கோயில் முறைகேடுகள் குறித்து அதிரடி எச்சரிக்கை: யாராக இருந்தாலும் நடவடிக்கை உறுதி - அமைச்சர் ரமேஷ்
கோயில்களில் இடைத்தரகர்கள் முற்றிலும் ஒழிக்கப்படுவார்கள்,கடந்தகால முறைகேடுகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் - இந்து அறநிலைத்துறை அமைச்சர் ரமேஷ் பேட்டி.
கோயில்களில் தரிசன வசதிகளை மேம்படுத்தவும், இடைத்தரகர்கள் மூலம் நடைபெறும் முறைகேடுகளை முற்றிலுமாக ஒழிக்கவும் அரசு தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ரமேஷ், தற்போது பல கோயில்களில் பக்தர்களின் ஆன்மிகத் தேவைகளை விட வணிகச் செயல்பாடுகளே அதிக முக்கியத்துவம் பெறும் நிலை உருவாகியுள்ளதாகக் கூறினார். மன அமைதிக்காகவும் இறைவனை தரிசிப்பதற்காகவும் வரும் ஏழை மற்றும் விளிம்புநிலை மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல்வேறு புதிய திட்டங்களை அரசு செயல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.
கோயில்களில் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்த இணையவழி டோக்கன் முறை முழுமையாக மேம்படுத்தப்பட உள்ளதாக அவர் கூறினார். ஒவ்வொரு கோயிலின் கொள்ளளவுக்கு ஏற்ப ஒரு மணி நேரத்திற்கு எத்தனை பேர் தரிசனம் செய்யலாம் என்பது கணக்கிடப்பட்டு, அதற்கேற்ப இணையதளம் மூலம் டோக்கன்கள் வழங்கப்படும் என்றார். முதற்கட்டமாக முக்கிய கோயில்களில் இந்தத் திட்டம் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்பட்டு, பின்னர் மாநிலம் முழுவதும் உள்ள அறநிலையத்துறை கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும் என தெரிவித்தார்.
மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், ஆறு மாத கைக்குழந்தைகளுடன் வரும் தாய்மார்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தரிசனத்தில் முன்னுரிமை வழங்கப்படும் என்றும், இணைய வசதி பயன்படுத்தத் தெரியாத பொதுமக்கள் மற்றும் உள்ளூர் பக்தர்களின் நலன் கருதி கோயில்களிலேயே நேரடி டோக்கன் முன்பதிவு மையங்கள் அமைக்கப்படும் என்றும் கூறினார்.
இனிமேல் இடைத்தரகர்கள் மூலம் மொத்தமாக டோக்கன்கள் முன்பதிவு செய்யும் நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் எனத் தெரிவித்த அமைச்சர், வாட்ஸ்அப் மூலமாகவும் டோக்கன்களை எளிதாகப் பெறும் வசதி குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறினார்.
பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்கும்போது, சிலருக்கு மட்டும் தரிசன அனுமதி வழங்குவதற்காக இடைத்தரகர்கள் மூலம் சட்டவிரோதமாக பணம் வசூலிக்கும் ஊழல் நடைமுறைகள் முழுமையாக ஒழிக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
அதேபோல், அறநிலையத்துறை கோயில்களில் கடந்த காலங்களில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக விரிவான விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். அன்னதானத் திட்டங்கள், உண்டியல் வசூல், கோயில் தங்கத்தை உருக்கி நிலையான வைப்பு நிதியாக மாற்றிய விவகாரங்கள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் 360 டிகிரி கோணத்தில் ஆய்வு செய்யப்படுவதாகவும் கூறினார்.
இந்த விசாரணைகளின் மூலம் வெளிச்சத்துக்கு வரும் முறைகேடுகள் அனைத்தும் பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு வரப்படும் என்றும், இதில் ஈடுபட்டவர்கள் எவ்வளவு செல்வாக்கு மிக்கவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.
பல ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த கோயில் யானைகளுக்கான புத்துணர்ச்சி முகாமை மீண்டும் நடத்த முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
திருப்பரங்குன்றம் தொடர்பான விவகாரங்கள் குறித்து கட்சியின் நிலைப்பாட்டை முதலமைச்சரே அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என்றும், தாம் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாகவும் கூறினார்.
மேலும், தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர், வீரமங்கை வேலுநாச்சியார் மற்றும் அஞ்சலை அம்மாள் ஆகியோரின் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டே தமிழக வெற்றி கழகம் செயல்பட்டு வருவதாகவும், அந்தக் கொள்கைகளை ஏற்றுக்கொள்பவர்கள் மட்டுமே கட்சியில் இணைக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.
அரசு நீடிக்காது என்ற எதிர்க்கட்சிகளின் விமர்சனங்கள் குறித்து தங்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்றும், மக்கள் நலப் பணிகளை தொடர்ந்து முன்னெடுப்போம் என்றும் அமைச்சர் கூறினார். திருச்செந்தூரில் மேற்கொள்ளப்பட்டதுபோல் அனைத்து கோயில்களிலும் திடீர் ஆய்வுகள் தொடர்ந்து நடத்தப்படும் என்றும், முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
Before You Go
DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
ட்ரெண்டிங் செய்திகள்





















