மேலும் அறிய
புதிய அம்ரித் பாரத் ரயில்: மதுரை வழியாக இயக்கப்படும் அதிநவீன ரயில்.. பயணிகளுக்கு காத்திருக்கும் வசதிகள் என்ன?
இந்த ரயில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க தகுதி உடையது. குலுங்கல் இல்லாமல் பயணத்தை இனிமையாக்கும் வகையில் ரயில் பெட்டி இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

அம்ரித் ரயில்
Source : whatsapp
மதுரை வழியாக இயக்கப்படும் திருவனந்தபுரம் - தாம்பரம் அம்ரித் பாரத் ரயில் சேவையை பிரதமர் துவக்கி வைத்தார்.
புதிய அம்ரித் பாரத் ரயில் சேவை
மதுரை வழியாக இயக்கப்படும் திருவனந்தபுரம் - தாம்பரம் புதிய அம்ரித் பாரத் ரயில் சேவையை வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) இன்று திருவனந்தபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். 22 பெட்டிகள் கொண்ட இந்த அம்ரித் பாரத் ரயிலில், வந்தே பாரத் ரயில் போல இருபுறமும் ரயில் பெட்டிகளுடன் இணைந்த இன்ஜின்கள் உள்ளன. இந்த ரயில் மணிக்கு 130 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க தகுதி உடையது. குலுங்கல் இல்லாமல் பயணத்தை இனிமையாக்கும் வகையில் ரயில் பெட்டி இணைப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. நவீன வசதியான இருக்கை மற்றும் படுக்கை வசதி அமைப்புகள், தண்ணீர் பாட்டில், மொபைல் போன் ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்திட நவீன வசதிகள், மடித்து வைக்கக் கூடிய சிறிய உணவு மேசை, ஒளி விளக்குகள், பொது அறிவிப்பு வசதி, படுக்கை வசதி பெட்டிகளில் இரவு நேரத்தில் எளிதாக நடக்கும் வகையில் ரேடியம் விளக்கு ஒளிரும் பட்டைகள் நடைபாதையில் அமைத்தது ஆகியவை முக்கிய சிறப்பு அம்சங்கள் ஆகும். நவீன துர்நாற்றம் வீசாத கழிப்பறைகள், அவற்றை காற்றாற்றல் மூலம் தண்ணீரை பீய்ச்சி அடித்து சுத்தம் செய்யும் வசதி போன்றவையும் கூடுதல் சிறப்பம்சங்கள். இரவு நேரத்தில் அவசர தேவைக்கு ரயில் பெட்டிக்கு வெளியே ஒளிரும் விளக்குகளும் உள்ளன.
வழக்கமான சேவை
இந்த ரயிலில் வழக்கமான சேவையில் தாம்பரத்தில் இருந்து புதன்கிழமை (ஜனவரி 28) துவங்குகிறது. அதன்படி தாம்பரம் - திருவனந்தபுரம் அம்ரித் பாரத் வாராந்திர சேவை ரயில் (16121) தாம்பரத்திலிருந்து புதன்கிழமைகளில் மாலை 05.00 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 08.00 மணிக்கு திருவனந்தபுரம் சென்று சேரும். மறு மார்க்கத்தில் திருவனந்தபுரம் தாம்பரம் அம்ரித் பாரத் வாராந்திர சேவை ரயில் (16122) வியாழக்கிழமைகளில் திருவனந்தபுரத்தில் இருந்து காலை 10.40 மணிக்கு புறப்பட்டு அன்று இரவு 11.45 மணிக்கு தாம்பரம் சென்று சேரும். இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், அரியலூர், ஸ்ரீரங்கம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி, வள்ளியூர், நாகர்கோவில் டவுன், குழித்துறை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரயிலில் 8 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 11 இரண்டாம் வகுப்பு பொதுப்பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பெட்டிகள், ஒரு சமையல் பெட்டி ஆகியவை இணைக்கப்படும். மதுரை ரயில் நிலையத்தில் அமிரித் பாரத் துவக்க நாள் சிறப்பு ரயில் வருகையின் போது மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா ஆய்வு செய்தார். அவருடன் முதுநிலை கோட்ட ரயில் இயக்க மேலாளர் ஆர்.சிவா முதுநிலைக்கோட்ட பொறியாளர் வி.சூரியமூர்த்தி, முதுநிலை கோட்ட வர்த்தக மேலாளர் டி. எல். கணேஷ் உட்பட உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மேலும் படிக்கவும்
Advertisement
Advertisement























