"இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க" - வடிவேலு காமெடியை வச்சு விஜய்யை கலாய்த்த அப்பாவு
ஒரு தலைமையை நம்பி இவர்கள் செல்வதை பார்த்தால் "இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க" என்ற நடிகர் வடிவேலுவின் காமெடிகாட்சி தான் நினைவுக்கு வருகிறது.

பல கட்சியை சேர்ந்தவர்கள் சனிக்கிழமை தோறும் தவெகவில் இணைந்து வரும் நிலையில், "இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க" என்ற நடிகர் வடிவேலுவின் காமெடிகாட்சி தான் நினைவுக்கு வருகிறது என்று முன்னாள் சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார்.
வாரந்தோறும் சனிக்கிழமையில் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் தவெகவில் இணைந்து வருவது அதிகரித்து வருகிறது. முன்னாள் அமைச்சர்கள், சினிமா துறையைச் சேர்ந்தவர்கள் எனப் பலர் இணைந்து வருகிறது. நேற்றுகூட, நடிகர் மன்சூர் அலிகான், திரைப்பட இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், அதிமுக முன்னாள் அமைச்சர் கோமதி சீனிவாசன் உள்ளிட்டோர் இணைந்தனர். நேற்று அதிகளவில் தவெகவில் இணைய வந்ததால் பனையூரில் கடும் கூட்டம் நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில், தவெகவில் பலர் இணைவது குறித்து முன்னாள் சபாநாயகர் அப்பாவு விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது:
ஒருவர் அரசியல் கட்சியில் சேர்ந்து மக்கள் பணியாற்றுவதற்கு தன்னையே அர்ப்பணித்துக் கொள்வது இயல்பு. சில நேரம் சில கட்சிகளில் இருந்து கொள்கை முரண்பாடு மற்றும் சில கருத்து வேறுபாடு காரணமாக சிலர் ஒரு கட்சியை விட்டு விலகி இன்னொரு கட்சியில் இணைவது இயல்பான ஒன்றுதான்.
ஆனால் சமீப காலமாக சனிக்கிழமை தோறும் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் MP-MLA க்கள் மற்றும் பல்வேறு பொறுப்புகளில் இருந்தவர்கள் எல்லாம் பனையூர் பங்களா கேட் (Gate) முன் நிற்பதை பார்த்தால் ஜவுளி கடைகளில் ஆடித்தள்ளுபடிக்கு காத்திருக்கும் வாடிக்கையாளர்களைப் போன்று தெரிகிறது.
பனையூர் பங்களா கேட் திறந்ததும், புதிய திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு முண்டியடித்து கொண்டு ஓடும் ரசிகர்களைப் போல் சென்றாலும் அங்கு கட்சித் தலைவரை பார்க்க முடிவதில்லை. யாரோ ஒரு சிலர் கொடுக்கும் கட்சித்துண்டை தோளில் சுமந்து கொண்டு திரும்பி வருகின்றனர்.
தொண்டனின் நன்மைகளிலும் தீமைகளிலும் இயக்க தலைமை பங்கேற்கும் என்ற நம்பிக்கையில்தான் ஒவ்வொரு தொண்டனும் கட்சிக்காக இரவு பகலாக உழைப்பான். ஆனால் கரூரில் தன்னை பார்க்க வந்த தொண்டர்கள், ரசிகர்கள் 41 பேர்கள் இறந்ததை திரும்பி கூட பார்க்காத , ஒரு தலைமையை நம்பி இவர்கள் செல்வதை பார்த்தால் "இன்னுமாடா இந்த ஊர்ல நம்மள நம்புராங்க" என்ற நடிகர் வடிவேலுவின் காமெடிகாட்சி தான் நினைவுக்கு வருகிறது. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Before You Go
Jaipur schoolgirl death CCTV | பள்ளியில் வைத்து தற்கொலை! CLASSROOM-ல் நடந்தது என்ன? வெளியான பகீர் CCTV காட்சி
ட்ரெண்டிங் செய்திகள்






















