அதிமுக ஒற்றுமை பற்றி லீமா ரோஸ் மார்ட்டின் சொன்ன ஒரு வரி... அரசியலில் புதிய சிக்னலா.?
அதிமுகவில் விரைவில் அனைவரும் ஒன்றிணைவார்கள் என லால்குடி எம்எல்ஏ லீமா ரோஸ் மார்ட்டின் கோவையில் தெரிவித்தார்.

லீமா ரோஸ் மார்ட்டின், அதிமுகவில் அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாகவும், விரைவில் அனைவரும் ஒன்றிணைவார்கள் என்றும் தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்திற்கு வந்திருந்த திருச்சி லால்குடி தொகுதி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் லீமா ரோஸ் மார்ட்டினுக்கு உறவினர்கள் மற்றும் கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். அவருக்கு மாலை அணிவித்தும், சால்வை போர்த்தியும், பூங்கொத்து வழங்கியும் வரவேற்றனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த லீமா ரோஸ் மார்ட்டின், தமிழகத்தின் முன்னேற்றம் மற்றும் தொகுதி வளர்ச்சியை முன்னிட்டு கூட்டணிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கான “புதுமைப்பெண்” திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 வழங்கப்படுவது வரவேற்கத்தக்க நடவடிக்கை என கூறினார்.
அதேபோல், “சிங்கப்பெண்” திட்டத்தையும் தாம் வரவேற்பதாக தெரிவித்த அவர், மகளிர் குடும்பத் தொகை திட்டத்தின் கீழ் பெண்களுக்கு தொடர்ந்து ரூ.1,000 வழங்கப்படுவது மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
தமிழக அரசின் நடவடிக்கைகளில் முக்கியமாக 717 மதுபானக் கடைகள் மூடப்பட்டிருப்பது குடும்ப பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதிமுக கட்சியில் நிலவி வரும் உள்கட்சி பிரச்சினைகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, “அனைவரையும் ஒருங்கிணைக்கும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. விரைவில் அனைவரும் ஒரே அணியாக செயல்படுவார்கள்” என லீமா ரோஸ் மார்ட்டின் தெரிவித்தார்.
இந்த பேட்டி அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது.
ட்ரெண்டிங் செய்திகள்






















