வீட்டில் இருந்து கிளம்பிய குழந்தை சடலமாகத் திரும்பிய கொடுமை - வேன் சக்கரத்தில் சிக்கி பிஞ்சு உயிர் பலி
சேலத்தில் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 3-ஆம் வகுப்பு மாணவி பரிதாப பலி - ஓட்டுநர் கைது.

ஏற்காட்டில் பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 3-ஆம் வகுப்பு மாணவி பரிதாபமாக உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்..
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இன்று காலை பள்ளி வேன் சக்கரத்தில் சிக்கி 3-ஆம் வகுப்பு மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.ஏற்காடு மற்றும் அதைச் சுற்றியுள்ள மலைக்கிராமங்களில் போதிய பேருந்து வசதிகள் இல்லாத காரணத்தினால், பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகளைத் தனியார் வேன்களில் பள்ளிக்கு அனுப்பி வருகின்றனர். அந்த வகையில், வாழவந்தி பகுதியைச் சேர்ந்த மேகனா என்ற சிறுமி, இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்குத் தனியார் வேன் மூலம் சென்றுள்ளார்.
பள்ளியை வேன் சென்றடைந்ததும், ஓட்டுநர் மற்ற குழந்தைகளை கீழே இறக்கிவிட்டுள்ளார். பின்னர், வேனை கவனக்குறைவாகப் பின்னோக்கி எடுத்தபோது, எதிர்பாராத விதமாகச் சிறுமி மேகனா வேனின் சக்கரத்தில் சிக்கிக் கொண்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்து அந்தப் பிஞ்சு குழந்தை சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது.
தகவலறிந்து விரைந்து வந்த ஏற்காடு போலீஸார், சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீஸார், மாணவி மீது வேனை ஏற்றி விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் ரங்கநாதனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தக் கோர விபத்து ஏற்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மலைக்கிராமங்களில் இருந்து கல்வி பயிலச் செல்லும் மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்ய, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்களும், பெற்றோர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Before You Go
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
ட்ரெண்டிங் செய்திகள்






















