பெற்ற பிள்ளையா? கள்ளக்காதலா? 3 வயது மழலையின் அழுகுரலுக்கு நேர்ந்த கொடூர முடிவு!
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 3 வயது குழந்தையை கொலை செய்துவிட்டு, பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக நாடகமாடிய தாயும், அவரது கள்ளக்காதலனும் சிசிடிவி ஆதாரங்கள் மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த மூன்று வயது ஆண் குழந்தையை அடித்துக் கொலை செய்துவிட்டு, பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக நாடகமாடிய தாயையும், அவருடைய கள்ளக்காதலனையும் செம்பனார்கோவில் காவல் துறையினர் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்த கொடூரச் சம்பவம் மாவட்ட மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
காதல் திருமணம் டூ கள்ளக்காதல்
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி தாலுக்கா, ஆலவேலி கிராமம் காளியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் கனிவண்ணன் (31). கூலித்தொழிலாளியான இவரும், அதே பகுதியைச் சேர்ந்த கவிப்பிரியா (25) என்பவரும் காதலித்து கடந்த 2020-ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தற்போது 6 வயதிலும் மற்றும் 3 வயதிலும் இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு முன்பாக, கவிப்பிரியாவுக்கு மயிலாடுதுறையை அடுத்த அரிவேளூர் கிராமத்தைச் சேர்ந்த அபினேஷ் (30) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அபினேஷ் தனியார் நுண்கடன் நிதி நிறுவனம் (Microfinance) ஒன்றில் மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான பணம் வசூல் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தார். கவிப்பிரியா குழுக்கடன் வசூல் செய்யச் செல்லும்போது இருவருக்குள்ளும் ஏற்பட்ட நட்பு, நாளடைவில் கவிப்பிரியாவின் திருமணத்திற்குப் பிறகும் தொடர்ந்துள்ளது. காலப்போக்கில் இது கள்ளத்தொடர்பாக மாறியதாகக் கூறப்படுகிறது.
குடும்பத் தகராறும் பிரிவும்
மனைவியின் கள்ளக்காதல் விவகாரம் கணவர் கனிவண்ணனுக்குத் தெரியவரவே, தம்பதியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் கணவனுடன் வாழப் பிடிக்காத கவிப்பிரியா, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு கணவரைப் பிரிந்து சென்றார்.
அவர் ஆக்கூர் பாரதி வீதியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். கணவரைப் பிரிந்து தனியாக வசித்ததால், கவிப்பிரியாவின் வீட்டிற்கு அபினேஷ் அடிக்கடி வந்து சென்றுள்ளார். அங்கு இருவரின் கள்ளக்காதல் எவ்வித தடையும் இன்றி நீடித்து வந்துள்ளது.
பாத்ரூமில் விழுந்ததாக அரங்கேறிய நாடகம்
நிலைமை இவ்வாறு இருக்க, கடந்த ஜூன் மாதம் 25-ஆம் தேதி கவிப்பிரியா தனது 3 வயது இளைய மகனை பலத்த காயங்களுடன் மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தார். அங்கு இருந்த மருத்துவர்களிடம், குழந்தை பாத்ரூமில் விளையாடிக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக வழுக்கி விழுந்து தலையில் பலத்த அடிபட்டதாகக் கூறியுள்ளார்.
குழந்தையின் நிலைமை மோசமாக இருந்ததால், முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தை அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும், சிகிச்சை பலனின்றி கடந்த ஜூன் 29-ஆம் தேதி காலை 10 மணியளவில் அந்த 3 வயது குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
போலீசாரின் சந்தேகம் மற்றும் சிசிடிவி ஆதாரம்
தன் மகனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, கவிப்பிரியாவின் கணவர் கனிவண்ணன் செம்பனார்கோவில் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில், போலீசார் சந்தேக மரணம் (ஆரம்பக்கட்ட வழக்கு) எனப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கினர். ஜூன் 30-ஆம் தேதி குழந்தையின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.
இதற்கிடையில், செம்பனார்கோவில் போலீசார் தாய் கவிப்பிரியா மற்றும் அவரது கள்ளக்காதலன் அபினேஷ் ஆகிய இருவரையும் பிடித்து காவல் நிலையம் அழைத்து வந்து தனித்தனியாக கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது அபினேஷ், "சம்பவம் நடந்த அன்று நான் அந்த ஊரிலேயே இல்லை, வெளியூரில் வேலை விஷயமாகச் சென்றிருந்தேன்" என்று கூறி தப்பிக்க முயன்றார். ஆனால், சந்தேகம் அடைந்த போலீசார் அக்குடியிருப்புப் பகுதியில் இருந்த சிசிடிவி (CCTV) கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், குழந்தை காயமடைந்ததாகக் கூறப்படும் நேரத்தில் அபினேஷ், கவிப்பிரியாவின் வீட்டிற்குள் செல்லும் காட்சிகளும், அங்கேயே இருந்ததற்கான ஆதாரங்களும் மிகத் தெளிவாகக் கிடைத்தன.
வாக்குமூலமும் கொடூரக் கொலையும்
இதையடுத்து, சிசிடிவி ஆதாரங்களை முன்வைத்து போலீசார் நடத்திய அதிரடி விசாரணையில், இருவரும் உண்மையை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்தனர். சம்பவத்தன்று கவிப்பிரியா வீட்டின் கீழே தண்ணீர் எடுப்பதற்காகச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் இருந்த 3 வயது குழந்தை தனது தாயைக் காணாமல் தொடர்ந்து அழுது, அடம் பிடித்துக் கொண்டே இருந்துள்ளது. இதனால் கள்ளக்காதலர்களுடன் தனிமையில் இருக்க முடியாமலும், குழந்தையின் அழுகுரலாலும் ஆத்திரமடைந்த அபினேஷ், குழந்தையை கொடூரமாகப் பிடித்து கீழே தள்ளியுள்ளார். இதில் நிலைதடுமாறிய குழந்தை அங்கிருந்த சுவற்றில் பலமாக மோதியுள்ளது. சுவற்றில் தலை மோதிய வேகத்தில் குழந்தைக்கு தலையின் உட்பகுதியில் பலத்த உள்காயம் ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளது.
வெளியே சென்ற கவிப்பிரியா உள்ளே வந்து பார்த்தபோது குழந்தை மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உடனே தங்களின் கள்ளக்காதல் விவகாரமும், கொலையும் வெளியில் தெரிந்துவிடும் என்ற பயத்தில், இருவரும் சேர்ந்து நாடகமாடத் திட்டமிட்டுள்ளனர். அதன்படியே, குழந்தை பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாகக் கூறி மருத்துவமனையில் சேர்த்தது அம்பலமானது.
நீதிமன்றக் காவல் மற்றும் சிறையிலடைப்பு
இந்த அதிர்ச்சி வாக்குமூலத்தைத் தொடர்ந்து, செம்பனார்கோவில் போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக (Murder Case) மாற்றம் செய்தனர். கவிப்பிரியா மற்றும் அபினேஷ் ஆகிய இருவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். பின்னர், திருச்சம்பள்ளியில் உள்ள தரங்கம்பாடி நீதிமன்றத்தில் இருவரையும் போலீசார் ஆஜர்படுத்தினர். வழக்கை விசாரித்த நீதிபதி இருவரையும் காவலில் வைக்க உத்தரவிட்டார். இதையடுத்து கவிப்பிரியா திருச்சி பெண்கள் சிறையிலும், அபினேஷ் கடலூர் மத்திய சிறையிலும் பலத்த பாதுகாப்புடன் அடைக்கப்பட்டனர்.
Before You Go
Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























