சீர்காழியில் பரபரப்பு: நகராட்சி அலுவலகத்தில் தரையில் அமர்ந்து அதிமுகவினர் தர்ணா! பின்னணி என்ன?
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகராட்சி தேர் வீதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி அதிமுகவினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சீர்காழி: மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி நகராட்சியில் தேர் ஓடும் நான்கு வீதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றிவிட்டு மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி, அதிமுகவினர் நகராட்சி அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ரூ. 2.06 கோடி மதிப்பிலான வடிகால் பணி
சீர்காழி நகராட்சியின் முக்கிய அடையாளமாகத் திகழ்வது சட்டைநாதர் சுவாமி திருக்கோவில். இக்கோவிலைச் சுற்றியுள்ள தேர் வடக்கு வீதி, தெற்கு வீதி, மேல வீதி மற்றும் கீழ வீதி ஆகிய நான்கு வீதிகளும் ஆன்மீக ரீதியாகவும், போக்குவரத்து ரீதியாகவும் மிக முக்கியமானவை. இந்தப் பகுதிகளில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்கும் பொருட்டு, மழைநீர் வடிகால் அமைக்கும் பணிக்காகத் தமிழக அரசு சார்பில் ரூ. 2 கோடியே 6 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
இதற்கான முதற்கட்டப் பணிகள் கடந்த சில வாரங்களாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன. தற்போது வடக்கு வீதியில் பணிகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில், அங்குள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் பணிகள் மேற்கொள்ளப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.
அதிமுகவினரின் குற்றச்சாட்டு
இந்நிலையில், அதிமுக நகரக் கழகச் செயலாளர் சுரேஷ் தலைமையில், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் திடீரென சீர்காழி நகராட்சி அலுவலகத்திற்குத் திரண்டு வந்தனர். அப்போது கூறுகையில்
ஆக்கிரமிப்பு அகற்றப்பட வேண்டும்:
தேர் வடக்கு வீதியில் தனிநபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் செய்துள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றாமலேயே வடிகால் பணிகள் நடைபெறுகின்றன. இதனால் வடிகால் கால்வாயின் அகலம் குறைந்து, வருங்காலத்தில் மழைநீர் தடையின்றிச் செல்வதில் சிக்கல் ஏற்படும்.
போக்குவரத்து நெரிசல்: ஆக்கிரமிப்புகள் அப்படியே இருப்பதால், தற்போது நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளால் தேர் வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இது பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் பெரும் இடையூறாக உள்ளது.
வார்டு குறைகள்: குறிப்பாக 6 மற்றும் 7-வது வார்டுகளில் கழிவுநீர் முறையாக வெளியேற வழியில்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதாரச் சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளதால், அதனைச் சரிசெய்ய உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். என கோரிக்கை வைத்து போராட்டத்தில் குதித்தனர்.
அலுவலக வளாகத்தில் தர்ணா
நகராட்சி நிர்வாகத்தின் மெத்தனப் போக்கைக் கண்டித்து, அதிமுக நகரக் கழகச் செயலாளர் சுரேஷ், நகர்மன்ற உறுப்பினர்கள் ரமாமணி, ராஜேஷ், கிருஷ்ணமூர்த்தி, நகரப் பொருளாளர் செந்தில்குமார் மற்றும் ஏராளமான தொண்டர்கள் நகராட்சி அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்தப் போராட்டத்தின் போது, நகராட்சி நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. "ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அவசர கதியில் பணிகளை மேற்கொள்வது யாருக்காக?" என்ற கேள்விகளையும் அவர்கள் எழுப்பினர். இதனால் நகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பதற்றமான சூழல் நிலவியது.
ஆணையர் உறுதி மற்றும் சமாதானம்
போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, சீர்காழி நகராட்சி ஆணையர் சசிகுமார் அதிமுக நிர்வாகிகளை நேரில் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, நகரச் செயலாளர் சுரேஷ் மற்றும் நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை மனுவை ஆணையரிடம் அளித்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட ஆணையர் சசிகுமார் கூறியதாவது:
"தேர் வீதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து விரிவான ஆய்வு செய்யப்படும். ஆக்கிரமிப்புகள் ஏதேனும் கண்டறியப்பட்டால், அவை பாரபட்சமின்றி அகற்றப்படும். பொதுமக்களின் போக்குவரத்திற்கும், மழைநீர் வடிகாலுக்கும் எவ்வித இடையூறும் இன்றி பணிகள் தரமாக நடைபெறுவதை நகராட்சி உறுதி செய்யும். மேலும் 6 மற்றும் 7-வது வார்டுகளில் உள்ள கழிவுநீர் தேக்கப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணப் பொறியியல் பிரிவுக்கு உத்தரவிடப்படும்."
ஆணையரின் இந்த உறுதிமொழியை ஏற்றுக்கொண்ட அதிமுகவினர், தங்கள் தர்ணா போராட்டத்தைக் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
பொதுமக்கள் எதிர்பார்ப்பு
சீர்காழி நகரின் இதயமாக விளங்கும் தேர் வீதிகளில் நடைபெறும் இந்தப் பணிகள் முறையாக முடிக்கப்பட்டால் மட்டுமே, ஆண்டுதோறும் மழைக்காலங்களில் நகர் சந்திக்கும் வெள்ளப் அபாயத்தைத் தவிர்க்க முடியும். அரசியல் கட்சிகளின் இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றி விரைந்து பணிகளை முடிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்























