விவசாயிகள் கவனத்திற்கு! வேளாண் அடுக்ககம் திட்டத்தில் பதிந்தால் மட்டுமே பி.எம்.கிசான் பணம் - ஆட்சியர் ஸ்ரீகாந்த் எச்சரிக்கை.
மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் பி.எம்.கிசான் மற்றும் பயிர்க்காப்பீடு பலன்களைத் தொடர்ந்து பெற உடனடியாகப் வேளாண் அடுக்ககம் திட்டத்தி பதிவு செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

மயிலாடுதுறை: தமிழக அரசின் முன்னோடித் திட்டமான 'வேளாண் அடுக்ககம்' (Agri Stack) திட்டத்தின் கீழ் மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் விரைந்து பதிவு செய்ய வேண்டும் என்றும், இதில் இணையாதவர்களுக்கு வரும் காலங்களில் அரசு நலத்திட்ட உதவிகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்றும் மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், எச்சரிக்கை விடுத்துள்ளார்.
வேளாண் அடுக்ககம் (Agri Stack) - திட்டம்
விவசாயிகள் அரசின் பல்வேறு நலத்திட்டங்களைப் பெறுவதற்குத் தங்களது நில உடைமை விவரங்கள், சிட்டா, பட்டா மற்றும் பயிர் சாகுபடி அறிக்கை போன்ற ஆவணங்களை ஒவ்வொரு முறையும் அரசு அலுவலகங்களில் நேரில் சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு வீண் அலைச்சலும், காலதாமதமும் ஏற்படுவதுடன், திட்டப்பலன்கள் உரிய நேரத்தில் கிடைப்பதிலும் சிக்கல்கள் நீடிக்கின்றன.
இந்த நடைமுறைச் சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், அனைத்து விவசாயிகளின் விவரங்களையும் மின்னணு முறையில் ஒரே தளத்தில் சேகரிக்கத் தமிழக அரசு 'வேளாண் அடுக்ககம்' திட்டத்தைச் செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் ஒவ்வொரு விவசாயிக்கும் ஒரு 'தனித்துவ அடையாள எண்' (Unique ID) வழங்கப்படும். இதன் மூலம் வருங்காலத்தில் விவசாயிகள் எந்த ஒரு ஆவணத்தையும் மீண்டும் மீண்டும் சமர்ப்பிக்கத் தேவையில்லை.
மயிலாடுதுறை மாவட்ட நிலவரம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதில் மாவட்ட நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, மாவட்டத்தில் இதுவரை 22,781 பட்டாதாரர்கள் மட்டுமே இத்திட்டத்தில் தங்களது விவரங்களைப் பதிவேற்றம் செய்துள்ளனர்.
துரதிர்ஷ்டவசமாக, இன்னும் 30 சதவீதத்திற்கும் அதிகமான விவசாயிகள் இத்திட்டத்தில் இணையாமல் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கால அவகாசம் வழங்கப்பட்டும், போதிய விழிப்புணர்வு இல்லாத காரணத்தாலோ அல்லது மெத்தனப் போக்காலோ இன்னும் கணிசமான விவசாயிகள் விடுபட்டுள்ளனர். இது வரும் நிதியாண்டில் அவர்களுக்குக் கிடைக்க வேண்டிய மானியங்கள் மற்றும் உதவித்தொகைகளைத் தடுக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.
பதிவு செய்யத் தேவையான ஆவணங்கள்
விடுபட்ட விவசாயிகள் உடனடியாகப் பின்வரும் ஆவணங்களுடன் தங்களைப் பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
* நில உடைமை ஆவண விவரங்கள் (பட்டா/சிட்டா).
* ஆதார் எண்.
* ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்.
* ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட கணிணி சிட்டா நகல்.
எங்கே, எப்படிப் பதிவு செய்வது?
விவசாயிகளின் வசதிக்காகப் பல்வேறு வழிமுறைகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது.
*கிராம நிர்வாக அலுவலகம்: தத்தம் கிராமங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை கள அலுவலர்களைக் கிராம நிர்வாக அலுவலகத்தில் (VAO Office) நேரில் சந்தித்துப் பதிவு செய்யலாம்.
* சிறப்பு முகாம்கள்: ஊராட்சி மன்ற அலுவலகங்கள் மற்றும் கிராம நிர்வாக அலுவலகங்களில் வேளாண்மை உழவர் நலத்துறை மூலம் நடத்தப்படும் சிறப்பு முகாம்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
* பொது சேவை மையங்கள் (CSC): விவசாயிகள் தங்களுக்கு அருகிலுள்ள பொது சேவை மையங்களுக்குச் சென்றும் எவ்விதக் கட்டணமுமின்றித் தங்களது விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம்.
PM-KISAN மற்றும் பயிர்க்காப்பீட்டுத் திட்டத்திற்கு கட்டாயம்!
இந்தத் திட்டத்தில் இணைவது வெறும் விருப்பமல்ல, இது ஒரு கட்டாயத் தேவையாக மாற்றப்பட்டுள்ளது. வரும் 2025-26-ஆம் நிதி ஆண்டு முதல், பிரதம மந்திரி விவசாயிகள் கௌரவ நிதித் திட்டத்தின் (PM-KISAN) கீழ் வழங்கப்படும் ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதி உதவியைத் தடையின்றிப் பெற 'வேளாண் அடுக்ககம்' பதிவு அவசியம்.
அடுத்த தவணைத் தொகை, இத்திட்டத்தில் இணைந்து தனித்துவ அடையாள எண் பெற்ற விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்படும் எனத் திட்டவட்டமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பிரதம மந்திரி பயிர்க் காப்பீடுத் திட்டம் (PMFBY) மற்றும் மாநில அரசின் இதர மானியத் திட்டங்களுக்கு இந்தத் தேசிய அளவிலான அடையாள எண் மிகவும் அவசியமாகும்.
ஆட்சியரின் வேண்டுகோள்
இது குறித்து மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த் விடுத்துள்ள அறிக்கையில், "அரசின் திட்டங்கள் விவசாயிகளைச் சரியாகச் சென்றடைவதை உறுதி செய்யவே இந்த மின்னணுத் தரவுத் தளம் உருவாக்கப்படுகிறது. எனவே, மயிலாடுதுறை மாவட்ட விவசாயிகள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பைப் பயன்படுத்தி, எவ்விதக் கட்டணமுமின்றித் தங்களது விவரங்களை உடனடியாகப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் இடைத்தரகர்கள் இன்றி, விரைவாகவும் வெளிப்படையாகவும் அரசின் சலுகைகளைப் பெற முடியும்" என அன்புடன் கேட்டுக்கொண்டுள்ளார்.
நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அனைத்து விவசாயிகளும் இத்திட்டத்தில் இணைந்து, தடையற்ற அரசு உதவிகளைப் பெற்றுப் பயன்பெறுமாறு வேளாண்மைத்துறை அதிகாரிகளும் அறிவுறுத்தியுள்ளனர்.
























