எனது பிறந்த நாளை கொண்டாடாதீங்க: தொண்டர்களுக்கு இபிஎஸ் வேண்டுகோள்! ஏன் தெரியுமா?
எனது பிறந்த நாளை முன்னிட்டு என் உயிருக்கு உயிரான உடன்பிறப்புகள் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

எனது பிறந்த நாளை முன்னிட்டு என் உயிருக்கு உயிரான உடன்பிறப்புகள் கொண்டாட்டங்களில் ஈடுபட வேண்டாம் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “பயங்கரவாதத் தாக்குதலுக்கு எதிர்வினையாக இந்தியா #OperationSindoor நடத்திய பிறகு, இந்தியாவின் பல நகரங்களை தாக்க பாகிஸ்தான் முற்பட்ட நிலையில், அதனை முறியடித்து நம் நாட்டு மக்களை காத்து வரும் மேன்மைமிகு ராணுவப் படைகளுக்கு எனது வாழ்த்துகள். மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான மத்திய அரசின் போர்க்கால நடவடிக்கைகளுக்கு ஒரு தேசமாக நாம் அனைவரும் துணை நிற்க வேண்டிய தருணம் இது.
இச்சூழலில், எதிர் வரும் எனது பிறந்தநாளை முன்னிட்டு என் உயிருக்கு உயிரான அன்பு கழக உடன்பிறப்புகள் யாரும் என்னை நேரில் சந்திப்பதையும், எந்த விதமான கொண்டாட்டங்களையும் தவிர்த்திட வேண்டும் என அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
அதே சமயம், ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்த எளியோர்க்கான இரத்த தானங்கள், மருத்துவ முகாம்கள், நலத்திட்ட உதவிகள் வழங்குதல் உள்ளிட்ட சமூக நலச் செயற்பாட்டு நிகழ்வுகளை மட்டும் மேற்கொண்டிட அறிவுறுத்துகிறேன்.
நமக்காக எல்லையில் போர் புரியும் நம் இராணுவ வீரர்கள் , நலமுடன் இருக்கவும், வெற்றி பெற்றிடவும் கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளிட்ட வழிபாட்டுத் தளங்களில், இறைவனிடம் பிரார்த்திக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.





















