மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!
மயிலாடுதுறை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் குண்டரை சட்டத்தில் சிறையில் அடைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.

மயிலாடுதுறை அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 3 பேர் குண்டரை சட்டத்தில் சிறையில் அடைத்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட தடை செய்யப்பட்டுள்ள போதைப் பொருட்கள் விற்பனை அதிக அளவில் நடைபெற்று வருவதாக தொடர்ந்து காவல்துறையினருக்கு பல்வேறு புகார்கள். இந்த புகாரை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், ஆணைக்காரன்சத்திரம் காவல் சரக எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்பட்டு வருவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில், கடந்த 16.07.2026 அன்று ஆணைக்காரன்சத்திரம் காவல் துறையினர் புத்தூர், மதகடி புதுமண்ணி ஆற்றங்கரை அருகே தீவிர கஞ்சா வேட்டை மற்றும் சோதனை நடத்தினர். அப்போது, அப்பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 3 நபர்களை காவல்துறையினர் கையும் களவுமாகப் பிடித்து கைது செய்தனர்.
தொடர்ந்து அவர்களிடம் நடத்திய விசாரணையில் அப்பகுதியை சேர்ந்த ரமேஷ் என்பவரது மகன் 24 வயதான சுதர், கார்த்திகேயன் என்பவரது 18 வயதான கௌசிக் மற்றும் அன்பழகன் என்பவரது மகன் 22 வயதான அபில்குமார் என்பது தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கஞ்சா பொருட்கள் மற்றும் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் 3 குற்றவாளிகளையும் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை
கைது செய்யப்பட்ட மூவரும் தொடர்ச்சியாகக் கஞ்சா விற்பனை போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் அமைதியைக் கருத்தில் கொண்டு, அவர்கள் மீது தடுப்புக் காவல் சட்டத்தின் (குண்டர் சட்டம்) கீழ் நடவடிக்கை எடுக்க மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் Dr.சினேகா பிரியா மாவட்ட ஆட்சியருக்குப் பரிந்துரை செய்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் பரிந்துரையை ஏற்று, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் சுதர், கௌசிக் மற்றும் அபில்குமார் ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இவ்வுத்தரவின்படி, ஆணைக்காரன்சத்திரம் காவல் ஆய்வாளர் சுகுணா மற்றும் காவலர்கள் இணைந்து எதிரிகள் மூவரையும் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
நடப்பு ஆண்டில் தீவிர நடவடிக்கை
மயிலாடுதுறை மாவட்டத்தில் குற்றச் செயல்களைத் தடுக்கக் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, நடப்பு ஆண்டில் இதுவரை கொலை குற்றங்களில் ஈடுபட்ட 05 நபர்கள், பொது அமைதிக்குப் பங்கம் விளைவித்த 07 நபர்கள், மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபட்ட 06 நபர்கள், கஞ்சா விற்பனை குற்றங்களில் ஈடுபட்ட 09 நபர்கள், பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட 01 நபர், என மொத்தம் 28 நபர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
எஸ்பி எச்சரிக்கை
சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுபவர்களின் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் ரவுடிசத்தில் ஈடுபடுபவர்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்கள், கஞ்சா, தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மற்றும் மதுவிலக்கு குற்றங்களில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கடுமையாக எச்சரித்துள்ளார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்






















