உங்க மேல மரியாதை இருக்கு.. காங்கிரஸை குறை சொல்லாதீங்க.. வைகோவுக்கு மாணிக்கம் தாகூர் பதிலடி!
நன்றியுணர்வு குறித்த கேள்வியைப் பொறுத்தவரை, அரசியல் கூட்டணிகள் பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன என மாணிக்கம் தாகூர் எம்.பி., தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் நன்றியுணர்வை வெளிப்படுத்த என மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் கருத்து, மாணிக்கம் தாகூர் எம்.பி., பதிலடி கொடுத்துள்ளார்.
திமுக கூட்டணியில் காங்கிரஸ் வெளியேற்றம்
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் கட்சி 28 இடங்களில் போட்டியிட்டு 5 தொகுதிகளில் வென்றது. தேர்தலுக்குப் பின் விஜயின் தவெகவுக்கு ஆட்சியமைக்க ஆதரவு தேவைப்பட்ட நிலையில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறியது. இதனால் கடும் கோபமடைந்த திமுக காங்கிரஸூக்கு நன்றியுணர்வு இல்லை என சரமாரியாக சாடியது. இதற்கு காங்கிரஸ் கட்சி சார்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசுகையில், “காங்கிரஸ் கட்சி சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் நின்று வெற்றி பெற்று நன்றி கூட சொல்லாமல் தவெக கூட்டணிக்குச் சென்றுவிட்டதாக ஆவேசமாக தெரிவித்தார். அதனால் காங்கிரஸ் கட்சியுடன் எங்களை ஒப்பிட வேண்டாம்” எனவும் அவர் கேட்டுக்கொண்டார். இதற்கு காங்கிரஸ் கட்சி எம்.பி., மாணிக்கம் தாகூர் பதிலடி கொடுத்துள்ளார்.
Also Read: விசிகவை ஆபாசமாக பேசிய ஆ.ராசா.. பாசத்தில் பேசி விட்டதாக விளக்கம்.. குவியும் கண்டனம்!
வைகோ மேல மரியாதை இருக்கு
அவர் வெளியிட்ட சமூக வலைத்தளப் பதிவில், “மூத்த தலைவர் வைகோ அவர்களுக்கும், அவர் பொதுவாழ்க்கைக்கு ஆற்றிய நீண்டகால பங்களிப்பிற்கும் எனக்கு மிகுந்த மரியாதை உள்ளது. எனினும், உரிய மரியாதையுடன் நான் தெளிவுபடுத்த விரும்புவது என்னவெனில், நன்றியுணர்வு குறித்த கேள்வியைப் பொறுத்தவரை, அரசியல் கூட்டணிகள் பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதையின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன.
4ஆம் தேதி மதியம் 3 மணியளவில் தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருந்தபோதே, பாஜக/ஆர்எஸ்எஸ் தரப்பின் முயற்சியின்படி திமுக மற்றும் அதிமுகவுடன் தொடர்புகள் மற்றும் அரசியல் பேச்சுவார்த்தைகள் தொடங்கியது. பாஜகவின் தூண்டுதலின் பேரில் திமுக எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் அதிமுகவுடன் தொடர்புகளை ஆரம்பித்தது. மேலும் மறைமுக டீலிங் நடந்தது இயல்பாகவே காங்கிரஸ் தலைமைக்கு கவலைகளை ஏற்படுத்தியது.
இத்தகைய சூழ்நிலையில், அந்தக் கவலைகளைப் பற்றி பேசாமல் காங்கிரஸ் நன்றியுணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்று நியாயமானதோ அல்லது நடைமுறைக்கு ஏற்றதோ அல்ல. இந்தியா கூட்டணியில் உள்ள எங்கள் மதிப்பிற்குரிய சகாக்கள், திமுகவுடனான தங்களின் ஏமாற்றங்கள் அல்லது கருத்து வேறுபாடுகளில் காங்கிரஸ் கட்சியை இழுத்துச் செல்ல வேண்டாம் என்று நான் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
காங்கிரஸ் தனது கொள்கைகள் தனது தொண்டர்கள் மற்றும் பரஸ்பர மரியாதை மற்றும் வெளிப்படைத்தன்மையின் அடிப்படையில் இந்தியா கூட்டணியை வலுப்படுத்தும் தனது உறுதிப்பாட்டுடன் தொடர்ந்து நிற்கும்” என சரமாரியாக சாடியுள்ளார். ஏற்கனவே தவெக கூட்டணியில் காங்கிரஸ் இருக்கிறது. இப்படியான சூழலில் வைகோவும் திமுக கூட்டணியை விட்டு வெளியேறும் முடிவில் இருப்பதாக சொல்லப்படுகிறது. அப்படியிருக்கும்போது காங்கிரஸ் கட்சியை விமர்சிப்பது தவெகவுக்கு அதிருப்தியை உண்டாக்கலாம். இது தவெகவுடன் கூட்டணி சேரலாம் என்ற நம்முடைய அரசியல் முடிவுகள் எதிராக அமைந்து விடும் என மதிமுக தொண்டர்கள் குமுறி வருகின்றனர்.
ட்ரெண்டிங் செய்திகள்





















