PMK Arul: பாமக முன்னாள் MLA-வுக்கு தூது விட்ட தவெக.. விசுவாசத்தால் வாய்ப்பை மறுத்த அருள்!
கடந்த வாரம் டாக்டர் ராமதாஸ்-சரஸ்வதி தம்பதியினரின் திருமண நாள் வந்தது. அதற்கு அன்புமணி, தனது மனைவி சௌமியா, மகள்கள் என குடும்ப சகிதமாக சென்று பெற்றோரிடம் ஆசிர்வாதம் பெற்றார். இதனால் இருவருக்குமிடையேயான பிரச்னை முடிவுக்கு வந்தது.

நான் பதவி வெறி பிடித்தவன் அல்ல என்றும், நினைத்திருந்தால் தமிழக வெற்றி கழகத்திற்கு சென்றிருக்க முடியும் எனவும் பாமக முன்னால் எம்எல்ஏ அருள் தெரிவித்துள்ளார்.
அரசியல் களத்தில் நிகழ்ந்த மாற்றம்
2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழக அரசியல் களத்தில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி உள்ளது. முதல்முறையாக களம் கண்ட தமிழக வெற்றி கழகம் ஆட்சியைப் பிடித்தது. தமிழ்நாட்டில் சாத்தியமாகாது என தெரிவிக்கப்பட்டு வந்த கூட்டணி ஆட்சி முறை நடைமுறைக்கு வந்தது. ஆளுங்கட்சியாக இருந்த திமுக எதிர்க்கட்சியாக மாறிய நிலையில் அதிமுக முதல்முறையாக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. முதலமைச்சராக இருந்த மு க ஸ்டாலின் சட்டமன்ற தேர்தலில் தோல்வியை தழுவினார்.
தேர்தல் முடிவுற்ற பிறகு அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஆறு எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்தனர். இப்படி ஏகப்பட்ட கலையபரங்களுக்கு நடுவில் பாட்டாளி மக்கள் கட்சியில் நடைபெற்ற சில சம்பவங்களும் மறக்க முடியாதவையாக அமைந்தது.
பாமகவில் நடந்த அப்பா - மகன் சண்டை
கடந்த ஓராண்டாகவே பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸூக்கும், அக்கட்சித் தலைவர் அன்புமணிக்கும் இடையே கடுமையான மோதல் இருந்து வந்தது. இந்த சட்டமன்றத் தேர்தலில் அன்புமணி தலைமையிலான பாமக அதிமுக கூட்டணியில் இடம் பெற்று ஒரு தொகுதியில் மட்டும் வெற்றி பெற்றது. அன்புமணியின் மனைவி சௌமியா எம்எல்ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.
அதேசமயம் டாக்டர் ராமதாஸ் தலைமையிலான பாமக சசிகலாவின் அகில இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்ற கழகத்துடன் கூட்டணி வைத்தது. இந்த கூட்டணி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. பாமக இரண்டாக பிரிந்த நிலையில் ராமதாஸ் அன்புமணியை கடுமையாக விமர்சித்து கண்ணீர் வடித்தார். அக்கட்சியை சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் இரு குழுவாக பிரிந்து தேர்தலை சந்தித்தனர்.
மீண்டும் ஒன்று சேர்ந்த ராமதாஸ் - அன்புமணி
இந்த நிலையில் கடந்த வாரம் டாக்டர் ராமதாஸ்-சரஸ்வதி தம்பதியினரின் திருமண நாள் வந்தது. அதற்கு அன்புமணி, தனது மனைவி சௌமியா, மகள்கள் என குடும்ப சகிதமாக சென்று பெற்றோரிடம் ஆசிர்வாதம் பெற்றார். அன்புமணியை கட்டியணைத்து ராமதாஸ் கண்ணீர் விட்டார். இதன் மூலம் பாட்டாளி மக்கள் கட்சியில் நிலவி வந்த பிளவு முடிவுக்கு வந்ததாக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. ஆனால் இந்த சம்பவத்தால் தேர்தலில் இரு குழுவாக பிரிந்து நின்ற நிர்வாகிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
குறிப்பாக டாக்டர் ராமதாஸ் அணியில் இடம் பெற்றிருந்த முன்னாள் எம்எல்ஏ அருள் ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில் கடுமையான அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அதில், "ராமதாஸ் என்ற நடிகர் எங்களை ஏமாற்றிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். பதவி ஆசைக்காக பெரியவரை தனிமைப்படுத்தி விட்டார்கள் என தெரிவித்தார்கள். எனவே தான் நாங்கள் ராமதாஸ் ஐயாவுக்கு தோள் கொடுத்து நின்றோம். ஆனால் அப்போதும் ராமதாஸூம் அன்புமணியும் நல்ல நடிகர்கள் உங்களை ஏமாற்றி விடுவார்கள் என தெரிவித்தார்கள். எச்சரிக்கையுடன் கூடிய புத்திமதியை வழங்கினார்கள். ஆனால் விஸ்வாசம் எங்கள் கண்ணை மறைக்க அந்த அறிவுரையை நாங்கள் கண்டு கொள்ளவில்லை. இப்போது ராமதாஸ் எங்களை ஏமாற்றி விட்டார்.
இருவரும் ஒன்றிணைந்து விட்டதால் கட்சிப்பதவி பறிபோய்விடும் என பதற்றப்படுவதாக நினைக்கலாம். எந்த காலத்திலும் நான் பதவி வெறி பிடித்தவன் அல்ல. அப்படி ஒரு எண்ணம் எனக்கு இருந்தால் சேலம் மேற்கு தொகுதியில் போட்டியிட சொல்லி தமிழக வெற்றிக் கழகம் சார்பில் எனக்கு வாய்ப்பு வந்தபோதே அதனை ஏற்றிருக்கலாம். இன்றைக்கு நான் தமிழக அமைச்சரவையில் ஒரு அமைச்சராக இருந்திருப்பேன். ஆனால் விசுவாசத்தை தொண்டர்களிடத்தில்தான் பார்க்க முடியும். தலைவர்கள் இடத்தில் முடியாது என்பதை இந்த சம்பவத்தின் மூலம் உணர்ந்து விட்டேன்” எனவும் அருள் கூறியுள்ளார்.
Before You Go
"வேதனையில் இருக்கும் சிறுவனை இப்டியா இமிடேட் செய்வது" கொந்தளித்த TRB ராஜா
ட்ரெண்டிங் செய்திகள்






















