மீண்டும் பொறுப்பேற்றார் மயிலாடுதுறை மாவட்ட முன்னாள் ஆட்சியர் மகாபாரதி..!
தமிழ்நாடு நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமை அதிகாரியாக மயிலாடுதுறை மாவட்ட முன்னாள் ஆட்சியர் மகாபாரதி பொறுப்பேற்றுக்கொண்டார்.

மயிலாடுதுறை மாவட்ட மக்களின் நன்மதிப்பை பெற்ற முன்னாள் ஆட்சியர் மகாபாரதி தமிழ்நாடு நீர்வடிப் பகுதி மேம்பாட்டு முகமை அதிகாரியாக பொறுப்பேற்றுள்ளார்.
மக்கள் நன்மதிப்பைப் பெற்ற ஆட்சியர்
தமிழ்நாட்டின் கடைசி 38வது மாவட்டமாக பிரிக்கப்பட்ட மயிலாடுதுறை மாவட்டத்தின் இரண்டாவது ஆட்சியராக திருவள்ளூர் துணை ஆட்சியராக பொறுப்பு வகித்த ஏ.பி.மகாபாரதி கடந்த 2023-ம் ஆண்டு பிப்ரவரி 5-ம் தேதி பொறுப்பேற்றார். பொறுப்பேற்ற நாள் முதல் சிறப்பாக பணியாற்றி மயிலாடுதுறை மாவட்ட மக்களின் நன்மதிப்பை பெற்ற ஆட்சியராக திகழ்ந்தார். மேலும் மக்கள் அனைவரும் எளிதில் அனுக கூடிய ஆட்சியராகவும் விளங்கினார்.
கல்விக்கு அதிமுக்கியத்துவம்
கடந்த இரண்டு ஆண்டுகளாக மயிலாடுதுறை மாவட்டத்தின் வளர்ச்சிக்கு பல்வேறு வகைகளில் செயல்பட்டு வந்தார். குறிப்பாக விவசாயம் மற்றும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, தொடர்ந்து பள்ளிகளில் ஆய்வு மேற்கொண்டு, மாணவர்களின் கல்வி திறன்குறித்து சோதனை செய்து கல்வியில் பின்தங்கிய மாணவர்களை முன்னேற்ற ஆசிரியர்களுக்கு அறிவுரைகளை வழங்கி வந்தார். பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்கவும் வழிவகை மேற்கொண்டார்.
மீண்டும் தங்கள் வாழ்வாதாரத்திற்கு வழி கிடைத்துவிட்டது.. சீர்காழியில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்
திடீர் மாற்றம்
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி திடீரென மாற்றப்பட்டார். அவருக்கு பதிலாக மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியராக ஈரோடு மாநகராட்சி ஆணையர் ஸ்ரீகாந்த் ஐஏஎஸ் பொறுப்பேற்றார். இந்த திடீர் அறிவிப்பு மயிலாடுதுறை மாவட்ட மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாற்றத்திற்கான காரணம்
சிறப்பாக செயல்பட்டு வந்த மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி மயிலாடுதுறையில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு மூலம் காவல் அலுவலர்களுக்கான போக்சோ சட்டம் குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு குறித்த ஒருநாள் திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் ஒன்றில் குழந்தைகளை எவ்வாறு கையாள்வது, தவறு செய்யும் மற்றும் பாதிப்புக்குள்ளாகும் குழந்தைகளின் இருதரப்பு சூழ்நிலை என்ன என்பதையும் அறிய வேண்டும், மேலும் குழந்தைகளுக்கு அனைத்து நற்பண்புகளையும் பெற்றோர் போதிக்க வேண்டும் என்ற கருத்தினை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சிறுமியை உதாரணம் காட்டி பேசினார். அவரது கருத்து யாரும் எதிர்பாராத விதமாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலர் கடும் கண்டனங்களை பதிவு செய்த நிலையில் அவர் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு, வேறு பொறுப்புகள் வழங்காமல் அரசு வைத்திருந்தது.
புதிய பொறுப்பு
இந்நிலையில், சென்னை ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தமிழ்நாடு நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமையின் துணைத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநராக மகாபாரதிக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது அவர் பொறுப்பேற்றுள்ளார். இதனை அறிந்த மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த அவரால் பயனடைந்த ஏழைய எளிய மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

