தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா? முதல்வர் ஸ்டாலினை பங்கமாக கலாய்த்த இபிஎஸ்
அறிவாலய மேல் மாடியில் CBI ரெய்டு வந்த போது, கீழ்மாடியில் நீங்களும், உங்கள் தந்தையும் 63 தொகுதிகளை தாரைவார்த்த போது டேபிளுக்கு கீழ் தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா? என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சசிகலா முதல் அமித் ஷா வரை, டேபிளுக்கு அடியில் காலைப் பிடித்தவர் எடப்பாடி பழனிசாமி என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் மேற்கொண்ட விமர்சனத்திற்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பதிலடி அளித்துள்ளார்.
தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா?
எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "முந்தைய மூன்று ஆண்டுகள் #NITIAayog கூட்டங்களை "தமிழ்நாடு புறக்கணிக்கப்படுகிறது" என வீர வசனம் பேசி, தமிழ்நாட்டின் முதல்வராக, தமிழ்நாட்டின் நியாயமான நிதி உரிமையைப் பெறச் செல்லாத நீங்கள், இப்போது மட்டும் செல்ல வேண்டிய காரணம் என்ன? தமிழ்நாடா? இல்லவே இல்லை. உங்கள் குடும்பம் தானே?
ரெய்டைப் பார்த்து யாருக்கு பயம்? ஸ்டாலின் அவர்களே - அது கண்ணாடி! உங்களைப் பார்த்து நீங்களே ஏன் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்? அறிவாலய மேல் மாடியில் CBI ரெய்டு வந்த போது, கீழ்மாடியில் நீங்களும் , உங்கள் தந்தையும் 63 தொகுதிகளை தாரைவார்த்த போது டேபிளுக்கு கீழ் தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா?
எதிர்க்கட்சியாக கருப்பு பலூன் காட்டிவிட்டு, ஆளுங்கட்சியாக வெள்ளைக் குடை காட்டினீர்களே- அப்போது தவழ்ந்து சென்றீர்களா? ஊர்ந்து சென்றீர்களா? எது ஸ்டாலினின் கை? அண்ணா பல்கலை. வழக்கில் பாதிக்கப்பட்ட மாணவியின் பெயர் உள்ளிட்ட சுயவிவரங்களோடு FIR லீக் செய்த கை ஸ்டாலினின் கை.
பயங்கரமாக கலாய்த்த இபிஎஸ்:
ஜாபர் சாதிக் போன்ற International Drug Mafia தலைவனை அயலக அணி அமைப்பாளராக நியமித்த கை உங்கள் கை! ஞானசேகரன் முதல் தெய்வச்செயல் வரை சகல பாலியல் குற்றவாளிகளையும், அவர்கள் பின்னணியில் இருக்கும் "SIR"களையும் பாதுகாக்கும் கை, உங்கள் கை.
அண்ணா நகர் 10 வயது சிறுமி பாலியல் வழக்கில், உங்கள் கீழ் இயங்கும் காவல்துறை மீது நம்பிக்கை இல்லாமல், உயர்நீதிமன்றம் தாமாக வந்து CBI விசாரணைக்கு உத்தரவிட்டதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை சென்ற கை, உங்கள் கை.
தேர்தல் கூட்டணிக்காக, மேகதாது முதல் முல்லைப் பெரியாறு வரை தமிழ்நாட்டின் உரிமைகளை அடகு வைத்த கை தான் உங்கள் கை! 7.5% உள் இடஒதுக்கீடு வந்தபோது, ஆளுநர் ஒப்புதல் அளிக்காத சூழலிலும், அரசியலமைப்பு சட்டத்தின் 162-வது பிரிவைப் பயன்படுத்தி அரசாணை வெளியிட்டு மாநில உரிமையை நிலைநாட்டியவன் நான்!
உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை!
அப்போது நீங்கள் ராஜ் பவன் வாசலில் அரசியலோ, அவியலோ செய்துகொண்டு இருந்தீர்களே.. நினைவிருக்கிறதா? அதனால், மாநில உரிமைகளைப் பற்றி ஜெயலலிதா வழி வந்த என்னிடம் பேச உங்களுக்கு எந்த அருகதையும் இல்லை!
கச்சதீவு முதல் காவிரி வரை தமிழ்நாட்டின் உரிமைகளை தாரைவார்த்த நீங்கள், மாநில உரிமை பற்றியெல்லாம் பேசினால், மக்கள் சிரிப்பார்கள்! இதற்கெல்லாம் பின்னர் வருவோம்... நான் கேட்ட கேள்வி என்ன? #யார்_அந்த_தம்பி ?
உங்களுக்கும் அவருக்கும் என்ன சம்மந்தம்? உங்களுக்கும் உங்கள் மகனுக்கும் மிகவும் வேண்டிய நபர் (தம்பி) என்று சொல்கிறார்களே, ED ரெய்டு என்றதும் ஏன் அந்த தம்பி , நாட்டை விட்டே தப்பிச் சென்றார்? டாஸ்மாக்கில் "தம்பி" அடித்த கொள்ளையில் உங்களுக்கும், உங்கள் குடும்பத்திற்கும் பங்கு இருக்கிறதோ? என்ற சந்தேகம் மக்களிடையே வலுவாக இருக்கிறது.
உங்களுக்கு தெம்பு இருந்தால், திராணி இருந்தால், வக்கு இருந்தால், அதற்கு முதலில் பதிலை சொல்லிவிட்டு, மற்றதைப் பேசுங்கள்! உங்களின் எல்லா மடைமாற்று பேச்சுகளுக்கும் பதில் அளிக்க நான் தயார்! ஆனால், மக்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்! மீண்டும் கேட்கிறேன்- #யார்_அந்த_தம்பி? " என பதிவிட்டுள்ளார்.





















