மயிலாடுதுறையில் திக்.. திக்.. நிமிடங்கள்... மிரட்டிய மின்னஞ்சல்..! பதற்றமான நீதிமன்ற வளாகம்..
நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்களுக்கு மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்தில் சமீபகாலமாக பொது இடங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாக வெடிகுண்டு மிரட்டல்கள் வருவது தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில், 2026 ஏப்ரல் 2-ஆம் தேதி வியாழக்கிழமை அன்று நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்தச் சம்பவம் அப்பகுதிகளில் பெரும் பரபரப்பையும், பொதுமக்கள் மற்றும் வழக்கறிஞர்களிடையே அச்சத்தையும் ஏற்படுத்தியது.
நாகப்பட்டினம் நீதிமன்றச் சம்பவம்
நாகப்பட்டினம் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தின் அதிகாரப்பூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு வியாழக்கிழமை காலை ஒரு மர்ம மின்னஞ்சல் வந்தது. அதில், நீதிமன்ற வளாகத்திற்குள் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாகவும், அது எந்த நேரத்திலும் வெடிக்கக்கூடும் என்றும் மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
இதனைப் பார்த்த நீதிமன்ற ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து, உடனடியாக நாகை மாவட்ட காவல் அலுவலகத்திற்குத் தகவல் தெரிவித்தனர். தகவலின் தீவிரத்தை உணர்ந்த காவல் துறையினர், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் விரைந்து செயல்பட்டனர். வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் நீதிமன்ற வளாகம் முழுவதும் சல்லடை போட்டுத் தேடப்பட்டது.
சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீதிமன்றத்தின் ஒவ்வொரு அறையும், வளாகத்தின் மூலை முடுக்குகளும் சோதனையிடப்பட்டன. வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தற்காலிகமாக வெளியேற்றப்பட்டனர். தீவிரத் தேடுதல் வேட்டைக்குப் பிறகு, சந்தேகத்திற்கிடமான பொருட்கள் ஏதும் கண்டறியப்படாததால் அது வெறும் 'புரளி' என்பது உறுதி செய்யப்பட்டது. இருப்பினும், கடந்த சில நாட்களுக்கு முன்பும் இதேபோல் ஒரு மிரட்டல் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மயிலாடுதுறை நீதிமன்றத்தில் பரபரப்பு
நாகையில் சோதனை நடந்து கொண்டிருந்த அதே வேளையில், மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கும் இதேபோன்ற ஒரு மின்னஞ்சல் மிரட்டல் வந்தது. மயிலாடுதுறை மாவட்ட அமர்வு நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்திக்கு வந்த இந்த மின்னஞ்சல் குறித்து அவர் உடனடியாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கோ. ஸ்டாலினுக்குத் தகவல் அளித்தார்.
இதனைத் தொடர்ந்து, டிஎஸ்பி பாலாஜி தலைமையில் வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர் கருவிகளுடன் போலீஸார் நீதிமன்றத்திற்கு விரைந்தனர். பாதுகாப்பு கருதி நீதிமன்றத்தின் மூன்று தளங்களில் உள்ள நீதிமன்ற அறைகள், நீதிபதிகள் அறைகள், அலுவலகங்கள் மற்றும் வழக்கறிஞர்கள் சங்க அறைகள் என அனைத்தும் காலியாக்கப்பட்டு விரிவான சோதனை நடத்தப்பட்டது.
நீதிபதியின் அறிவுரை மற்றும் விசாரணை
சோதனை நிறைவடைந்த பின்னர், வெடிகுண்டுகள் ஏதும் இல்லை என்பது உறுதியானதும், மாவட்ட அமர்வு நீதிபதி எல்.எஸ். சத்தியமூர்த்தி ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்களிடம் பேசினார். பீதியடையத் தேவையில்லை என்றும், பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் அனைவரும் மீண்டும் பணிக்குத் திரும்பலாம் என்றும் அவர் அறிவுறுத்தினார். அதன் பின்னரே நீதிமன்றப் பணிகள் இயல்பு நிலைக்குத் திரும்பின.
சைபர் க்ரைம் விசாரணை
இந்தத் தொடர் மிரட்டல்கள் குறித்து நாகை மற்றும் மயிலாடுதுறை மாவட்ட சைபர் க்ரைம் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மின்னஞ்சல் எங்கிருந்து அனுப்பப்பட்டது, அதன் ஐபி முகவரி (IP Address) என்ன என்பது குறித்துத் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.
தொடர் மிரட்டல்களின் பின்னணி
நாகை மற்றும் மயிலாடுதுறை மட்டுமல்லாது, அதே நாளில் புதுக்கோட்டை, அரியலூர், நாகர்கோவில் மற்றும் விழுப்புரம் ஆகிய மாவட்ட நீதிமன்றங்களுக்கும் மின்னஞ்சல் வழியாக மிரட்டல்கள் வந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக நாகர்கோவில் நீதிமன்றத்திற்கு இது 4-ஆவது முறை விடுக்கப்படும் மிரட்டலாகும். இத்தகையச் செயல்கள் நீதிமன்றப் பணிகளை முடக்குவதற்காகச் செய்யப்படுகிறதா அல்லது சமூக விரோதிகளின் விஷமத்தனமா என்பது குறித்துப் புலனாய்வுத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
நீதித்துறை போன்ற மிக முக்கியமான இடங்களில் இத்தகைய மிரட்டல்கள் விடுக்கப்படுவது பெரும் கவலையை அளிக்கிறது. இது போன்ற மிரட்டல் விடுபவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது. பொதுமக்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய அனைத்து நீதிமன்ற வளாகங்களிலும் கூடுதல கண்காணிப்புக் கேமராக்கள் மற்றும் பாதுகாப்பு சோதனைகளைத் தீவிரப்படுத்த வேண்டியது அவசியமாகிறது எனவும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
























