மேலும் அறிய
மதுரை: ஒத்தக்கடை முதல் திருமோகூர் வரை வேகத்தடை, CCTV கோரிக்கை! ஆட்சியர் பதில் அளிக்க உத்தரவு!
ஒத்தக்கடை அப்போலோ மருந்தகம் முதல் திருமோகூர் வரை வேகத்தடைகளை அமைப்பதோடு, சிசிடிவி கேமராக்களை பொருத்த உத்தரவிட வேண்டும். - என கோரிக்கை.

மதுரைக் கிளை
மதுரை ஒத்தக்கடை அப்போலோ மருந்தகம் முதல் திருமோகூர் வரை வேகத்தடைகளை அமைப்பதோடு, சிசிடிவி கேமராக்களை பொருத்தக் கோரிய வழக்கு. - வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர், பதில்மனு தாக்கல் செய்ய மதுரை அமர்வு உத்தரவு.
உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு
மதுரை ஒத்தக்கடையைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "மதுரை ஒத்தக்கடை பகுதியில் இருந்து திருமோகூர் வரை மருந்தகம் மற்றும் 23 குறுக்கு தெருக்கள் உள்ளன. ஏராளமான வங்கிகள், உணவகங்கள், ஹோட்டல்களும் அமைந்துள்ளன. இதனால் காலை மற்றும் மாலை நேரங்களில் சாலையை கடக்கவே மிகுந்த சிரமமான நிலை உள்ளது. முதியவர்கள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகள் பல மணி நேரம் சாலையைக் கடக்க காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. வாகனங்களும் அதிவேகமாக செல்வதால் எளிதாக சாலையை கடக்க இயலாத நிலை உள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன. வேகத்தடைகள் அமைக்கப்பட்டால் பிரச்னை ஓரளவிற்கு சரி செய்யப்படும். எனவே ஒத்தக்கடை அப்போலோ மருந்தகம் முதல் திருமோகூர் வரை வேகத்தடைகளை அமைப்பதோடு, சிசிடிவி கேமராக்களை பொருத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அரசு தரப்பில் சிசிடிவி கேமராக்களை பொருத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளை எதிர் மனுதாரர்களாக சேர்க்கவில்லை" என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், "மாவட்ட ஆட்சியர், நெடுஞ்சாலை துறையின் மண்டல பொறியாளர் ஆகியோர் எதிர்மனுதாரராக இருக்கும் நிலையில், மாவட்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை சிசிடிவி பொருத்துமாறு அறிவுறுத்தலாமே? என கேள்வி எழுப்பி, வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட ஆட்சியர், பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கை 6 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























