கொச்சின் நோக்கி சென்ற சரக்கு கப்பல் கவிழ்ந்து விபத்து.. விபத்து நடந்தது எப்படி?
தென்மேற்குப் பருவமழையின் காரணமாகக் கடலில் ஏற்பட்ட பாதகமான சூழலே இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த லைபீரியா நாட்டின் கொடியுடன் கூடிய ஒரு சரக்குக் கப்பல், அரபிக் கடல் பகுதியில் மூழ்கி விபத்துக்குள்ளானது. இந்தக் கப்பல் நேற்றிரவு 10 மணியளவில் கொச்சியை வந்தடைய திட்டமிடப்பட்டிருந்த நிலையில், இந்தத் துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்து நடந்தபோது கப்பலில் 24 பேர் இருந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்களில் 9 பேர் பாதுகாப்பு உடைகளை அணிந்து உயிர் தப்பியுள்ளதாகவும், மீதமுள்ளவர்களை மீட்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

லைபீரியா நாட்டைச் சேர்ந்த எம்.எஸ்.சி எல்சா-3 என்ற சரக்கு கப்பல் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த விழிஞ்ஞம் அதானி துறைமுகத்தில் இருந்து கடந்த 23-ம் தேதி கொச்சி துறைமுகத்துக்கு புறப்பட்டுச் சென்றது. நேற்று (சனிக்கிழமை) கொச்சி துறைமுகத்துக்கு அந்த கப்பல் சென்றடைந்திருக்க வேண்டும். ஆனால், கொச்சியில் இருந்து 38 நாட்டிக்கல் மைல் தொலைவில் அரபிக்கடலில் நேற்று மதியம் 1.25 மணியளவில் கப்பல் கடலில் கவிழ்ந்து விபத்தில் சிக்கியது.விபத்தைத் தொடர்ந்து கப்பலில் இருந்த கண்டெய்னர்கள் கடலில் விழுந்தன.
கப்பல் விபத்தில் சிக்கியது குறித்து கோஸ்ட் காட் மற்றும் கடற்படைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. கடற்படையின் ஒரு கப்பல் மற்றும் கோஸ்ட் காட்-க்கு சொந்தமான 2 கப்பல்களும் விபத்துக்குள்ளான கப்பல் அருகில் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டன. விபத்தில் சிக்கிய கப்பலில் இருந்து விழுந்த கண்டெய்னர்கள் கடலில் மிதக்கின்றன
மேலும், சிறிய ட்ரோன்கள் மூலம் விபத்துக்குள்ளான கப்பலின் மேல் பகுதி கண்காணிக்கப்பட்டது. கப்பலில் மொத்தம் 24 ஊழியர்கள் இருந்துள்ளனர். அவர்களில் 9 பேர் லைஃப் ஜாக்கெட் அணிந்துகொண்டு கடலில் குதித்து தப்பினர்.மீதமுள்ளவர்களை மீட்கும் பணியில் கடலோர காவல் படையான கோஸ்ட் காட் மற்றும் இந்திய கப்பற்படை ஆகியன களமிறங்கியுள்ளன. கடலில் குதித்த 9 பேர் உள்பட 21 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீத முள்ள 3 பேரும் கப்பலில் பாதுகாப்பாக இருப்பதாகவும். அவர்களை மீட்கும் முயற்சிகள் நடந்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் வீழ்ந்துள்ள கண்டெய்மர்களை கண்டால் அதன் அருகில் செல்லவோ, திறக்கவோ கூடாது என பேரிடர் மேலாண்மைக்குழு எச்சரித்துள்ளது.கடலில் செல்லும் மீனவர்களோ, அல்லது கரை ஒதுங்கும் கண்டெய்னர்களை பொதுமக்கள் கண்டாலோ உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அல்லது 112 என்ற எண்ணுக்கு அழைத்து தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும். கண்டெய்னர்களை திறக்க முற்படக்கூடாது. அவற்றை திறந்தால் உயிருக்கு ஆபத்தாகும் எனவும் பேரிடர் மேலாண்மை குழுவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தென்மேற்குப் பருவமழையின் காரணமாகக் கடலில் ஏற்பட்ட பாதகமான சூழலே இந்த விபத்திற்குக் காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்து குறித்து இந்திய கடலோர காவல்படை விடுத்துள்ள அறிக்கையில், "இந்திய கடலோர காவல்படையின் (ICG) கப்பல்கள் மற்றும் விமானங்கள் தொடர்ந்து நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகிறது. கப்பல் சாய்ந்திருப்பதால் சில கண்டெய்னர்கள் கடலில் விழுந்திருக்கின்றன. இதனால் ஏற்பட்டிருக்கும் ஆபத்து குறித்து மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது. கப்பலின் நிலைத்தன்மையை பராமரிக்க அனைத்து முயற்சிகளும் செய்யப்பட்டு வருகின்றன" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.






















