ஜெர்மனியில் தமிழ்நாட்டிற்கு குவிந்த ரூ.7,020 கோடி முதலீடு.. விமர்சனங்களை புறந்தள்ளுகிறேன்.. முதல்வரின் கடிதம்
ஒரு டிரில்லியன் டாலர் என்கிற பொருளாதார இலக்குடன் திராவிட மாடல் அரசு தொடர்ந்து முன்னேறி வருகிறது என முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்

நமது திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு இரட்டை இலக்கத்திலான பொருளாதார வளர்ச்சியைப் பெற்று முதலிடத்தில் இருப்பதுடன், இந்தியாவிலேயே தொழிற்சாலைகள் அதிகமுள்ள மாநிலமாகவும், வேலைவாய்ப்புகளை 15% வழங்கும் இந்தியாவின் முதன்மை மாநிலமாகவும் திகழ்கிறது என்கிற ஒன்றிய அரசின் புள்ளிவிவரங்களை உடன்பிறப்புகள் அறிந்திருப்பீர்கள் என முதல்வர் ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்
உங்களின் வாழ்த்துகளுடன் பயணம்
ஒரு டிரில்லியன் டாலர் என்கிற பொருளாதார இலக்குடன் திராவிட மாடல் அரசு தொடர்ந்து முன்னேறி வருகிறது. அந்த முன்னேற்றத்தை மேலும் விரைவுபடுத்தி, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் சீரான வளர்ச்சியைப் பெறுகிற வகையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காகத்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில் ஆகஸ்ட் 30 அன்று ஐரோப்பியச் சுற்றுப்பயணத்தைத் தொடங்கினேன். து. மாண்புமிகு துணை முதலமைச்சர் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்களும் உடனிருந்தார். எமிரேட்ஸ் நிறுவனத்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு, நானும் என் துணைவியாரும், அரசு அதிகாரிகள் மற்றும் உதவியாளர்களுடன் விமானத்தில் துபாய் வழியாக ஆகஸ்ட் 30 சனிக்கிழமை இரவு ஜெர்மனியில் NRW எனப்படும் நார்த்ரைன்-வெஸ்ட்பாலியா மாநிலத்தின் தலைநகரான டசெல்டோர்ஃப் விமான நிலையத்தில் தரையிறங்கினோம்.
அன்புடன் வரவேற்ற ஜெர்மனி
தமிழ்நாட்டிற்கான வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்காக உங்களில் ஒருவனான என் வழிகாட்டுதலின்படி முன்கூட்டியே ஜெர்மனி நாட்டிற்கு வந்திருந்த மாண்புமிகு தொழில் - முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சரான தம்பி டி.ஆர்.பி.ராஜா விமான நிலையத்தில் அன்புடன் வரவேற்றார். NRW மாநில அரசின் சார்பாகத் தூதரக விவகாரங்கள் மற்றும் அரசு முறை வரவேற்புப் பிரிவைச் சார்ந்த திருமிகு அன்யா டி வூஸ்ட், பெர்லினில் உள்ள இந்திய தூதரகத்தின் பொறுப்பாளர் திரு.அபிஷேக் துபே, ஃப்ராங்க்பர்ட் இந்திய துணைத் தூதரகத்தின் துணைத் தூதர் பொறுப்பில் உள்ள திரு.விபா காந்த் ஷர்மா ஆகியோர் மகிழ்வுடன் வரவேற்றனர்.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் தமிழ்நாடு பெரும் பங்களிப்பைச் செலுத்தி வரும் நிலையில், ஜெர்மனி நாட்டில் உள்ள இந்திய அதிகாரிகளின் வரவேற்பு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் அளித்தது. அந்த மகிழ்ச்சியுடன் டசெல்டோர்ஃப் விமான நிலையத்திலிருந்து வெளியே வந்தபோது ஓர் இன்ப அதிர்ச்சி.
அந்தப் பகுதியில் வசிக்கும் தமிழர்கள் குடும்பம் குடும்பமாக வந்து நின்று வரவேற்பளித்தனர். குழந்தைகள் பதாகை ஏந்தி அன்பைப் பொழிந்தனர். அவர்களின் பாசம் மிகுந்த வரவேற்பை ஏற்றுக்கொண்டு, குழந்தைகளின் படிப்பு உள்ளிட்ட விவரங்களைக் கேட்டுவிட்டு, கொலோன் நகரில் உள்ள 120 ஆண்டு பெருமையுள்ள எக்ஸல்ஸியர் ஹோட்டலுக்கு வந்தோம்.
