றாண்டுகளுக்குள்) சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து உரிய அனுமதிகளைப் பெற்றுக் கொண்டால் போதுமானது.
புதிய நடைமுறை என்ன?
முன்பெல்லாம் ஒரு தொழிலைத் தொடங்க வேண்டும் என்றால், பல்வேறு அரசுத் துறைகளின் வாசல்களில் ஏறி இறங்கி, மாதக்கணக்கில் காத்திருந்து அனுமதி பெற்ற பின்னரே பணிகளைத் தொடங்க முடியும். ஆனால், தற்போது கொண்டு வரப்பட்டுள்ள எளிமைப்படுத்தப்பட்ட புதிய நடைமுறையின்படி:
தொழில் தொடங்க விரும்பும் முனைவோர், தங்களின் தொழில் விவரங்களை 'படிவம்-I'-ல் (Form-I) பூர்த்தி செய்து, சுய சான்றொப்பமிட்டு (Self-Declaration) ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் முழு விவரங்கள், தொடங்கப்படும் நிறுவனத்தின் வகை, முதலீட்டு விவரங்கள் மற்றும் உற்பத்தி அல்லது சேவை சார்ந்த தகவல்களைத் துல்லியமாகக் குறிப்பிட வேண்டும். இதனையடுத்து, 'அக்னாலேஜ்மென்ட் சர்டிபிகேட்' எனப்படும் பரிந்துரைப்புச் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
சரியான விவரங்களுடன் விண்ணப்பித்த உடனே, 'புதுச்சேரி தொழில் வழிகாட்டல் பணியகம்' படிவம்-II-ல் (Form-II) உடனடியாக அனுமதிச் சான்றிதழை வழங்கிவிடும். இந்த உடனடிச் சான்றிதழானது ஒரு சட்டப்பூர்வமான அனுமதியாகக் கருதப்படும். இதனால், குறிப்பிட்ட காலத்திற்குப் பல்வேறு அரசுத் துறையினர் நேரில் வந்து நடத்தும் ஆய்வுகளில் (Inspections) இருந்தும் விலக்கு அளிக்கப்படும்.
சிவப்பு, ஆரஞ்சு நிறுவனங்களுக்கு அனுமதியில்லை (விதிவிலக்குகள்):
அரசு இந்த அதிரடி சலுகையை வழங்கியிருந்தாலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் எவ்வித சமரசமும் செய்யப்படவில்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தால் அதிக மாசு ஏற்படுத்தும் நிறுவனங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ள 'சிவப்பு' (Red) மற்றும் 'ஆரஞ்சு' (Orange) பிரிவைச் சேர்ந்த தொழில்களுக்கு இந்த விதிவிலக்கு எக்காரணம் கொண்டும் பொருந்தாது. இந்த வகையான தொழில்களைத் தொடங்க விரும்புவோர், தற்போதைய பழைய நடைமுறைப்படியே அனைத்து அரசுத் துறைகளின் அனுமதியையும் முன்கூட்டியே பெற வேண்டும்.
வழிகாட்டல் பணியகத்தின் முக்கியப் பங்கு:
இந்த புதிய விதிகளைச் செயல்படுத்துவதில் 'புதுச்சேரி தொழில் வழிகாட்டல் பணியகம்' மிக முக்கிய அங்கமாகச் செயல்பட உள்ளது. ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களைப் பெறுவது, மின்னணு முறையில் (Digital) உடனுக்குடன் சான்றிதழ்களை வழங்குவது, தொழில்முனைவோரின் குறைகளைத் தீர்ப்பது எனப் பல பணிகளை இது மேற்கொள்ளும். மேலும், அரசுத் துறைகளுக்கும் தொழில் நிறுவனங்களுக்கும் இடையே ஒரு பாலமாக இருந்து, ஏதேனும் முரண்பாடுகள் அல்லது சிக்கல்கள் எழுந்தால் தொழில் மற்றும் வணிக இயக்குநரின் வழிகாட்டுதலோடு அதனைத் தீர்த்து வைக்கும்.
சுதந்திரம் மட்டுமல்ல; பொறுப்பும் இருக்கு!
இந்த புதிய அரசாணை குறித்து தொழில் துறை அதிகாரிகள் கூறுகையில், "சுய சான்றிதழ் கொடுத்துவிட்டு உடனடியாகத் தொழில் தொடங்கலாம் என்பது தொழில்முனைவோருக்கு வழங்கப்பட்டுள்ள முழு சுதந்திரம் என்று நினைத்துவிடக் கூடாது, இதில் அவர்களுக்குப் பெரும் பொறுப்பும் உள்ளது.
தொழில் தொடங்குபவர்கள் தொழிலாளர் நலச் சட்டங்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகள் மற்றும் தீயணைப்பு பாதுகாப்புத் தரங்களைச் சரியாகப் பின்பற்றி உறுதி செய்ய வேண்டும். விண்ணப்பத்தில் சமர்ப்பிக்கப்படும் அனைத்துத் தகவல்களும் 100% உண்மையானவையாக இருக்க வேண்டும். தவறான தகவல்களை அளித்தாலோ அல்லது உண்மைகளை மறைத்தாலோ அவர்களுக்கு வழங்கப்பட்ட சான்றிதழ் உடனடியாக ரத்து செய்யப்படும். அவ்வாறு ரத்து செய்வதற்கு முன்பாக, தங்களை நியாயப்படுத்திக் கொள்ள விண்ணப்பதாரருக்கு 15 நாட்கள் அவகாசம் வழங்கி விளக்கம் கேட்கப்படும்" என்று எச்சரித்துள்ளனர்.
தொழில்துறையினர் வரவேற்பு:
புதுச்சேரி அரசின் இந்த அதிரடி மாற்றங்கள் மாநிலத்தின் ஒட்டுமொத்த தொழில் சூழலையும் மாற்றி அமைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது வெளிமாநில மற்றும் உள்ளூர் சிறு, குறு முதலீட்டாளர்களைப் பெருமளவில் ஈர்க்கும் என்றும், எதிர்காலத்தில் புதுச்சேரியைப் பெரியதொரு தொழில் மையமாக (Industrial Hub) மாற்ற இந்த எளிமையான நடைமுறை வழிவகுக்கும் என்றும் தொழில்துறையினர் தங்களது மகிழ்ச்சியையும் வரவேற்பையும் தெரிவித்துள்ளனர்.
Before You Go
12 year girl death|சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை!சாக்கு மூட்டையில் சடலம்!கொடூரனை அடித்தே கொன்ற மக்கள்
ட்ரெண்டிங் செய்திகள்






















