![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
தேனி: முழு கொள்ளளவான 71 அடியை எட்டிய வைகை அணை.. கரையோர மக்களுக்கு இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை
வைகை அணையின் உயரம் மொத்தம் 71 அடி. இதில் அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டும் போது முழு கொள்ளளவை எட்டியதாகக் கணக்கிடப்படுகிறது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையின் உயரம் மொத்தம் 71 அடி. இதில் அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டும் போது முழு கொள்ளளவை எட்டியதாகக் கணக்கிடப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 66 அடியை எட்டும்போது முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 68.50 அடியை எட்டும் போது இரண்டாவது கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும், 69 அடியை எட்டும் போது மூன்றாவது மற்றும் இறுதி கட்ட வெள்ள அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு அணையில் இருந்து உபரி நீர் திறக்கப்படுவது வழக்கம்.
Pongal 2024 Rasi Palan: தை பொங்கல் முதல் அமோகம்! 12 ராசிக்கார்களுக்கும் என்னென்ன பலன்?
தேனி மாவட்டத்தில் கடந்த டிசம்பர் மாத தொடக்கத்தில் பெய்த கனமழை காரணமாக வைகை அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் 70.50 அடி வரை உயர்ந்தது. பின்னர் நீர்மட்டம் சிறிது குறைந்த போதும், கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி முதல் ஜனவரி 4-ஆம் தேதி வரை நீர்மட்டம் 69 அடி முதல் 69.50 அடி வரை தொடர்ந்து நீடித்து வந்தது.ஜனவரி நான்காம் தேதி இரவு பெய்த தொடர் கனமழை காரணமாக வைகை அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3500 கன அடியாக அதிகரித்தது.
இதனால் ஜனவரி 5 ஆம் தேதி காலை வைகை அணையின் நீர்மட்டம் 70 அடியை கடந்தது. இந்த நிலையில் வைகை அணையின் நீர்மட்டம் 71 அடியை கடந்துள்ளது. இதனால் அணைக்கு வந்து கொண்டிருக்கும் நீரின் அளவானது வினாடிக்கு 3,104 கன அடி நீர் அப்படியே உபரி நீராக வைகை ஆற்றின் வழியாக வெளியேற்றப்படுகிறது. வைகை அணை வரலாற்றில் இதற்கு முன் ஆறு முறை மட்டுமே நீர்மட்டம் 71 அடியை எட்டியது. தற்போது ஏழாவது முறையாக நீர்மட்டம் 71 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக கடந்த 2008 ஆம் ஆண்டு வைகை அணையின் நீர்மட்டம் 71 அடியை எட்டியிருந்தது.
அதன் பின்னர் தற்போது 14 ஆண்டுகளுக்கு பின்னர் கடந்த 2022 டிசம்பர் மாதம் மீண்டும் 71 அடியை எட்டியது. அதன் பின்னர் 14 மாதங்கள் கழித்து மீண்டும் வைகை அணையின் நீர்மட்டம் 71 அடியை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. தொடர் கனமழை காரணமாக வைகை அணையின் நீர்மட்டம் இந்த ஆண்டு 3 வது முறையாக 70 அடிக்கும் மேலாக உயர்ந்த நிலையில், தற்போது 71 அடியாக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து மாவட்டங்களில் உள்ள கரையோர மக்களுக்கு இறுதிக்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வைகை ஆற்றில் இறங்கவோ,குளிக்கவோ துணி துவைக்கவோ தடை விதிக்கப்படுவதாக பொதுப்பணித்துறையினர் அறிவித்துள்ளனர். வைகை அணையின் நீர் இருப்பு 6100 மில்லியன் கன அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)