Mettur Dam: மேட்டூர் அணையின் நீர்வரத்து மீண்டும் சரிவு... இன்றைய நீர் நிலவரம் இதோ!
சேலம் : மேட்டூர் அணை நீர்வரத்து, நேற்று மாலை வினாடிக்கு, 12,181 கனஅடியாக சரிந்தது.

மேட்டூர் அணை நீர்வரத்து, வினாடிக்கு 12,181 கனஅடியாக சரிந்தது
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையின் மொத்த நீர்மட்டம், 120 அடி. கர்நாடகா காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில், தீவிரமடைந்த தென்மேற்கு பருவ மழையால் கபினி, கே.ஆர்.எஸ்., அணைகளின் நீர்வரத்து அதிகரித்தது. அதற்கேற்ப, 4 நாட்களுக்கு முன்பு கபினியில் இருந்து வினாடிக்கு, 25,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
அந்த நீரின் ஒரு பகுதி வந்தடைந்ததால் கடந்த, 20ல் வினாடிக்கு, 8,218 கனஅடியாக இருந்த மேட்டூர் அணை நீர்வரத்து கடந்த, 21 மாலை, 4:00 மணிக்கு வினாடிக்கு, 22,469 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து, கடந்த இரு நாட்களாக டெல்டா பாசனத்துக்கு வினாடிக்கு, 18,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.
கபினியில் திறந்த நீர் குறைந்ததால், நேற்று முன்தினம் வினாடிக்கு, 21,200 கனஅடியாக இருந்த அணை நீர்வரத்து நேற்று காலை, 8:00 மணிக்கு, 18,068 கனஅடியாகவும், மாலை, 4:00 மணிக்கு, 12,181 கனஅடியாகவும் குறைந்தது. நீர்திறப்பை விட, வரத்து குறைந்ததால் நேற்று முன்தினம், 114.06 அடியாக இருந்த மேட்டூர் அணை நீர்மட்டம் நேற்று மாலை, 113.87 அடியாக சரிந்தது.
வால்பாறை; பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், பாசன விவசாயிகள் மகிழ்ச்சி
வால்பாறையில் கடந்த மே மாதம் இறுதியில், தென்மேற்குப் பருவமழை துவங்கி, தொடர்ந்து பெய்கிறது. இடையிடையே வெயில் நிலவி வந்த நிலையில், கடந்த, 20 நாட்களாக வால்பாறை நகர் மற்றும் எஸ்டேட் பகுதியில், இடைவிடாமல் கனமழை பெய்கிறது.
இதனால், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான மேல்நீராறு, கீழ்நீராறு, அக்காமலை, சிறுகுன்றா கூழாங்கல் ஆறு, கெஜமுடி டனல் உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து வெகுவாக அதிகரித்துள்ளது. காற்றுடன் கனமழை நீடிப்பதால், பல்வேறு இடங்களில் மரம் விழுந்தும், மண் சரிந்தும் பாதிப்பு ஏற்பட்டது. தொடர்மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
நீர்வரத்து அதிகரிப்பு எதிரொலி வைகை அணை நீர்மட்டம் உயர்வு
பருவமழை தீவீரமடைந்துள்ள நிலையில், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 142 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 2,703 கனஅடி தண்ணீர் வரத்தாக உள்ளது. அணையிலிருந்து வினாடிக்கு, 863 கனஅடி வீதம் தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கு திறந்துவிடபட்டுள்ளது. இதே போல், 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் நேற்று காலை, 42.34 அடியாக உயர்ந்தது. பி.ஏ.பி., அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், பாசன விவசாயிகளின் மனமும் குளிர்ந்தது.





