கவனமெல்லாம் தமிழ்நாட்டில்
நடைப்பயிற்சியில் என்னுடன் வந்த தம்பி டி.ஆர்.பி.ராஜா ஜெர்மனியில் எந்தெந்த நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய ஆர்வமாக இருக்கின்றன, அந்த நிறுவனங்கள் என்ன உற்பத்தி செய்கின்றன, அவற்றின் பின்னணி என்ன என்பது உள்ளிட்ட விவரங்களைச் சொல்லிக்கொண்டே வந்தார். அவற்றைக் கவனமாகக் கேட்டுக்கொண்டதுடன், என்னுடைய செயலாளரிடம், தமிழ்நாட்டின் நிலவரங்கள் குறித்து கேட்டேன்.
கடல் பிரித்தாலும் மொழி இணைக்கும்
ஆகஸ்ட் 31 மாலையில் நம் தமிழ்ச் சொந்தங்களுடனான சந்திப்பு நேரம். ஜெர்மனியில் வசிக்கும் தமிழர்களுடனான சந்திப்பு என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால், ஸ்வீடன், நெதர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியின் 16 மாநிலங்களைச் சேர்ந்த தமிழர்களும் அந்தச் சந்திப்பிற்கு வந்திருந்தனர். கழகத்தின் சார்பில் தம்பி டி.ஆர்.பி.ராஜா செயலாளராக இருந்து தொடங்கிய NRTIA எனும் வெளிநாடு வாழ் இந்தியத் தமிழ்ச் சங்கத்தைத் தற்போது அயலக அணிச் செயலாளர் தம்பி எம்.எம்.அப்துல்லா செயலாளராக இருந்து சிறப்பாக நடத்தி வருகிறார். ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் உள்ள நமது NRTIA நிர்வாகிகள் நல்ல முறையில் ஒருங்கிணைத்திருந்தனர்.
“நில எல்லைகளும், கடல் எல்லைகளும் நம்மைப் பிரித்தாலும், மொழியும் இனமும் நம்மை இணைக்கிறது. கண்டங்களைக் கடந்துவிட்டாலும் நம்முடைய தொப்புள் கொடி அறுந்துவிடவில்லை” என்பதை அவர்கள் முன் சொன்னபோது கைத்தட்டி வரவேற்றனர். “திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களின் வளர்ச்சிக்காக வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கிறோம். வெளிநாடுகளில் வாழும் தமிழர்களுக்கு ஓடோடி வந்து உதவுகிறோம் என்பதைத் சொல்லி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் துணை நிற்கும் வகையில் முதலீடு செய்ய வாருங்கள். ஆண்டுக்கு ஒருமுறை குடும்பத்துடன் தமிழ்நாட்டுக்கு வாருங்கள். உங்கள் உறவாக - உங்கள் குடும்பத்தில் ஒருவனாக இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இருக்கிறேன்” என்ற உறுதியை அளித்தேன்.
அயலக மண்ணில் தமிழ்க் கலை
எந்த வெளிநாடுகளுக்கு நான் சென்றாலும் அங்கே உள்ள தமிழ்க் குழந்தைகள் தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தும் வகையில் பல வகை நடனங்கள், பாடல்கள், பறை இசை, சிலம்பம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டுவது வழக்கம். அவற்றைக் கண்டு ரசிக்கும்போது உள்ளூரில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. புதுப்புது கலை வடிவங்களை நாம் இரசித்தாலும் நம் பாரம்பரிய கலைகளை நம் .குழந்தைகள் கற்றுக்கொண்டு அதை வெளிப்படுத்தும்போது மனதுக்கு மகிழ்ச்சியும் நிறைவும் ஏற்படுவது இயற்கை. உடன்பிறப்புகள் தங்கள் வீட்டுக் குழந்தைகளுக்குத் தமிழ்க் கலைகளைப் பயிற்றுவிக்க வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
ஜெர்மனியில் தமிழர்களுடனான சந்திப்பை நடத்துவதில் ஒத்துழைப்பு வழங்கியதுடன் ஐரோப்பாவில் தமிழ்ப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வரும் தமிழ்ச் சங்கங்களின் சேவைகளைக் கேட்டு மகிழ்ந்து, அந்த சங்கங்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினேன்..
தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி.
