அமைதி காத்தது போதும்.! அதிரடியாக களத்தில் இறங்கும் விஜய்- தவெக வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Tvk vijay: ஜனநாயகன் திரைப்படம், கரூர் விவகாரம் சிபிஐ விசாரணையால் தவெக சிக்கி தவித்து வரும் நிலையில், கடந்த ஒரு மாத காலமாக அமைதி காத்து வந்த விஜய், வருகிற 25ஆம் தேதி தவெக கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளார். இந்த கூட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் தொடர்பாக முக்கிய அறிவிப்பு வெளியாகவுள்ளது.

அடுத்தடுத்து சிக்கலில் தவிக்கும் தவெக
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திமுக- அதிமுக என இரண்டு கட்சிகளும் அதிரடியாக களத்தில் இறங்கியுள்ள நிலையில், இந்த கட்சிகளுக்கு டப் கொடுக்கும் வகையில் தவெகவும் போட்டியில் குதித்துள்ளது. அந்த வகையில் கடந்த 2024ஆம் ஆண்டு தவெக என்ற கட்சியை தொடங்கிய விஜய், இரண்டு மாநில மாநாட்டையும் நடத்தி முடித்தார். இதனையடுத்து மக்களை சந்திக்கும் வகையில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் செல்ல திட்டமிட்ட நிலையில், கரூரில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால் 2 மாதங்கள் கட்சி எங்கிருக்கிறது என தெரியாத வகையில் அமைதி நிலைக்கு சென்றது தவெக.
சிக்கலில் ஜனநாயகன்
இதனையடுத்து விஜய் நடித்த கடைசி திரைப்படமான ஜனநாயகன் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. இதனை எதிர்ப்பார்த்து ரசிகர்கள் ஆவலோடு காத்திருந்த நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் சென்சார் போர்டால் படத்தை வெளியிட முடியாத நிலை உருவானது. படத்தை வெளியிட உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என அடுத்தடுத்து வழக்குகள் தொடரப்பட்ட நிலையில், இன்னும் முடிவு கிடைக்காத நிலை உள்ளது. எனவே இது ஒரு பக்கம் இருக்கும் நிலையில், கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணையும் தீவிரம் அடைந்துள்ளது.
டெல்லியில் நடைபெற்ற சிபிஐ விசாரணைக்கு தவெக நிர்வாகிகள் அடுத்தடுத்து அழைக்கப்பட்ட நிலையில், கடைசியாக தவெக தலைவர் விஜய்யையும் இரண்டு நாட்களாக சிபிஐ விசாரணை நடத்தியது. அப்போது விஜய்க்கு எதிராக பல்வேறு கிடுக்கிப்பிடி கேள்விகள் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே ஜனநாயகன் திரைப்படம், சிபிஐ விசாரணை போன்ற சிக்கலில் தவெக தவித்து வரும் நிலையில், எந்த வித கருத்தையும் தெரிவிக்காமல் விஜய் அமைதி காத்து வந்தார். இதனால் விஜய் எங்கே இருக்கிறார். என்ன செய்கிறார் என்ற கேள்வி எழுந்த நிலையில், தற்போது மீண்டும் அரசியல் களத்தில் இறங்கவுள்ளார்
தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய்
இது தொடர்பாக தவெக வெளியிட்டுள்ள அறிக்கையில், வரும் 25ஆம் தேதி (25.01.2026, ஞாயிற்றுக்கிழமை) காலை 10.30 மணிக்கு மாமல்லபுரம் ஃபோர் பாயிண்ட்ஸ் பை ஷெரட்டனில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் கலந்துகொள்ளும் மாநில, மாவட்ட அளவிலான கழகச் செயல்வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில், சட்டமன்றத் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கூட்டத்திற்கு பிறகு தவெக தலைவர் விஜய்யின் அரசியல் சூடு பிடிக்கும் என அவரது ஆதரவாளர்கள் தெரிவித்து வருகிறார்கள்.





















