”சைக்கோ”முன்னாள் முதலமைச்சரை திட்டிய பிரபல எம்.எல்.ஏ! சட்டசபையில் நடந்த களோபரம்!
தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ நந்தமுரி பாலகிருஷ்ணா, ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியை சைக்கோ என்று அழைத்ததால் ஆந்திர சட்டமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏவும் நடிகருமான நந்தமுரி பாலகிருஷ்ணா (பாலையா) ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டியை சைக்கோ என்று அழைத்ததால் ஆந்திர சட்டமன்றத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஜெகன் மோகன் ரெட்டியை திட்டிய பாலையா:
ஆந்திராவில் சட்டசபை நடைபெற்று வருகிறது. இதில் பேசிய பாஜக முன்னாள் எம்.எல்.ஏ காமினேனி ஸ்ரீனிவாஸ், கடந்த முறை ஆந்திராவில் ஆட்சியில் இருந்த ஒய்.எஸ்.ஆர்.சி.பி அரசு தெலுங்கு திரைப்படத்துறையை புறக்கணித்ததாக குற்றாம் சாட்டினார். ஜெகன் மோகன் ரெட்டி முதலமைச்சராக இருந்த காலக்கட்டத்தில் தெலுங்கு திரைப்படத்துறையினர் அவரை சந்திக்க முயன்றதாகவும் ஆனால் இதையெல்லாம் ஜெகன் மோகன் ரெட்டி புறக்கணித்ததாகவும் பாஜக எம்.எல்.ஏ காமினேனி கூறியுள்ளார்.
அதேபோல், மெகா ஸ்டார் சிரஞ்சீவி இந்த விவகாரத்தில் தலையிட்ட பின்னரே ஜெகன் மோகன் ரெட்டி தெலுங்கு திரைப்படத்துறை பிரதிநிதிகளுடன் பேச ஒப்புக்கொண்டதாகவும் கூறினார். அப்போது குறிக்கிட்ட தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏ நந்தமுரி பாலகிருஷ்ணா ஜெகன் ஒரு சைக்கோ என்று கூறினார்.
கடுப்பான ஜெகன் மோகன் கட்சியினர்:
பாலகிருஷ்ணாவின் இந்த பேச்சு ஆந்திர சட்டமன்றத்தில் கடும் சீற்றத்தை தூண்டியது. ஓ.எஸ்.ஆர்.சி.பி கட்சியினர் கடும் கண்டனங்களை முன்வைத்தனர். பாலகிருஷ்ணானின் இந்த பேச்சு வெட்கக்கேடானது என்று தங்களது கண்டனத்தை பதிவு செய்தனர். ஜெகன் மோகன் ரெட்டியின் கட்சியை சேர்ந்த மூத்த் நிர்வாகி பெர்னி வெங்கடராமையா பேசுகையில், “சட்டசபை என்பது திரைப்பட வசனங்களை பேசக்கூடிய இடம் அல்ல. பாலகிருஷ்ணாவிற்கு ஜெகன் மோகன் ரெட்டி தனிப்பட்ட முறையில் நிறைய உதவிகள் செய்திருக்கிறார்.
அகண்டா திரைப்படத்தின் போது அப்போதையை முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டியை சந்திக்க முயற்சி செய்தார். மேலும், “பாலகிருஷ்ணாவின் வீட்டில் துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற போது ஜெகன் மோகன் ரெட்டி தான் உதவி செய்தார்”என்றும் கூறினார்.





















