Chennai Food Festival: நாகூர் பிரியாணி முதல் கடலூர் மீன் புட்டு வரை..! சென்னை மக்களுக்கு கொண்டாட்டம்- உணவுத்திருவிழா ஸ்பெஷல் இதோ
Chennai Food Festival: பல ஊர்களில் பல வகையான உணவுகளுக்கு சிறப்பு வாய்ந்தது. இதனை ருசிக்க உணவுப்பிரியர்கள் பல ஊர்களுக்கு பயணம் செய்யும் நிலையில், ஒரே இடத்தில் அதுவும் சென்னையில் உணவுத்திருவிழாவில் அனைத்து ஊர்களின் ஸ்பெஷல் உணவு கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பல ஊர்களின் சிறப்பு உணவுகள்- ஒரே இடத்தில்
இயந்திர வாழ்க்கைக்கு இணையாக ஓடிக்கொண்டிருக்கும் மக்களுக்கு குடும்பத்தோடு வெளியில் சென்று நல்ல உணவு அருந்தலாம்என நினைக்கும் மக்களுக்கும், உணவு பிரியர்களுக்கும் கொண்டாட்டமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் 4 நாட்கள் சென்னை மக்களை மட்டுமல்ல சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் உணவுத்திருவிழா நடைபெறவுள்ளது. சுய உதவிக் குழு மகளிரின் வளர்ச்சிக்காக பல்வேறு திட்டங்களை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்கள் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டு, வருவாய் ஈட்டி, பொருளாதார சுயசார்பு பெற்று வருகின்றனர்.
சென்னையில் உணவுத்திருவிழா
சுய உதவிக் குழுக்கள் மூலம் தயாரிக்கப்படும் தரமான உணவுகள், முன்னணி உணவகங்களின் டப் கொடுக்கும் வகையில், உணவு வகைகளின் தரத்திற்கு சற்றும் குறைவில்லாமல் அவற்றிற்கு இணையாக சுவையும், தரமும் நிறைந்த உணவுகளை தயாரிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் உணவுப் பொருட்களின் உணவுத் திருவிழா. இன்று (21.12.2025) முதல் 24.12.2025 வரை சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவை தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துவக்கி வைக்கவுள்ளார். மகளிர் சுய உதவிக்
இந்த உணவுத் திருவிழாவில், உயர்தர உணவகங்களில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகளுக்கு இணையான உணவுகள் மட்டுமல்லாது, தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு வாய்ந்த சுவையும், தரமும் நிறைந்த உணவு பொருட்கள் பொதுமக்களுக்கு வழங்கப்படவுள்ளது. அந்த வகையில் பல மாவட்ட ஸ்பெஷல்கள் ஒரே இடத்தில் கிடைக்கவுள்ளது. மயிலாடுதுறை இறால் வடை, நாகப்பட்டிணம் நாகூர் பிரியாணி. நாமக்கல் பள்ளிப்பாளையம் சிக்கன், நீலகிரி ராகி களி அவரை குழம்பு (கோத்தர் உணவு). புதுக்கோட்டை கோதுமை பணியாரம், ராமநாதபுரம் மீன் உணவுகள், ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி, சேலம் முட்டை தட்டுவடை, சிவகங்கை நெய் சாதம், தென்காசி உளுத்தங்களி, தஞ்சாவூர் மட்டன் உணவுகள், திருவள்ளூர் நெய்தல் உணவுகள், திருவண்ணாமலை சிமிலி,
பிரியாணி முதல் தானிய உணவுகள் வரை
அரியலூர் தோசை வகைகள், சென்னை Street Food, செங்கல்பட்டு காய்கறி தோசை, கருவாடு சூப். கோயம்புத்தூர் கொங்கு மட்டன் பிரியாணி, கடலூர் மீன் புட்டு, திண்டுக்கல் சிக்கன் பிரியாணி, தருமபுரி ராகி அதிரசம், ஈரோடு கோதுமை கீரை போண்டா. கள்ளக்குறிச்சி வரகு அரிசி பிரியாணி, காஞ்சிபுரம் கோவில் இட்லி, கரூர் தோல் ரொட்டி - மட்டன் கிரேவி. கிருஷ்ணகிரி பருப்பு அடை - காரச் சட்னி, மதுரை சிக்கன் பிரியாணி, பனங்குருத்து மில்க் ஷேக், தூத்துக்குடி இலங்கை யாழ் உணவுகள்.
திருநெல்வேலி நரிப்பயிறு பால், திருப்பத்தூர் ஆம்பூர் பிரியாணி, திருப்பூர் முட்டை ஊத்தாப்பம், திருச்சி வரகு மட்டன் பிரியாணி, திருவாரூர் பனை உணவுகள், தேனி பால் கொழுக்கட்டை, வேலூர் தேங்காய் போளி, விழுப்புரம் சிறுதானிய சிறப்பு உணவுகள், விருதுநகர் புரோட்டா கடை உள்ளிட்ட 235க்கும் மேற்பட்ட உணவு வகைகளை உடனடியாக சமைத்து, சுகாதாரமான முறையில் பரிமாறும் வகையில் 38 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
அனுமதி இலவசம்
துவக்க நாளான இன்று (21.12.2025) மட்டும் மாலை 04.00 மணி முதல் இரவு 09.00 மணி நடைபெறும் உணவுத் திருவிழா, 22.12.2025 முதல் 24.12.2025 வரை மதியம் 12.00 மணி முதல் இரவு 09.00 மணி வரை நடைபெறும். இந்த உணவுத் திருவிழாவில் மாலை நேரங்களில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறும். அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





