டசல்டோர்ஃப் நகரில் ஐந்து நிறுவனங்களுடன் தனித்தனிச் சந்திப்புகள். முதல் நிறுவனமாக உலகப் புகழ்பெற்ற பி.எம்.டபிள்யூ கார் நிறுவனத்துடனான சந்திப்பு. நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் முதல்வராக இருந்தபோது, பி.எம்.டபிள்யூ காரில் கையெழுத்திட்ட படத்தை அந்த நிறுவனத்தினர் எனக்குப் பரிசாக அளித்தபோது நெகிழ்ந்தேன். பி.எம்.டபிள்யூ. நிறுவனத்தின் விரிவாக்கப் பணிகள் குறித்த ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள் நடைபெற்றன. அந்த நிறுவனத்தைத் தொடர்ந்து இ.பி.எம் பாப்ஸ்ட், நார்-ப்ரீம்ஸ், நார்டெக்ஸ் ஆகிய நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
அவர்களிடம் நான், சென்னையில் நடந்த உலக முதலீட்டாளர் மாநாடு 2024-இல் ஒப்பந்தம் போடப்பட்டு, அடுத்த சில மாதங்களில் தூத்துக்குடியில் அடிக்கல் நாட்டி, ஒன்றரை ஆண்டுக்குள் உற்பத்தியைத் தொடங்கிய வியட்நாம் நாட்டின் வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அரசு தரப்பிலான ஒத்துழைப்பு, அவர்களின் மின்வாகன உற்பத்திக்கேற்ற திறன்மிகு பணியாளர்களைச் சொந்த மாவட்டத்திலேயே உருவாக்கித் தந்தது, முதல் கார் விற்பனையை நானே நேரில் சென்று தொடங்கி வைத்தது உள்ளிட்ட தமிழ்நாடு அரசின் முழுமையான ஒத்துழைப்புகளை விளக்கினேன். மிகுந்த நம்பிக்கையுடன் அவர்கள் முதலீடு செய்ய முன்வந்தனர். தமிழ்நாட்டிற்கு 3,201 கோடி ரூபாய் முதலீடுகளை ஈர்ப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டன.
ஆர்வத்துடன் குவிந்த முதலீடுகள்
NRW மாநில அரசின் சார்பில் வரவேற்புரை நிகழ்த்தப்பட்டது. அவரைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் தொழில்துறை செயலாளர் அருண் ராய் ஐ.ஏ.எஸ் பேசும்போது, இந்தியாவில் தமிழ்நாடு எந்தளவு பொருளாதாரத் துறையில் வளர்ந்துள்ளது என்பதையும், தேசிய சராசரியைவிடத் தமிழ்நாடு உயர்ந்திருப்பதன் காரணம், தொழில் வளர்ச்சிக்கேற்ற தமிழ்நாட்டில் உள்ள கட்டமைப்புகள் ஆகியவை பற்றி சிறப்பாக விளக்கி, முதலீடு செய்யும்படி கேட்டுக் கொண்டார். தமிழ்நாட்டில் ஏற்கெனவே முதலீடு செய்து, உற்பத்தியைத் தொடங்கியுள்ள நிறுவனங்கள் தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டது, அங்கு வந்திருந்த முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கையை அதிகரிக்கச் செய்தது.
தொழில் – உற்பத்தி - வர்த்தகம் மூன்றின் நுணுக்கங்களையும் நன்கறிந்திருக்கும் தொழில்துறை அமைச்சரான தம்பி டி.ஆர்.பி.ராஜா பேசும்போது, “ஐரோப்பாவின் இதயத்துடிப்பாக ஜெர்மனி உள்ளது. அதுபோல இந்தியாவின் இதயத்துடிப்பு தமிழ்நாடு. இரண்டுமே உற்பத்தித் துறையை வளர்த்தெடுக்கும் அரசுகள். தமிழ்நாட்டில் நீங்கள் நம்பிக்கையுடன் முதலீடுகளை செய்யலாம்’‘ என்று சொல்லி, கடந்த நான்காண்டுகால திராவிட மாடல் அரசில் தமிழ்நாடு பெற்றுள்ள வளர்ச்சியை சிறப்பாக விளக்கினார்.
