மயிலாடுதுறையில் இந்த ஆண்டில் மட்டும் 19 பேருக்கு நேர்ந்த கதி: காவல் துறையின் அதிரடி ரிப்போர்ட்!
மயிலாடுதுறை கோனேரிராஜபுரம் பேருந்து நிலையத்தில் பட்டாக்கத்தியுடன் பொதுமக்களை மிரட்டிய சரித்திரப் பதிவேடு ரௌடி வெற்றிவேல் குண்டர் சட்டத்தில் கடலூர் சிறையிலடைக்கப்பட்டார்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் கோனேரிராஜபுரம் பேருந்து நிலையம் அருகே பொதுமக்களை பட்டாக் கத்தியைக் காட்டி கொலை மிரட்டல் விடுத்த வழக்கில், சரித்திரப் பதிவேடு ரௌடி ஒருவரை மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் காவல் துறையினர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்து சிறையிலடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், மாவட்டத்தில் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த காவல் துறை எடுத்து வரும் தீவிர நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
பேருந்து நிலையத்தில் பயங்கரம்
மயிலாடுதுறை மாவட்டம், பாலையூர் காவல் சரகத்திற்குட்பட்ட முஷ்டக்குடி மெயின்ரோடு பகுதியைச் சேர்ந்தவர் வேலுசாமி. இவருடைய மகன் வெற்றிவேல் (வயது 23). இவர் அப்பகுதியில் தொடர்ந்து பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்ததால், பாலையூர் காவல் நிலையத்தில் இவர் மீது 'போக்கிரி சரித்திரப் பதிவேடு' (History Sheeter) துவங்கப்பட்டு, காவல் துறையினரின் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த ஜூன் மாதம் 22-ம் தேதி (22.06.2026) கோனேரிராஜபுரம் பேருந்து நிலையம் அருகில் வெற்றிவேல் கையில் ஒரு ஆபத்தான பட்டாக் கத்தியை வைத்துக்கொண்டு, அவ்வழியாகச் சென்ற பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளார். பொதுமக்களை நோக்கிப் பயங்கரமான வார்த்தைகளால் பேசியதுடன், அவர்களுக்குக் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். பொது இடத்தில் அரங்கேறிய இந்த வன்முறைச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியையும் அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியது.
காவல் துறை அதிரடிப் பாய்ச்சல்
அச்சமயம் அப்பகுதியில் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த பாலையூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விடுத்த வெற்றிவேலின் செயல்களை நேரில் கண்டார். உடனடியாக இது குறித்து அவர் பாலையூர் காவல் நிலையத்தில் முறைப்படி புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், ரௌடி வெற்றிவேல் மீது காவல் துறையினர் உடனடியாகக் குற்ற வழக்குப் பதிவு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து, பாலையூர் காவல் ஆய்வாளர் கரிகாற்சோழன் இந்த வழக்கின் புலன் விசாரணையைத் தீவிரமாக மேற்கொண்டார். பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்த சரித்திரப் பதிவேடு குற்றவாளியான வெற்றிவேலைக் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மாவட்ட ஆட்சியர் அதிரடி உத்தரவு
சிறையில் அடைக்கப்பட்ட பின்னரும், எதிரி வெற்றிவேல் தொடர்ந்து பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையிலேயே செயல்பட்டு வருவதைக் காவல் துறையினர் கவனித்தனர். இதனால், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் இவரைத் தொடர்ந்து சுதந்திரமாக நடமாடவிட்டால் பொதுமக்களின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை உணர்ந்த மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. B. சினேஹா ப்ரியா, வெற்றிவேல் மீது கடுமையான குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப் பரிந்துரை செய்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் விரிவான பரிந்துரை அறிக்கையை ஆய்வு செய்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர், பொதுமக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வெற்றிவேலைத் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
கடலூர் மத்திய சிறையில் அடைப்பு
மாவட்ட ஆட்சியரின் உத்தரவைத் தொடர்ந்து, நேற்று (07.07.2026) பாலையூர் காவல் ஆய்வாளர் கரிகாற்சோழன் தலைமையிலான காவல் ஆளிநர்கள், பலத்த பாதுகாப்புடன் குற்றவாளி வெற்றிவேலை கடலூர் மத்திய சிறைக்குக் கொண்டு சென்று அங்கு அடைத்தனர்.
நடப்பாண்டில் 19 பேர் மீது பாய்ந்தது குண்டாஸ்!
மயிலாடுதுறை மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கைப் பேணிக் காக்கவும், குற்றச் செயல்களை முற்றிலும் ஒடுக்கவும் மாவட்ட காவல் துறை தீவிரமாகச் செயலாற்றி வருகிறது. அதன்படி, நடப்பு ஆண்டில் மட்டும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்த மற்றும் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது.
அதன் புள்ளிவிவர விவரம்கள்
* கொலைக் குற்றச் சம்பவங்கள் - 02 நபர்கள்
* பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்தல் - 08 நபர்கள்
* மதுவிலக்குக் குற்றங்கள் - 06 நபர்கள்
* கஞ்சா விற்பனை மற்றும் கடத்தல் - 02 நபர்கள்
* பாலியல் குற்றங்கள் - 01 நபர்
மொத்த எண்ணிக்கை - 19 நபர்கள்
மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 19 சமூக விரோதிகள் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் ஓராண்டு சிறைத் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
எஸ்பி Dr. B. சினேஹா ப்ரியா கடும் எச்சரிக்கை
மயிலாடுதுறை மாவட்டத்தில் சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் நபர்களின் செயல்பாடுகள் அனைத்தும் காவல் துறையினரால் மிகத் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் அச்சமின்றி வாழும் சூழலை உருவாக்குவதே காவல் துறையின் முதன்மை நோக்கம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரௌடிசத்தில் ஈடுபடும் நபர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோர், கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனை செய்பவர்கள், மற்றும் மதுவிலக்குக் குற்றங்களில் ஈடுபடுவோர் யாராக இருந்தாலும் அவர்கள் மீது எவ்விதத் தாட்சண்யமும் இன்றி குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr. B. சினேஹா ப்ரியா மிகக் கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Before You Go
விசாரணை கைதி மரணம் ”அடிச்சே கொன்னுட்டாங்க” பகீர் கிளப்பும் குடும்பத்தினர்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























