கம்பம் அருகே சாலை விபத்தில் தீயில் கருகி உயிரிழந்த காவலர்
கம்பம் அருகே மோட்டார் சைக்கிலும் ஆம்னி பேருந்தும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் சின்னமனூர் காவல் நிலையத்தில் பணியாற்றிய முதல் நிலை காவலர் சம்பவ இடத்திலேயே தீயில் கருகி உயிரிழந்தார்.
தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து நேற்று இரவு 9.30 மணி அளவில் பெங்களூரு நோக்கி ஆம்னி பேருந்து ஒன்று புறப்பட்டது. அந்த பேருந்தில் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் சென்று கொண்டிருந்தனர். பேருந்தை உத்தமபாளையத்தை சேர்ந்த பீர்முகமது (45) என்பவர் ஓட்டிசென்றுள்ளார். உத்தமபாளையத்தை அடுத்த துர்க்கை அம்மன் கோவில் பகுதியில் அந்த பேருந்து 9.45 மணி அளவில் சென்று கொண்டிருந்தது.
இதேபோல் சின்னமனூர் காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்த ராமகிருஷ்ணன் (40) மோட்டார் சைக்கிளில் எதிரே வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆம்னி பேருந்தும், மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதிக்கொண்டன. இதில், மோட்டார் சைக்கிள் பேருந்தின் முன்பகுதியில் சிக்கியது. அதேபோல் மோட்டார் சைக்கிள் மோதிய வேகத்தில் பேருந்தின் முன்பகுதியில் இருந்த பெட்ரோல் டேங்கில் கசிவு ஏற்பட்டு, தீப்பிடித்தது.
அப்போது பேருந்தின் முன்பகுதி பற்றி எரிந்ததுடன், மோட்டார் சைக்கிளில் வந்த ராமகிருஷ்ணன் மீதும் தீப்பிடித்தது. இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். இதற்கிடையே பேருந்து தீப்பிடித்து எரிவதை பார்த்ததும் அதில் வந்த பயணிகள் அலறியடித்தபடி பேருந்தில் இருந்து வேகமாக இறங்கினர். இதனால் அவர்கள் உயிர் தப்பினர். டிரைவரும் சுதாரித்துக்கொண்டு பேருந்தில் இருந்து இறங்கினார். சிறிது நேரத்தில் பேருந்து முழுவதுமாக தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் உத்தமபாளையம் மற்றும் சின்னமனூர் போலீசார், தீயணைப்புத்துறையினரும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது தீயணைப்பு படையினர் தீப்பிடித்து எரிந்த பஸ் மீது தண்ணீரை அடித்தனர். சுமார் அரை மணி நேரம் போராடி பேருந்தில் எரிந்த தீயை அணைத்தனர்.
பின்னர் தீயில் கருகி உயிரிழந்த காவலர் ராமகிருஷ்ணனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் காவலர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. விபத்தில் இறந்த காவலர் ராமகிருஷ்ணனுக்கு திருமணமாகி மனைவி, 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்





















