நடிகையோடு ஜாலியாக இருந்தவர்.. முதல்வர் விஜயை தரக்குறைவாக பேசிய அனிதா ராதாகிருஷ்ணன்!
சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் முகத்தை தொங்கப்போட்டு கொள்கிறார். மற்ற தவெக உறுப்பினர்களுக்கு என்ன பாயிண்ட் பேச வேண்டும் என தெரியவில்லை என அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தன்னை இப்படி வந்து வசமா மாட்டி விட்டுட்டீங்களே என நினைக்கும் அளவுக்கு முதலமைச்சர் விஜய் சட்டமன்றத்தில் நடந்துக் கொள்வதாக திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
முன்னாள் திமுக தலைவர் கலைஞர் கருணாநிதியின் 103 வது பிறந்த நாளை முன்னிட்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக ஆழ்வார்திருநகரி ஒன்றியம் சார்பில் திருச்செந்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஆத்தூரில் மாபெரும் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினர் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வில் அனிதா ராதாகிருஷ்ணன் பேசியது பெரும் சர்ச்சைகளை கிளப்பியுள்ளது.
அதாவது, “சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் முகத்தை தொங்கப்போட்டு கொள்கிறார். மற்ற தவெக உறுப்பினர்களுக்கு என்ன பாயிண்ட் பேச வேண்டும் என தெரியவில்லை. ஆளுநர் உரை மீதான விஷயத்திலேயே இப்படியென்றால் பட்ஜெட் கூட்டத்தொடர் வந்தால் தவெகவினர் துண்டைக் காணும், துணியைக் காணும் என ஓடப் போகிறார்கள். திமுக எம்.எல்.ஏ. ஆஸ்டின் பேசும்போது சட்டமன்றமே அலறி விட்டது. முதலமைச்சர் விஜய்க்கு நேராக கையை நீட்டி வாயை தொறக்க மாட்டீங்களா என கேட்டார். இதற்கு விஜய்க்கு என்ன ரியாக்ஷன் கொடுக்க வேண்டும் என தெரியவில்லை. நம்ம எப்படி ஜாலியா நடிகையோட வீட்டில் இருந்தோம். என்னடா இப்படி வந்து மாட்டி விட்டாங்களேன்னு என தவிக்கும் மன நிலை எனக்கு தெரிகிறது.
அனிதா ராதாகிருஷ்ணன் சர்ச்சை பேச்சு
நான் ஒரு வியாபாரி. அதனால் இன்னொரு வியாபாரி கடைக்குள் வரும்போது அவர் கடன் வாங்க வருகிறாரா அல்லது பணத்தோட வருகிறாரா என்பது எனக்கு தெரியும். அந்த வகையில் ஒரு முதலமைச்சர் சட்டமன்றத்தில் முழிக்கும் முழியை வைத்தே இப்படி மாட்டி விட்டீங்களே என நினைப்பதை என்னால் உணர முடிந்தது. அதேசமயம் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் கொண்டு வந்த தனித்தீர்மானம் மீது பேசிய எதிர்க்கட்சித்தலைவர் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது மணி மணியாக பேசினார். மீண்டும் ஜூன் 22ம் தேதி ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது உதயநிதி ஸ்டாலின் பேசப் போகிறார். அதற்கு பதில் கொடுக்கும் வகையில் முதலமைச்சர் விஜய்க்கு குறிப்புகள் கொடுக்கப்படும். ஆனால் அதை கஷ்டப்பட்டு அவர் வாசிப்பார். இதுதான் இன்றைக்கு நிலைமையாக உள்ளது.
இதையும் படிங்க: அதிமுக எங்க பங்காளி... திமுகவுடன் கூட்டணி அமைத்தால் என்ன தப்பு? - கொந்தளித்த ஆர்.எஸ்.பாரதி!
மக்கள் இவ்வளவு இன்னல்களை தாங்கிக் கொண்டு ஏன் இந்த சனியன்களுக்கு ஓட்டு போட்டோம் என புலம்புகிறார்கள். அள்ளி அள்ளி தந்த அந்த புண்ணியவானை (மு.க.ஸ்டாலின்) தோற்கடித்து விட்டோமே என நினைக்கிறார்கள் என அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















