Annamalai: ஆடு, மாடுகளோட நிம்மதியா இருக்குறேன்.. பதவி போன பிறகு அண்ணாமலை உற்சாகம்
தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை தான் ஆடுகள், மாடுகளோட நிம்மதியா வாழ்வதாக திருவண்ணாமலையி்ல் பேட்டி அளித்தார்.

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் தமிழக பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் அண்ணாமலை சாமி தரிசனம் செய்தார். பின்னர், அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியதாவது,
ஆடு, மாடோட நிம்மதியா இருக்கேன்:
நான் நல்லா இருக்கேன். ஆடு, மாடுகளோட இருக்கேன். விவசாயம் பாக்குறேன். இந்த மாதிரி நேரம் கிடைச்சா கோயிலுக்கு வர்றேன். ரமணாஷிரத்துக்கு தியானம் பண்ண வர்றேன். இந்தியா முழுவதும் உலகம் முழுவதும் சுற்றுவதற்கு ஒரு வாய்ப்பு.
கட்சி சொல்ற பணிகளை அங்கங்க செய்றேன். எனக்கு இந்த தலைவர் பதவியின் சுமை, இங்க போகனும், அங்க போகனுங்குறதை எல்லாம் தவிர்த்து வாழ்க்கையில நிம்மதியா இருக்கிறேன். வீட்டுக்கு வெளியில மோர் வைத்து வெயில்ல யாரு மக்கள் போராங்க, தினமும் 2 ஆயிரம், 3 ஆயிரம் பேர் மோர் குடிக்கிறாங்க. அதுவே பெரிய பாக்கியம்.
இதிலே பயணிக்க விரும்புகிறேன்:
மக்கள் பணியும் இருக்கு. தேவையில்லாத எந்த வேலையும் நான் பாக்கல. என்னோட பணியை சந்தோஷமா செய்றேன். புத்தகம் படிக்க நிறைய நேரம் கிடைச்சுருக்கு. குழந்தைகளோட நேரம் செலவிட, தந்தையாக, மகனாக, ரொம்ப நாள் கழிச்சு எங்க அப்பா, அம்மாவோட உட்கார்ந்து சாப்பிடுவதற்கு. இந்த வாழ்க்கை எனக்கு சிறப்பா தோணுது. இதுலயே நான் பயணிக்க விரும்புகிறேன்.
ஒரு தொண்டனாக மோடிக்கு பணி செய்ய வேண்டும். என்னோட ஆசை பெரியது. தமிழ்நாட்டில் மாற்றம் வேண்டும் என நினைக்கிறேன். அதற்கான காலம் வரும்.
இவ்வாறு அவர் பேசினார்.
பதவி பறிக்கப்பட்ட அண்ணாமலை:
தமிழ்நாட்டில் பா.ஜ.க.வின் வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்கு வகித்தவர் அண்ணாமலை. அதிமுக-வின் கூட்டணியில் இருந்தபோது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்து அவர் பேசிய கருத்துக்கள் அதிமுக-வினர் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அந்த கூட்டணி முறிந்தது. இந்த நிலையில், அண்ணாமலைக்கு பதிலாக புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்பட்டார். அவரது நியமனத்திற்கு பிறகு அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் உருவானது. இந்த கூட்டணியே சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம், தலைவர் பதவி வகித்து வந்த அண்ணாமலைக்கு தேசிய அளவிலான பா.ஜ.க.வில் பொறுப்பு வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியான நிலையில் இதுவரை அதிகாரப்பூர்வமாக அவருக்கு எந்த பதவியும் வழங்கப்படவில்லை. மேலும், தலைவர் பதவியில் இருந்தபோது போல தற்போது அவர் மும்முரமாகவும் அரசியலில் காணப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்டதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்ததாகவே கூறப்பட்டது.























