EPS: திருப்பூரில் 3 பேர் படுகொலை... தினந்தோறும் கொலை, கொள்ளை - கொதித்தெழுந்த இபிஎஸ்
ஜி.எஸ்.டி வரி வாடகை கட்டடங்களுக்கு 18 சதவீதம் வசூலிக்கப்படுவதை திமுக அரசு, மத்திய அரசோடு தொடர்பு கொண்டு, இதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கூறினார்.

சேலம் மாவட்டம் ஓமலூர் உள்ள அதிமுக புறநகர் அலுவலகத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சேலம் மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், மதுரை மாவட்டம் மேலூர் தொகுதியில் நாய்க்கன்பட்டி பகுதியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதித்ததாக அந்தப் பகுதி மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த சுரங்கம் அமைத்தால் கடுமையான பாதிப்பு ஏற்படும் என மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த சுரங்கம் அமைக்க திமுக அரசு கடந்த அக்டோபர் மாதத்தில் அனுமதி கேட்டு மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது. மக்கள் எதிர்ப்பு தெரிவித்தவுடன் தற்போது ரத்து செய்ய வேண்டும் என கடிதம் எழுதி முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு நாடகத்தை அரங்கேற்றியுள்ளார்.
திருப்பூர் மாவட்டத்தில் மூன்று பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் தினந்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் துன்புறுத்தல் சம்பவம் தொடர்ந்து நிகழ்கிறது. இதுகுறித்து திமுக அரசாங்கம் கண்டு கொள்வதே இல்லை. சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி இருக்கிறது. சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டு விட்டது.

ஜி.எஸ்.டி வரி வாடகைக் கட்டடங்களுக்கு 18 சதவீதம் வசூலிக்கப்படுவதை கண்டித்து வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திமுக அரசு, மத்திய அரசோடு தொடர்பு கொண்டு, இதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். கொரோனா காலத்தில் வணிகர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். அவர்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கும் வகையில் மத்திய-மாநில அரசுகள் வரிமேல் வரி போடக்கூடாது.
நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் கனமழை காரணமாக நெற்பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த விவசாயிகளுக்கு திமுக அரசு உரிய இழப்பீடு உடனடியாக வழங்க வேண்டும்.
அதிமுக அரசு இருக்கும் வரை சொத்து வரி ஏற்காமல் பார்த்துக் கொண்டோம். ஆட்சி மாற்றத்திற்கு பிறகு திமுக ஆட்சியில் சொத்து வரியை அதிகளவில் ஏற்றி விட்டு எங்கள் மீது பழி போட்டு தப்பிக்க பார்க்கிறார்கள். எதற்கெடுத்தாலும் மத்திய அரசை எதிர்த்து போராட்டம் நடத்தும் திமுக அரசு சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும் என போராட்டம் நடத்தாது ஏன். ஆட்சி அதிகாரம் அவர்களிடத்தில் உள்ளது. எங்களிடத்தில் பழி போட்டு தப்பிக்க பார்க்கிறார்கள். உயர்த்தப்பட்ட சொத்து வரியை ரத்து செய்ய வேண்டும். தேர்தலின் போது வாக்குறுதி அளித்த திமுக வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை. சொத்து வரி உயர்த்த மாட்டோம் என வாக்குறுதி அளித்து விட்டு தற்போது உயர்த்தி வருகிறார்கள். பொய்யான வாக்குறுதியை நம்பி மக்கள் வாக்களித்ததால் திமுக ஆட்சிக்கு வந்தது. ஆட்சிக்கு வருவதற்காக எதாவது பொய்களை சொல்லி ஆட்சிக்கு வந்து விட்டு, தற்போது சாக்கு போக்குகளை சொல்லி வருகிறார்கள்.
வேளாண் பாதுகாப்பு மண்டலம் மாநிலப் பட்டியலில் வருகிறது. 2006-2011 திமுக ஆட்சி காலத்தில் டெல்டா மாவட்டங்களில் மீத்தேன் எடுக்க ஒப்பந்தம் போடப்பட்டது. அதனை தடுத்து நிறுத்தி ரத்து செய்து அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது. சட்ட ஆலோசகர்களை ஆலோசித்து, சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து ஆளுநர் வாயிலாக சட்டம் ஆக்கியுள்ளோம். அப்போது மத்திய அரசுக்கு கடிதம் எழுதினோம். மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரிடம் கடிதம் நேரில் வழங்கப்பட்டது. வேளாண்துறை மாநில பட்டியலில் வருவதால் மாநில அரசே சட்டம் இயற்றலாம் என அப்போதைய மத்திய அமைச்சர் கூறிவிட்டார். அதன்பிறகே டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டு சட்டம் இயற்றப்பட்டது.

முல்லைப் பெரியாறு பாசனப் பகுதியையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க திமுக அரசு முன்வர வேண்டும். முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 142 அடியாக உயர்த்த உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி நீர்மட்டம் உயர்த்தப்பட்டது. 152 அடியாக உயர்த்திடும் வகையில் அணையின் உறுதித்தன்மையை ஆராய குழு அமைக்கப்பட்டது. அதற்குண்டான நடவடிக்கை எடுக்கப்பட்டது. முல்லைப் பெரியாறு அணையை பலப்படுத்துவதற்கு அதிமுக ஆட்சியின் போது கேரள அரசு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. திமுக ஆட்சிக்கு வந்தபிறகு அந்தப் பணிகள் கிடப்பில் போடப்பட்டுவிட்டன.
கூட்டணி வருபவர்கள் கோடிக்கணக்கில் பணம் கேட்பதாக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியது குறித்த கேள்விக்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, திமுக கொடுத்ததைத்தான் அவர் சொல்கிறார். எங்களிடம் எப்படி அவர்கள் வருவார்கள். திமுகதான் கணக்கிலேயே கோடிக்கணக்கான பணத்தை கூட்டணி கட்சிகளுக்கு கொடுக்கிறது. 10 கோடி 15 கோடி கணக்கிலேயே கொடுக்கும் போது அவர்கள் எங்களிடம் எப்படி வருவார்கள் என்ற பொருள்படியே திண்டுக்கல் சீனிவாசன் பேசினார் என்றார்.
அதிமுக கள ஆய்வுக் கூட்டங்கள் கலவரக் கூட்டங்களாக நடப்பதாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியது குறித்து கேட்டதற்கு பதிலளித்த எடப்பாடி பழனிசாமி, அவர் மிகுந்த அனுபவம் உள்ளவர். இப்போதுதான் வந்திருக்கிறார். கலவரக் கூட்டம் திமுகவில் தான் நடந்தது. அதை அவர் மறந்து பேசுகிறார். மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா வீட்டில் திமுகவினர் தாக்குதல் நடத்தினர். அது புகார் கொடுக்க காவல்நிலையம் சென்றபோது அடித்து உதைத்தனர். அதுதான் கலவரம். அவர்களுடைய கட்சிதான் கலவரக் கட்சி.
அதிமுக ஆரோக்கியமான கட்சி. திமுக போல அடிமையான கட்சி இல்லை. சுதந்திரமாக செயல்படுகிற கட்சி. வாரிசு அரசியலுக்கு இடமில்லை. கட்சிக்கு உழைப்பவர்கள் யாராக இருந்தாலும் பதவிக்கு வரலாம். அதிமுக கூட்டத்தில் கருத்து சுதந்திரம் உள்ளது. கருத்துக்களை பரிமாறி நல்ல ஆலோசனைகளை பெற்று வருகிறோம். திமுக போல விருந்து போட்டு செல்லும் கூட்டம் எங்களுடையது இல்லை என்று கூறினார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















