விஜய்- த்ரிஷா பற்றி பேசிய நயினார்.. அட்வைஸ் கொடுத்த வைகோ.. என்ன சொன்னார் தெரியுமா?
நயினார் நாகேந்திரன் சொன்னபோது தான் அப்படியா இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா என நினைக்க தோன்றியது. அதைப்பற்றி எல்லாரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என வைகோ கூறியுள்ளார்.

நயினார் நாகேந்திரன் யாருடைய தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி விமர்சிக்க வேண்டாம் என கேட்டுக்கொள்வதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
சேலத்தில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சி தலைவர் விஜய், பாஜகவை பெயர் குறிப்பிடாமல் விமர்சித்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், நடிகர் விஜயை பிரபல நடிகையான த்ரிஷாவுடன் இணைத்து பேசினார். அவரின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை கிளப்பியது. நயினார் பேச்சுக்கு தமிழக பெண் எம்.பி.,க்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த நிலையில் தனது பேச்சில் யாரையும் புண்படுத்தும் நோக்கமில்லை என நயினார் நாகேந்திரன் விளக்கமளித்திருந்தார். ஆனால் அவரின் பேச்சுக்கு நடிகை த்ரிஷா கடும் கண்டனம் தெரிவித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம், நயினார் பேசியது பற்றி கேட்கப்பட்டது. அதற்கு, “எனக்கு விஜய்க்கும், த்ரிஷாவுக்கு என்ன சம்பந்தம் என தெரியாது. ஆனால் நயினார் நாகேந்திரன் சொன்னபோது தான் அப்படியா இப்படி ஒரு விஷயம் இருக்கிறதா என நினைக்க தோன்றியது. அதைப்பற்றி எல்லாரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். நயினார் நாகேந்திரன் ரொம்ப பண்புள்ளவர். ரொம்ப அமைதியானவர். அமைச்சராக இருக்கும்போது நேர்மையாக இருந்தவர். நயினார் நாகேந்திரன் ஏன் இப்படி சொன்னார் என தெரியாது. தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி நான் பொதுவாக விமர்சிப்பதில்லை. அப்படிப்பட்டதை செய்ய வேண்டாம் என நயினார் நாகேந்திரனிடம் கேட்டுக் கொள்கிறேன்.
உண்மை எடப்பாடி பழனிசாமிக்கு சுடுகிறது
தொடர்ந்து அதிமுக, பாஜகவுக்கு அடிமை என ஒவ்வொரு மேடையிலும் முதலமைச்சர் அவதூறு பரப்புவதாக எடப்பாடி பழனிசாமி கூறுவது பற்றி கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த வைகோ, “உண்மை அவர்களுக்கு சுடுகிறது. அதனால் அவதூறு போல தோன்றுகிறது. கொத்தடிமை வேலையை தான் எடப்பாடி பழனிசாமி குழு செய்து வந்திருக்கிறது. அதனைத்தான் முதலமைச்சர் பட்டவர்த்தமாக தெரிவித்திருக்கிறார் என சொன்னார்.
காங்கிரஸ் கட்சி ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்பதை பற்றி பதிலளித்த வைகோ, “இப்படியான ஒரு சூழல் இல்லாத ஊருக்கு போகாத வழியை காங்கிரஸ் சொல்லிக் கொண்டிருக்கிறது. நிறைய சீட்டு வேண்டும், கூட்டணி ஆட்சி என அவர்கள் விருப்பத்தை தெரிவிக்கிறார். அதற்கு வாய்ப்பே இல்லை” என விமர்சித்தார். மேலும் மகளிர் உரிமைத்தொகை ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது குறித்து பேசிய அவர், “பயந்து போன எதிர்க்கட்சி கூட்டம், முதல்வர் நாற்காலி எனக்கு தான் என சொல்லும் கூட்டம் என அனைவரும் இதனைப் பார்த்து பயந்து போகியுள்ளது. தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான மகளிர் வாக்குச்சாவடிக்கு போனால் திமுகவுக்கு தான் ஓட்டுப்போடுவார்கள் என்பதில் தீர்மானமாக இருக்கிறார்கள். ஆனால் அதனை எதிர்ப்பவர்களுக்கு ஆத்திரமாக உள்ளது என வைகோ தெரிவித்தார்.






















