TVK Vijay: 'U‘ டர்ன் அடித்த விஜய்; ஆளுநர் மாளிகைக்கு கிளம்பி, பாதியில் திரும்பினார்; மீண்டும் தள்ளிப்போகும் பதவியேற்பு
தவெகவிற்கு பெரும்பான்மை கிடைத்த நிலையில், ஆளுநரை மீண்டும் சந்திப்பதற்காக கிளம்பிய விஜய், பாதியில் வீடு திரும்பியுள்ளார். அவரை சந்திக்க ஆளுநர் மறுத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விசிகவும் ஆதரவு தெரிவித்த நிலையில், தவெக தலைவர் விஜய் ஆளுநரை மீண்டும் சந்திப்பதற்காக நேரம் கேட்டு, ஆளுநர் மாளிகைக்கு கிளம்பினார். ஆனால், அவர் பாதி வழியிலேயே அவர் வீடு திரும்பியுள்ளார். ஆளுநர் அவரை சந்திக்க நேரம் ஒதுக்காததால், விஜய்யின் பதவியேற்பு மீண்டும் தள்ளிப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
பெரும்பான்மையை விட கூடுதல் இடங்களை பெற்ற தவெக
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் 108 இடங்களில் வெற்றிபெற்று தனிப்பெரும் கட்சியாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் உருவெடுத்தது. அந்த அடிப்படையில், ஆளுநரை சந்தித்த விஜய், ஆட்சி அமைக்க அழைக்குமாறு கடிதம் வழங்கினார். ஆனால், ஆளுநர் அவரை அழைக்கவில்லை.
இதனிடையே, பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை பெற, திமுக கூட்டணி கட்சிகளிடம் விஜய் ஆதரவு கோரினார். அதைத் தொடர்ந்து, 5 சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற காங்கிரஸ் உடனடியாக விஜய்யுடன் கூட்டணி சேர்வதாக அறிவித்து, திமுகவிற்கு அதிர்ச்சி அளித்தது.
தொடர்ந்து, சிபிஐ மற்றும் சிபிஎம் கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன. ஆனால், அவர்கள் திமுக கூட்டணியில் தொடர்வதாகவும், வெளியில் இருந்து தவெகவிற்கு ஆதரவு அளிப்பதாகவும் தெளிவுபடுத்தியுள்ளனர். இதனிடையே, விசிக மட்டும் தங்களது முடிவை கூறாமல் இரண்டு நாட்களாக இழுத்தடித்து வந்தது.
இந்நிலையில், சற்று முன்னர் தான் தங்களது ஆதரவு கடிதத்தை விசிக தவெகவிடம் வழங்கியது. அதோடு, புதிய திருப்பமாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-ம் தவெகவிற்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்தது. இதையடுத்து, தவெகவிற்கு மொத்தம் 120 இடங்கள் கிடைத்துள்ளன.
சந்திக்க மறுத்த ஆளுநர்
இதைத் தொடர்ந்து, ஆளுநரை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காக, விஜய் நேரம் கேட்டுவிட்டு, ஆளுநர் மாளிகைக்கு கிளம்பிச் சென்றார். ஆனால், செல்லும் வழியிலேயே, ஆளுநர் நேரம் ஒதுக்கவில்லை என்ற தகவல் கிடைக்கவே, அவர் அப்படியே யூ டர்ன் அடித்து, மீண்டும் வீடு திரும்பியுள்ளார். இதையடுத்து, ஆளுநருக்கு கடும் கண்டனங்கள் எழுந்துவருகின்றன.
மீண்டும் தாமதமாகும் பதவியேற்பு
தவெக தலைவர் விஜய் இன்று மாலை ஆளுநரை சந்தித்து, பெரும்பான்மை கடிதத்தை வழங்கி, அவரை உடனடியாக ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தால், திங்கட் கிழமை விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராக பதவியேற்றிருப்பார். ஆனால், அவரை சந்திக்க ஆளுநர் மறுத்துவிட்டதால், விஜய் முதலமைச்சராக பதவியேற்பது மீண்டும் தள்ளிப் போயுள்ளது.
இதனிடையே, பெரும்பான்மை கடிதத்தை நாளை ஆளுநர் மாளிகையில் ஒப்படைக்குமாறு ஆளுநர் அலுவலகம் விஜய்யிடம் தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆளுநர் இன்று இரவு கேரளா செல்ல உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகியிருந்த நிலையில் தான், தற்போது ஆளுநர் விஜய்க்கு சந்திப்பிற்கான நேரம் ஒதுக்கவில்லை என்று கருதப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















