சேட்டை பிடிச்ச பையன் சார்...போலீசுக்கு போன் போட்டு பானி பூரி கேட்ட சிறுவன்
இரண்டு நாட்களில் மட்டும் 8 க்கும் மேற்பட்ட முறை எங்களுக்கு போன் செய்திருக்கிறான். இதுபோன்ற தொந்தரவு இனி நடந்தால் உங்கள் மீது தான் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.

புதுச்சேரி: புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு, பானி பூரி, சாக்லேட் கேட்டு தொந்தரவு செய்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினரை போலீசார் எச்சரித்தனர்.
சைபர் கிரைம் காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு, பானி பூரி, சாக்லேட் கேட்டு தொந்தரவு செய்த சிறுவன்
புதுச்சேரி சைபர் கிரைம் காவல் நிலையத்தின் இலவச தொலைபேசி எண் 1930ஐ, இரண்டு நாட்களாக தொடர்பு கொண்ட ஒருவர், பானி பூரி, சாக்லேட் வேண்டுமென தொந்தரவு கொடுத்து வந்துள்ளார். போலீசார், நேற்று அந்த தொடர்பு எண்ணை வைத்து அவரது வீட்டை கண்டுபிடித்து, அங்கு சென்று விசாரித்தனர். அதில், போன் செய்து பானிபூரி, சாக்லேட் கேட்டது 7 வயது சிறுவன் என்பதும், பள்ளி விடுமுறையால் தமிழகத்தின், சிவகங்கை மாவட்டத்தில் இருந்து புதுச்சேரியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்துள்ளதும் தெரியவந்தது.
எப்படி உனக்கு 1930 என்ற எண் தெரியும்?
போலீசார், அச்சிறுவனிடம் 'எப்படி உனக்கு 1930 என்ற எண் தெரியும்' என, கேட்டனர். சிறுவன், ஊரில் உள்ள தன் தாய்க்கு போன் செய்த போது, 'அவசர உதவிக்கு 1930 என்ற எண்ணிற்கு அழையுங்கள்' என, காலர் டியூனில் வந்ததாகவும், அதனால் எனக்கு சாக்லேட், பானிபூரி வாங்கித் தந்து உதவ போன் செய்து அழைத்ததாகவும் தெரிவித்தான்.
கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்
அதிர்ச்சியடைந்த போலீசார், சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினரிடம் சிறுவனை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். இரண்டு நாட்களில் மட்டும் 8 க்கும் மேற்பட்ட முறை எங்களுக்கு போன் செய்திருக்கிறான். இது போன்ற தொந்தரவு இனி நடந்தால் உங்கள் மீது தான் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து அனுப்பினர்.





















