மேலும் அறிய
சிவகங்கையில் 3000 ஆண்டு பழமையான பெருங்கற்கால கல்வட்டம், ஈமச்சின்னங்கள் கண்டுபிடிப்பு!
பெருங்கற்கால நினைவுச்சின்னங்கள் தென்னிந்திய இரும்புக்காலப் பண்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகக் கருதப்படுகின்றன.

ஈமச் சின்னங்கள் கண்டுபிடிப்பு.
Source : whatsapp
சிவகங்கை அருகே பிரவலூரில் கல்வட்டம் மற்றும் ஈமச் சின்னங்கள் கண்டுபிடிப்பு.
பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் மற்றும் கல்வட்டம் கண்டுபிடிக்கப்பட்டது
சிவகங்கை மாவட்டம், ஒக்கூர் அருகில் உள்ள பிரவலூர் கிராமத்தில் பெருங்கற்கால ஈமச்சின்னங்கள் மற்றும் கல்வட்டம் கண்டுபிடிக்கப்பட்டது. இக்கிராமத்தைச் சேர்ந்த அழகப்பா அரசுக் கலைக் கல்லூரியின் முன்னாள் மாணவரும் பிரவலூர் கிராமத்தைச் சேர்ந்த சரவணன், அஜய் மற்றும் அவரது நண்பர்கள் மதிச்செல்வம், செந்தூர், பாலசுப்பிரமணியன், மணி ஆகியோர் அளித்த தகவலின் பேரில் அழகப்பா அரசு கலைக் கல்லூரியின் வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியர் முனைவர் வேலாயுதராஜா கள ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது.."
கல் மற்றும் கல் குவியல் அமைக்கப்பட்டது.
"பிரவலூர் கிராமத்தின் வடக்குப்பகுதியில், கடம்பன் குடி கண்மாய்க்கு தெற்குப் பகுதியில் பரந்துவிரிந்த ஒரு மேட்டுப்பகுதியும் அதன் அருகில் வறண்ட நிலையில் ஒரு ஓடையும் காணப்படுகிறது. அங்கு மேற்பரப்பில் ஏராளமான கல்வட்டங்களும், ஈமத்தாழிகளும் காணப்படுகின்றன. மண் அரிப்பு காரணமாக பெரும்பாலான ஈமத்தாழிகள் வெளியில் நன்கு தெரிகின்றன. மேலும் அதிகமான கல்வட்டங்களும், இரண்டு குத்துக்கற்களும் காணப்படுகின்றன. மேலும் ஆங்காங்கே உடைந்த கருப்பு–சிவப்பு நிறப் பானை ஓடுகளும், இரும்புக் கசடுகளும், குவார்ட்ஸ் வகைக் கற்களும் காணப்படுகின்றன. இவை மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால ஈமச் சின்னங்களாக இருக்க சாத்தியக்கூறுகள் உள்ளன. இறந்தவர்களைப் புதைத்த இடத்திலோ அல்லது அவரது எலும்புகளைப் புதைத்த இடத்திலோ பெரிய கற்களைக் கொண்டு எடுக்கப்பட்ட ஈமச்சின்னங்களை, பெருங்கல் சின்னங்கள் என கூறுகிறார்கள். ஏனெனில், பெருங்கற்காலத்தில் மனித எலும்புச் சிதைவுகள் மற்றும் கல்லறைப் பொருட்கள் பெரிய மண் பானைகளில் வைக்கப்பட்டு மூடியால் மூடப்படும். சில நேரங்களில் அதன் மேல் கல் மற்றும் கல் குவியல் அமைக்கப்பட்டது.
ஈமச்சின்னங்கள்
கல் திட்டை என்ற டால்மென், குழி அடக்கம், பானை அடக்கம் எனப்படும் முதுமக்கள் தாழி, சர்கோபகஸ் என்ற ஈமப்பேழை, பாறை வெட்டுக் கல்லறை, குடைக்கல் மற்றும் தொப்பிக்கல், மென்ஹிர் என்ற குத்துக்கல், ஆந்த்ரோமார்பிக் எனப்படும் மனித உருவக் கற்சிலை, கல்வட்டம் மற்றும் கற்குவை எனப் பல வழிகளில் இறந்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்ட ஈமச்சின்னங்கள் உள்ளன. இப்படித் தொன்மையான பெருங்கற்படைச் சின்னங்கள் தமிழகத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டவை உள்ளன. இவற்றில் நூற்றுக்கணக்கானவை அகழாய்வு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தின் ஆதிச்சநல்லூர், சானூர், கொடுமணல், தாண்டிக்குடி, பொருந்தல், மயிலாடும்பாறை போன்றவை அவற்றுள் குறிப்பிடத்தக்கவை. பெருங்கற்கால நினைவுச்சின்னங்கள் தென்னிந்திய இரும்புக்காலப் பண்பாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாகக் கருதப்படுகின்றன.
இரும்பை உருக்கிக் கருவிகள் செய்யப்பட்டிருக்கலாம்.
இங்கும் இரும்பை உருக்கிக் கருவிகள் செய்யப்பட்டிருக்கலாம். ஏனெனில் பிரவலூரில் உள்ள இப்பகுதியில் இரும்புக் கசடுகள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்பகுதிக்கு அருகிலேயே பெருங்கற்கால மக்களின் வாழ்விடப் பகுதியும் அமைந்திருக்க வாய்ப்புள்ளது. இவை குறித்து சிவகங்கை மாவட்டத் தொல்லியல் துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதால், இப்பகுதியில் விரிவான ஆய்வு செய்வதன்மூலம் மேலும் அதிக தகவல்கள் தெரிய வாய்ப்புள்ளது என அவர் தெரிவித்தார்.
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement

வினய் லால்Columnist
Opinion




















