![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
“தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுகிறார்களா? விஷமத்தனமான செய்தி” - விளக்கம் கொடுத்த அமைச்சர்...!
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் விளக்கம் அளித்துள்ளார்.
![“தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுகிறார்களா? விஷமத்தனமான செய்தி” - விளக்கம் கொடுத்த அமைச்சர்...! Labor Welfare and Skill Development Minister C.V. Ganesan Reported that there is no harm for North Indian labours who are working in Tamil Nadu “தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்கள் தாக்கப்படுகிறார்களா? விஷமத்தனமான செய்தி” - விளக்கம் கொடுத்த அமைச்சர்...!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/03/6fbd0a2f331c1cc8558923e73a6029511677847302866571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் விளக்கம் அளித்துள்ளார்.
பீகார் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் தாக்கப்படுவதாக வீடியோக்கள் வடமாநிலங்களில் சமூக வலைதளங்களில் பரவியது. வடமாநிலத்தவர்களுக்கு புரியும் வகையில் இந்தி மொழியில் தமிழ்நாடு காவல்துறை விளக்கமளித்துள்ளது. நேற்று டிஜிபி சைலேந்திர பாபு ஆங்கிலத்தில் பேசி வீடியோ வெளியிட்ட நிலையில் தற்போது இந்தியில் ட்வீட் செய்து தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அத்துடன், தவறான தகவல்கள், வீடியோக்களை பரப்பும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்நிலையில், தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை. அவர்கள் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள் என்றும் தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர் தாக்கப்படுவதாக விஷமத்தனமான செய்தி பரப்பபடுகிறது; அதில் உண்மை இல்லை என தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெருந்தொழில் மற்றும் சிறு தொழில் நிறுவனங்கள் பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் பெருமளவில் முதலீடு செய்து வந்தது அதில் பல மாநிலங்களிலிருந்தும் தொழிலாளர்கள் வந்து அமைதியான சூழ்நிலையில் பணியாற்றி மாநிலத்தின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி வருகின்றார்கள்.
அதேபோல், மேம்பாலக் கட்டுமானம், மெட்ரோ ரயில் உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளிலும் வட மாநில தொழிலாளர்கள் பெருமளவில் ஈடுபட்டு அந்தத் துறைகளின் வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள். அந்தத் தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் அந்தந்த நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அனைத்து நிறுவனங்களிலும் தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலச் சட்டங்கள் கடைபிடிக்கப்படுவதை துறை மூலமாக உறுதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு வருபவர்களை நேசக் கரம் கொண்டு வரவேற்பதுதான் தமிழ் மக்களின் பண்பாடு மற்றும் நடைமுறை. விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்ற தமிழ்நாட்டு மக்களும், தொழிலாளர் நலன் காக்கும் தமிழ்நாடு அரசும் இந்த உடலுழைப்புத் தொழிலாளர்களின் பங்களிப்பை நன்கு உணர்ந்து இருப்பதால், இணக்கமான, அமைதியான சூழ்நிலையில் இங்கு அனைவரும் வாழ்ந்து வருகிறார்கள்.
இந்தச் சூழ்நிலையில் சில சமூக வலைதளங்களில் உண்மைக்கு மிகவும் மாறான, தவறான உள்நோக்கத்தோடு, வடமாநில தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் சில இடங்களில் தாக்கப்படுவதாக விஷமத்தனமான செய்தி சிலரால் பரப்பப்பட்டு வருகிறது. இதில் எந்தவிதமான உண்மையும் இல்லை என்பதை தமிழ்நாட்டில் இருக்கும் வடமாநிலத்தவர் உள்ளிட்ட அனைவரும் அறிவார்கள்.
தொழில் அமைதிக்கும், சமூக அமைதிக்கும் எப்போதும் பெயர்பெற்று விளங்கும் தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெற்றதாக செய்தி பரப்புபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வடமாநில தொழிலாளர்கள் மட்டுமல்ல எல்லா மாநில தொழிலாளர்களும் எவ்வித அச்சமுமின்றி அமைதியாக, சிறப்பாகப் பணியாற்றி வருகிறார்கள் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என இடம் பெற்று இருந்தது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)