Karur: தாமதமான சிகிச்சையால் உயிரிழப்பு - கரூரில் உறவினர்கள் சாலை மறியல்
நோயாளி மருந்துகளை எடுப்பதை பாதியிலேயே நிறுத்தியதால் நோயின் வீரியம் அதிகரித்து மோசமான நிலையில் தான் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நபருக்கு சிகிச்சை அளிக்க காலதாமதம் ஏற்பட்டதால் உயிரிழந்ததாக சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கரூர், கணபதிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் துரைராஜ் (48). இவருக்கு கடந்த 2 ஆண்டுகளாக கெண்டைக்காலில் செல்லும் நரம்பு பகுதியில் ரத்தக்கசிவு நோயால் பாதிப்படைந்து மருந்துகள் எடுத்து வந்துள்ளார். கடந்த சில தினங்களாக ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைந்ததால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக நேற்று 15ஆம் தேதி காலை 10.00 மணியளவில் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. சுயநலவை இழந்த துரைராஜ் இரவு சுமார் 10:30 மணியளவில் உயிரிழந்தார்.

மருத்துவ சிகிச்சை அளிக்க காலதாமதம் ஏற்பட்டதாக கூறி சம்பந்தப்பட்ட மருத்துவர்களை கண்டித்து அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட செயலாளர் சம்பத் தலைமையில், உறவினர்கள் கரூர் - திருச்சி நெடுஞ்சாலை காந்திகிராமம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட நபர்களை தாந்தோணிமலை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.

இதுகுறித்து மருத்துவ அலுவலரிடம் கேட்டபோது, நோயாளி மருந்துகளை எடுப்பதை பாதியிலேயே நிறுத்தியதால் நோயின் வீரியம் அதிகரித்து மோசமான நிலையில் தான் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார் எனவும், ஹீமோகுளோபின் அளவு குறைந்ததால் உயிரிழந்ததாக தெரிவித்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















