மக்களுக்கு பிரச்சனையா?; ஓடோடி வந்த தமிழக வெற்றி கழகம் - சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு
சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களுக்கு இலவசமாக மனு எழுதித் தருவதற்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த தமிழக வெற்றி கழகத்தினர்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்று வருகிறது. இதில் சேலம் மாவட்டத்தில் அடிப்படை வசதிகள் உள்ளிட்ட பல்வேறு குறைகளை பொதுமக்கள் மனுக்களாக எழுதி மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்து வருகின்றனர். பின்னர் பொதுமக்கள் கொடுக்கப்பட்ட மனு உரிய அதிகாரிகளிடம் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதனைப் பெற்றுக் கொண்டு உடனடியாக மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைத்து அதற்கான தீர்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களிடம் மனு எழுதித் தருவதாக அதிக அளவு கட்டணம் வசூலிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வந்தது. இதனை அறிந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாநகர மாவட்ட செயலாளர் பார்த்திபன், தமிழக வெற்றி கழக நிர்வாகிகளுடன் சேர் உள்ளிட்ட பொருட்களை எடுத்து வந்து பொது மக்களுக்கு இலவசமாக தாங்கள் மனு எழுதி கொடுக்கப் போகிறோம் என மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருகை புரிந்தனர். இதனை அறிந்த சேலம் நகர காவல் துறையினர் உடனடியாக பொதுமக்களுக்கு மனு எழுதித் தருவதற்கு இலவசமாக அரசே ஏற்பாடு செய்து தருவதாக கூறி இருக்கின்றனர். இதனால் தாங்கள் திரும்பிச் செல்ல வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். அரசே மனு எழுதிக் கொடுப்பதாக இருந்தால் தாங்கள் திரும்பி செல்கிறோம் என தெரிவித்து திரும்பி சென்றனர்.
தமிழக வெற்றி கழகத்தினர் வருகை புரிந்ததை தொடர்ந்து அவசர அவசரமாக அரசு அதிகாரிகள் மனு எழுதுவதற்கு தற்காலிகமாக ஏற்பாடு செய்தது குறிப்பிடத்தக்கது. பொதுமக்களுக்கு மனு எழுதித் தருவதற்கு அதிகளவு கட்டணம் வசூலிப்பதை அறிந்த தமிழக வெற்றி கழகத்தினர் இலவசமாக தாங்கள் எழுதித் தருவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த சம்பவம் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதுகுறித்து தமிழக வெற்றி கழகத்தின் சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் பார்த்திபனிடம் கேட்டபோது, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம்தோறும் திங்கட்கிழமை நாட்களில் மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதற்கு ஒரு பொது மக்கள் மனுவை அதிக விலை கொடுத்து எழுதி வருவதாக எனது கவனத்திற்கு வந்தது. இதன் காரணமாக மக்கள் சிரமம் இன்றி இலவசமாக மனுவை எழுதி தருவதற்கு தமிழக வெற்றி கழகம் சார்பில் ஏற்பாடு செய்ய திட்டமிட்டும். அதன்படி, இன்று சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இலவச மனு எழுதி தருவதற்கு ஏற்பாடு செய்தோம். ஆனால் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள், மாவட்ட நிர்வாகம் சார்பில் கட்டணம் இன்றி பொதுமக்களுக்கு மனு எழுதித் தருவதற்கு ஏற்பாடு செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து நாங்கள் கலைந்து செல்கிறோம். பொதுமக்களுக்கு கட்டணம் இன்றி மனு எழுதுவதை மாவட்ட நிர்வாகம் நிறுத்தினால் உடனடியாக தமிழக வெற்றி கழகம் சார்பில் மீண்டும் இலவச மனு எழுதி தரப்படும் என்று தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

