மேலும் அறிய
"அப்பா" போன்று நல் உள்ளத்துடன் உதவி வாழ்த்திய முதலமைச்சர் - புதுமண தம்பதி நெகிழ்ச்சி
மீண்டும் மீண்டும் மெய்ப்பிக்கும் விதமாக இந்த மதுரை நிகழ்வானது நடைபெற்றுள்ளது என மணமகளின் தந்தை தெரிவித்தார்.

தம்பதிகளுக்கு வாழ்த்து கடிதம்
Source : whats app
கல்லூரிப் படிப்பு, அரசுப் பணி, திருமண வாழ்த்து என மதுரையை சேர்ந்த கல்லூரி மாணவிக்கு "அப்பா" போன்று நல் உள்ளத்துடன் உதவி வாழ்த்திய தமிழ்நாடு முதலமைச்சர் - நெகிழ்ச்சியடைந்து நன்றி தெரிவித்த புதுமண தம்பதி.
முதல்வருக்கு கடிதம் எழுதிய மாணவி
மதுரை மாவட்டம் திருவேடகத்தைச் சேர்ந்த மனோகரன் முருகேஸ்வரி தம்பதிக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் சோபனா 12-ஆம் வகுப்பு முடித்தவுடன் தான் கல்லூரி சேர்ந்து படிப்பதற்கு பண வசதியில்லாமல் ஏழ்மை நிலையில் இருப்பதாக தமிழ்நாடு முதல்வருக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு கடிதம் எழுதினார். மாணவியின் கடிதத்தை கனிவுடன் பரிசீலித்து, முதலமைச்சர் , மாணவி செல்வி. சோபனாவிற்கு
மதுரை – மீனாட்சி அரசினர் மகளிர் கல்லூரியில் பி.பி.ஏ. பட்டப்படிப்பு பயில நடவடிக்கை எடுத்தார். இதனையடுத்து உதவிய தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை சென்னையில் நேரில் வந்து சந்தித்து நன்றி தெரிவிப்பதற்கு தன்னிடம் பணவசதி இல்லை என்று மீண்டும் முதல்வருக்கு கடிதம் மூலம் தெரிவித்தார்.
அரசுப் பணிக்கு தேர்வாகி பணிபுரிந்து வருகிறார்
பல்வேறு அரசு திட்டப் பணிகளின் ஆய்வுப் பணிக்காக முதலமைச்சர் (29.10.2021) மதுரைக்கு வருகை தந்த போது, அரசு வாகனத்தை திருவேடகம் கிராமத்திற்கு அனுப்பி வைத்து, மாணவி செல்வி ஷோபனா மற்றும் அவரது பெற்றோரை மதுரை அரசு விருந்தினர் மாளிகைக்கு வரவழைத்து, அம்மாணவிக்கு பட்டப் படிப்பிற்கான புத்தகங்கள், புத்தகைப்பை, கல்வி உபகரணங்கள் மற்றும் நிதியுதவி வழங்கி, முதலமைச்சர் அவர்கள் வாழ்த்தினார். இதைத் தொடர்ந்து கல்லூரி படிப்பை முடித்த பின்னர் மதுரை தொழிலாளர் நலத்துறையின் அலுவலகத்தில் அரசுப் பணிக்கு தேர்வாகி பணிபுரிந்துவருகிறார்.
திருமண நிகழ்வு
இந்த நிலையில் மதுரையை சேர்ந்த ஒப்புளிராஜன் மகன் வீரமணி கார்த்திக் என்பவருடன் சோபானாவிற்கு திருமண நிச்சயமானது. இதனையடுத்து திருமண பத்திரிக்கையை முதலமைச்சருக்கு நேரில் சென்று வழங்கி திருமணத்திற்கு அழைத்தார் சோபனா மற்றும் அவரது குடும்பத்தினர். இதனைத்தொடர்ந்து இன்று சோபனா - வீரமணி கார்த்திக் திருமணம் மதுரை தல்லாகுளம் பூங்கா முருகன் கோயிலில் நடைபெற்றது. இந்த திருமணத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சோபனா - வீரமணி கார்த்திக் தம்பதியினருக்கு திருமணம் வாழ்த்து செய்தி அனுப்பிவைத்தார். இதையடுத்து பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி முதலமைச்சர் உத்தரவுபடி நேரில் சென்று திருமணத்தை நடத்திவைத்தார். பின்னர் திருமண வாழ்த்து மடலை மணமக்களிடம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
வாழ்த்து செய்தியை அனுப்பிய முதல்வர்
திருமணம் முடிந்த மணமகள் சோபனா கூறும் போது...,”எனக்கு கல்லூரி படிப்புக்கு உதவி செய்து வேலையும் கிடைக்க உதவி செய்த அப்பா முதலமைச்சர். தற்போது எனது திருமணத்திற்கு வாழ்த்து செய்தியை அமைச்சர் மூலம் கொடுத்து அனுப்பியது வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்வு. முதல்வர் ஐயா அவர்களுக்கும் அமைச்சர் ஐயா அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
இதனை தொடர்ந்து பேசிய சோபனாவின் தந்தை எனது மகளின் கல்லூரி படிப்பு முதல் தற்போது திருமணம் வரை அனைத்திற்கும் வாழ்த்து தெரிவித்து வாழ்க்கையில் உயர்வதற்கு காரணமாக இருந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்வதாக கூறினார். தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவிக்கும் தந்தையாக, தாயுமானவராக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திகழ்ந்து வருகிறார். மீண்டும் மீண்டும் மெய்ப்பிக்கும் விதமாக இந்த மதுரை நிகழ்வானது நடைபெற்றுள்ளது” என தெரிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement




