என்னுடைய முதல் ஜெர்மனி பயணத்தில் நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டு உரையைத் தொடங்கும்போது, இந்தியா எனும் மிகப்பெரிய ஜனநாயக நாட்டில் இருக்கிற தமிழ்நாடு என்கிற மாநிலத்தின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சராகப் பங்கெடுப்பதில் உள்ள மகிழ்ச்சியை அவர்களுடன் பகிர்ந்துகொண்டு, நான் வெறும் முதலீட்டுக்காக இங்கு வரவில்லை என்பதையும், ஜெர்மனி - தமிழ்நாடு எனும் இரண்டு பொருளாதார அரசுகளுக்கிடையே பாலம் அமைக்க வந்திருக்கிறேன் என்பதையும் சுட்டிக்காட்டினேன். ஜெர்மனியைப் போலவே தமிழ்நாட்டிலும் திறன் மேம்பாட்டு மையங்கள் உருவாக்கப்பட்டு வருவதையும், நிறுவனங்களுக்கேற்ற திறனை ஊக்குவிக்கும் பயிற்சிகள் வழங்கப்படுவதையும் எடுத்துக்கூறி, தொழில்வளர்ச்சிக்கு தேவையான அத்தனை வசதிகளையும் உங்களுடனான ஒரு பார்ட்னர் போல அரசு செய்து தரும் என்ற உறுதியை அளித்து, இந்தியாவின் ஜெர்மனியாக தமிழ்நாடு விளங்குகிறது என்ற நம்பிக்கையை விதைத்தேன்.
இந்தியாவில் பல மாநிலங்கள் இதுபோன்ற முதலீட்டாளர் மாநாட்டிற்கு ஜெர்மனியில் முயற்சித்ததையும், நாம் நடத்திய முதலீட்டாளர் மாநாட்டில்தான் தமிழ்நாட்டில் இருக்கும் தொழிற்கட்டமைப்பை அறிந்துகொள்ள முடிந்தது என்றும் அங்கு வந்திருந்த முதலீட்டாளர்கள் தெரிவித்தனர்.
எந்த நாட்டில் முதலீடுகளை ஈர்க்கிறோமோ அந்த நாட்டிற்கு, முதலீட்டாளர் மாநாட்டை நடத்தும் மாநிலத்தின் முதலமைச்சரே நேரில் வந்து முதலீட்டாளர்களிடம் விளக்கும்போதுதான் தெளிவும் நம்பிக்கையும் கிடைக்கிறது, அதன் மூலம் முதலீடுகளை ஈர்க்க முடியும் என்பதற்கு NRW மாநிலத்தில் நடந்த முதலீட்டாளர் மாநாடு ஓர் எடுத்துக்காட்டாக இருக்கும். வெளிநாட்டுப் பயணங்கள் குறித்து அரசியல் காரணங்களுக்காக முன்வைக்கப்படும் விமர்சனங்களைப் புறங்கையால் ஒதுக்கிவிட்டு, தமிழ்நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கும், தமிழ்நாட்டில் உள்ளவர்களின் வேலைவாய்ப்புக்கும் தேவையான முதலீடுகளை இத்தகைய சந்திப்புகள் மூலம் ஈர்க்க முடிகிறது என்ற நிறைவு உங்களில் ஒருவனான எனக்கு ஏற்பட்டது.
காலையில் நடந்த நிறுவனங்களுடனான சந்திப்பு, மாலையில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் வகையில் 26 நிறுவனங்களுடன் 15 ஆயிரத்து 320 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 7,020 கோடி ரூபாய் முதலீட்டுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
லண்டனில் தமிழ் விருந்து
ஏறத்தாழ தமிழ்நாடு அளவுக்கான மக்கள்தொகையைக் கொண்டுள்ள நாடான ஜெர்மனிக்கு மேற்கொண்ட பயணத்தில் தமிழ்ச் சொந்தங்களுடனான சந்திப்பு, தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள், NRW மாநிலத்தின் தலைமை அமைச்சருடன் கலந்துரையாடல் எனத் திட்டமிட்டபடி வெற்றிகரமாக அனைத்தும் நிறைவேறிய மகிழ்வுடன், லண்டன் நகருக்கு விமானத்தில் பறக்கத் தொடங்கினேன்.
அங்கே உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில், உலகின் ஒப்பற்ற சிந்தனையாளரான நம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் திருவுருவப் படத்தை திறந்துவைத்து, சுயமரியாதை இயக்க நூற்றாண்டை முன்னிட்டுப் புத்தகங்களை வெளியிட்டு உரையாற்றுகிறேன். லண்டனிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான முதலீட்டாளர்கள் சந்திப்பு உண்டு. அன்புடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் லண்டன் தமிழ்ச் சொந்தங்களைச் சந்திக்க ஆவலுடன் இருக்கிறேன்.






















