மதுரையில் ஜல்லிக்கட்டு: ஸ்கோர் போர்டு அறிமுகம்.. அமைச்சர் மூர்த்தி உறுதி, எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!
ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அழைப்பு - அமைச்சர் மூர்த்தி பேட்டி.

மதுரையில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு நடைபெறும் புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதன்முறையாக ஸ்கோர் போர்டு அறிமுகம் - அமைச்சர் மூர்த்தி உறுதி.
ஜல்லிக்கட்டு ஆலோசனைக் கூட்டம்
மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜனவரி 15 ஆம் தேதி அவனியாபுரத்திலும், 16 ஆம் தேதி பாலமேட்டிலும், 17 ஆம் தேதி அலங்காநல்லூரிலும் நடைபெறவுள்ளது. இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான முன்னேற்பாடுகள், பாதுகாப்பு பணிகள் உள்ளிட்டவைகள் குறித்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் பிரவீன்குமார் மற்றும் அமைச்சர் மூர்த்தி ஆகியோர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு கிராம கமிட்டியினர் மற்றும் அவனியாபுரம் கிராமத்தினர், மாநகர காவல் ஆணையர் லோகநாதன், மாநகராட்சி ஆணையாளர் சித்ரா விஜயன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை, வருவாய்த்துறை, காவல்துறை, கால்நடைத்துறை உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் பங்கேற்றனர்.
சிறிது நேரம் பரபரப்பு
மதுரை மாவட்டத்தில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளை பாதுகாப்பாக நடத்துவது குறித்தும், தேவையான முன்னேற்பாடுகள் குறித்தும் அனைத்துத்துறை அதிகாரிகளுடனான கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் பார்வையாளர்கள் கேலரி கூடுதல் படுத்த வேண்டும் எனவும் பார்வையாளர்கள் வருவதற்கான கூடுதலான நுழைவுப் பகுதிகள் அமைக்கப்பட வேண்டும் மற்றும் காயம் படக்கூடிய மாடுபிடி வீரர்களுக்கு உடனுக்குடன் சிகிச்சை அளிக்க ஸ்டெரக்சர் மூலமாக அனுப்புவதற்கான ஏற்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. ஆலோசனைக் கூட்டத்தில் பெயர் பட்டியலில் இல்லாத சிலரை கூட்டத்திற்குள் அனுமதித்ததாக கூறி காவல் துறையினருடன் ஒரு தரப்பினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
led திரை மூலம் ஸ்கோர் போர்டு
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது மதுரை மாவட்டத்தில் நடைபெறக்கூடிய புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஒவ்வொரு சுற்றுகளிலும் அந்தந்த சுற்றுகள் வாரியாக மாடுபிடி வீரர்களின் எண்ணிக்கை, அந்தந்த சுற்றுக்கான மாடுபிடி வீரர்களின் சீருடை எண், சுற்றுகள் வாரியாக களமிறங்கும் காளைகளின் எண்ணிக்கை குறித்து எல்இடி திரைகளில் வெளிப்படையாக வெளியிட வேண்டும் என தமிழ்நாடு ஜல்லிக்கட்டு நலச்சங்கத்தின் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர் மூர்த்தி வரவேற்க கூடிய கோரிக்கை என்பதால் இந்த ஆண்டு led திரை மூலம் ஸ்கோர் போர்டில் சுற்றுவாரியாக விவரங்கள் வெளியிடப்படும் எனவும் சிறந்த காளைகளுக்கான தேர்வு என்பது வருவாய்த் துறையினரே முடிவு செய்வார்கள் எனவும் உறுதியளித்தார்.
அமைச்சர் பேட்டி
ஆலோசனைக் கூட்டத்தினை தொடர்ந்து அமைச்சர் மூர்த்தி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது...,” சாதிய சமுதாய பாகுபாடின்றி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்துவது தான் திராவிட மாடல் முதலமைச்சரின் அரசு, கடந்த ஆண்டு போல எந்தவித பாகுபாடும் இன்றியும் ஜல்லிக்கட்டு போட்டி சிறப்பாக நடத்தப்படும், ஜல்லிக்கட்டு காளைகள் மாடுபிடி வீரர்களுக்கான டோக்கன்கள் எந்த வித பாகுபாடும் இன்றி விதிமுறைப்படி வழங்கப்படும், ஜல்லிக்கட்டு போட்டிகளை பார்வையிடுவதற்காக முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவு மற்றும் வழிகாட்டுதல்களை பின்பற்றி கடந்தாண்டை போலவே இந்த ஆண்டும் சிறப்பாக போட்டிகளை நடத்த ஆலோசிக்கப்பட்டுள்ளது என்றார்.





















