இந்த கேள்வியை விஜயிடம்தான் கேட்க வேண்டும். எங்களிடம் கேட்கக் கூடாது - சீறிய பிரேமலதா
விஜய் எடுபடுவாரா, இல்லையா என்பது நான் சொல்ல முடியாது. அவரின் செயல்பாடுகளைப் பொறுத்துதான் இருக்கிறது. நான் என்ன ஜோசியமா சொல்ல முடியும் - பிரேமலதா

தேமுதிக கொடி நாள்
2000 - ம் ஆண்டு பிப்ரவரி 12 ஆம் தேதி தேமுதிகவின் கட்சிகொடி அறிமுகம் செய்யப்பட்டது. அந்த நாளை தேமுதிக சார்பில் கொடி நாளாகக் கடைபிடித்து வருகிறார்கள். இன்று தேமுதிக கொடி நாள் வெள்ளி விழாவையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் தேமுதி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சிக் கொடி ஏற்றினார். தொடர்ந்து, உறுதி மொழியை பிரேமலதா விஜயகாந்த் வாசிக்க, கட்சித் தொண்டர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தேமுதிக துணை பொதுச் செயலாளர் சுதீஷ் மற்றும் விஜய பிரபாகரன், தேமுதிக தொண்டர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதன் பின்னர் பிரேமலதா விஜயகாந்த் பொது மக்களுக்கு சேலை வேட்டி , அன்னதானம் வழங்கினார்.
பின்பு செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது ,
தேமுதிக கொடிநாள் வெள்ளி விழாவை தலைமை கழகம் மற்றும் தமிழகம் முழுவதும் பறக்க இருக்கிறது. 2000ஆம் ஆண்டு தேமுதிக கொடி அறிவிக்கப்பட்ட போது கின்னஸ் சாதனைக்கு என இணையாக தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கழக கொடி ஏற்றப்பட்டது. கேப்டனின் ஆசிர்வாதத்துடன் கொண்டாடுகிறோம். கொடி நாளை முன்னிட்டு தமிழக முழுவதும் ஒரு மாதத்திற்கு பொது கூட்டங்கள் நடத்த அறிவித்திருக்கிறோம்.
ராஜ்யசபா யார் செல்வார்கள் ?
கூட்டணி அமைத்த போதே கையெழுத்திடப்பட்டு உறுதி செய்யப்பட்டது தான் ராஜ்ய சபா பதவி. அந்த ராஜ்யசபா தேர்வுக்கான நாள் வரும் போது , தேமுதிக சார்பாக யார் ராஜ்யசபா செல்ல உள்ளார்கள் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்.
இந்த கேள்வியை எங்களிடம் கேட்காதீங்க
விஜயுடன் நாங்கள் கூட்டணி அமைப்போமா என்பதை விஜயிடம்தான் கேட்க வேண்டும். நாங்கள் இருபது வருடக் கட்சி, இந்த கேள்வியை எங்களிடம் கேட்கக் கூடாது. ஏற்கனவே நாங்கள் எந்த கூட்டணியில் இருக்கிறோம் என்பதை ஒவ்வொரு முறையும் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறேன்.
அதிமுகவின் உட்கட்சி பிரச்சனை தொடர்பான கருத்துக்களை கூற நான் விரும்பவில்லை. ஜெயக்குமார் ஒரு கருத்தும் செங்கோட்டையன் ஒரு கருத்தும் கூறுகிறார்கள். இதில் எது உண்மை பொய் என்பதை அதிமுகவிடம் தான் கேட்க வேண்டும். 2026 இல் தேமுதிக இருக்கும் கூட்டணி மகத்தான வெற்றி பெற்று, கேப்டன் கனவை வென்றெடுப்போம். 234 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும்.
முதல்வர் மருந்தகம் குறித்த கேள்விக்கு,
வரவேற்கத்தக்கது ஏற்கனவே மத்திய அரசு இதே திட்டம் வைத்துள்ளது. ஏற்கனவே ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது இந்த திட்டம் இருந்தது. அதனை பின்பற்றி இன்று இவர்கள் அறிவிக்கின்றார்கள். இது தாமதமான ஒன்று. மக்களுக்கான திட்டமாக இருந்தால் வெற்றி பெற்று வந்த போதே அறிவித்திருக்க வேண்டும். இவ்வளவு நாட்களுக்கு பின்பாக தேர்தலுக்கு முன்பு அறிவிப்பது கண் துடைப்பு தான் என்றார்.
விஜய் அரசியலில் எடுபடுவாரா ? என்ற கேள்விக்கு ,
அவர் எடுபடுவாரா இல்லையா என்பது நான் சொல்ல முடியாது. அவரின் செயல்பாடுகளை பொறுத்துதான் இருக்கிறது. நான் என்ன ஜோசியமா சொல்ல முடியும் என்றார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

