வெட்கம், சொரணை இருந்தால் விஜய்க்கு இனி ஓட்டு போடாதீங்க.. திமுக MP ஆ.ராசா ஆவேசம்!
இந்த மனிதர் தமிழ்நாட்டின் தலைவர் என சுருக்கி விடாதீர்கள் என தேஜஸ்வி யாதவ் மு.க.ஸ்டாலினை புகழ்ந்தார். ஆனால் ஒரு தற்குறி அவரை அப்பா எங்கே என கிண்டல் செய்கிறார் என ஆ.ராசா விமர்சித்துள்ளார்.

சட்டமன்றத்தில் அப்பா எங்கே என மு.க.ஸ்டாலினைக் குறிப்பிட்டு கேட்ட தற்குறிக்கு நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்காதீர்கள் என முதலமைச்சர் விஜயை திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா கடுமையாக விமர்சித்துள்ளார்.
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் கலைஞர் கருணாநிதி நினைவுநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆ.ராசா, கலாநிதி வீராசாமி, மேயர் பிரியா ராஜன் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.
மு.க.ஸ்டாலின் இந்தியாவுக்கான தலைவர்
இந்நிகழ்ச்சியில் பேசிய ஆ.ராசா, “தொகுதி மறுவரையறை தவறு என கூறி 5 மாநில முதலமைச்சர்களை அழைத்து வந்து மாநாடு போட்டு தீர்மானம் போட்ட ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் தான். பீகார் மாநிலத்தின் எதிர்க்கட்சி தலைவர் தேஜஸ்வி யாதவ் மேட்டுப்பாளையத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு வந்தார். அதில் முதலமைச்சராக இருந்த ஸ்டாலினும் வந்திருந்தார். அந்நிகழ்வில் என்னிடம் பேசிய தேஜஸ்வி யாதவ், என்னுடைய சகோதரர் ஸ்டாலின் எல்லாமே செய்கிறார். அவர் தான் மீண்டும் வருவார் என நம்புகிறேன என கூறினார். அதேசமயம் நான் ஒன்றை சொல்கிறேன். இந்த மனிதர் தமிழ்நாட்டின் தலைவர் என சுருக்கி விடாதீர்கள். எங்களுக்கு தொகுதி மறுவரையறைப் பற்றி ஒன்றும் தெரியவில்லை. நாங்கள் எல்லாம் மக்கள் தொகை அடிப்படையில் பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு தொகுதி அதிகமாக கிடைக்கப் போகிறது என நினைத்துக் கொண்டிருந்தோம். ஒருவேளை அப்படி வந்தால் அதன் பாதிப்பு பின்னாளில் எப்படி இருக்கும், பாஜக அதை எப்படி பயன்படுத்திக் கொள்ளும் என்பதை எங்களுக்கு கற்றுக் கொடுத்து கண் திறந்தவர் மு.க.ஸ்டாலின் தான்.
ஆகவே பாஜக ஆட்சி வந்த பிறகு நாடாளுமன்றத்தில் மோடி, அமித்ஷாவுக்கு தோல்வி என்பதே கிடையாது. ஆனால் ஸ்டாலின் சொன்ன பிறகு தான் தொகுதி மறுவரையறை சட்ட மசோதா கொண்டு வரும்போது நாங்கள் எதிர்த்து வாக்களித்தோம். இதனைப் பார்த்து அமித்ஷா ஸ்டாலின் பேச்சைக் கேட்டு இப்படி பண்றீங்களா என கதறினார். அந்த சட்ட மசோதா தோற்கடிக்கப்பட்ட பிறகு அமித்ஷா முகத்தில் கரியை பூசிய பெருமை திமுகவுக்கு தான் உண்டு. இதை குறிப்பிட்டு எல்லாரும் எழுந்து ஸ்டாலினுக்கு வணக்கம் வையுங்கள் என தேஜஸ்வி கூறினார்.
தவெகவுக்கு ஓட்டு போடாதீங்க
அப்படிப்பட்ட மனிதரை இன்றைக்கு சட்டமன்றத்தில் ஒரு தற்குறி உங்க அப்பா எங்கே இருக்கிறார் என கேட்கிறார். அதை தமிழ்நாடு பார்த்துக் கொண்டிருக்கிறது. வெட்கம், சூடு, சுரணை இருந்தால் 2029 நாடாளுமன்ற தேர்தலில் தவெகவை வீட்டுக்கு அனுப்புங்கள். நாங்கள் நாடாளுமன்றத்தைக் கைப்பற்றி யார் என்பதை நிரூபிப்போம். அதற்காக உழையுங்கள் என திமுக தொண்டர்களை கேட்டுக் கொள்கிறேன் என ஆ.ராசா எம்.பி., தெரிவித்தார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















