மேட்டூர் அணை: ஒரு லட்சம் கன அடி நீர் திறப்பு! 11 மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை! கரையோர மக்கள் உஷார்!
மேட்டூர் அணைக்கு நேற்று காலை 45,400 கன அடியாகவும் இருந்த நீர்வரத்து, மதியம் 12 மணிக்கு 75,400 கனஅடியாகவும், மாலை ஒரு லட்சத்து 400 கனஅடியாகவும் அதிகரித்தது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிப்பால் ஒரு லட்சம் கனஅடி தண்ணீர் திறப்பு, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை.
மேட்டூர் அணையில் 1 லட்சம் கன அடி தண்ணீர் திறப்பு
மேட்டூர் அணை மீண்டும் முழு கொள்ளவு நிரம்பியுள்ள நிலையில் காவிரியில் விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் 11 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் கனமழை பெய்து வரும் நிலையில், அங்குள்ள கபினி, கே.ஆர்.எஸ் அணைகள் நிரம்பி, உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, மேட்டூர் அணை நடப்பாண்டில் 4வது முறையாக கடந்த 25-ம் தேதி முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. இதனால் அணைக்கு வரும் நீர் முழுவதும் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
விநாடிக்கு 18,000 கன அடியும், 16 கண் மதகுகள் வழியாக 82,000 கனஅடியும் நீர் திறப்பு
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 35,400 கனஅடியாகவும், நேற்று காலை 45,400 கன அடியாகவும் இருந்த நீர்வரத்து, மதியம் 12 மணிக்கு 75,400 கனஅடியாகவும், மாலை ஒரு லட்சத்து 400 கனஅடியாகவும் அதிகரித்தது. இதையடுத்து அணையிலிருந்து ஒரு லட்சம் கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் சுரங்க மின் நிலையம் வழியாக விநாடிக்கு 18,000 கன அடியும், 16 கண் மதகுகள் வழியாக 82,000 கனஅடியும் நீர் திறக்கப்பட்டு வருகிறது. கால்வாய் பாசனத்துக்கு விநாடிக்கு 400 கனஅடி நீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 120 அடியாகவும், நீர் இருப்பு 93.47 டிஎம்சியாகவும் இருந்தது. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் வெள்ள கட்டுப்பாட்டு மையத்தில் 24 மணி நேரமும் நீரின் அளவை அதிகாரிகள் கண்காணித்தும், தேவைக்கேற்ப நீரை வெளியேற்றியும் வருகின்றனர்.
11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், கடலூர் ஆகிய 11 மாவட்ட ஆட்சியர்களுக்கு மேட்டூர் அணை உதவி செயற்பொறியாளர் செல்வராஜ் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், மேட்டூர் அணை நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. அணைக்கு வரும் நீர் முழுவதும் அப்படியே காவிரியில் வெளியேற்றப்படுகிறது. அணையிலிருந்து காவிரியில் விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடி உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. எனவே, காவிரி கரையோரம் வசிக்கும் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்குச் செல்ல வேண்டும். உடைமைகளின் பாதுகாப்பு மற்றும் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 1,05,000 கனஅடியாக அதிகரிப்பு
கர்நாடக அணைகளிலிருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பால், காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து நேற்று வினாடிக்கு 98,000 கன அடியிலிருந்து இன்று காலை 6 மணி நிலவரபடி வினாடிக்கு 105,000 கன அடியாக அதிகரித்து வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஒகேனக்கல்லில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் 2 நாளாக தடை விதித்துள்ளது.





















